Thursday, December 27, 2007

நம்பவே முடியவில்லை

ஐம்பது வயதினிலே அரைக்கிழமாய்
நான் இன்று வரைகின்றேன் இக்கவிதை
என்னுள்ளே புதைந்து கிடக்கின்ற
எண்ணக்கிடக்கைகளை
அள்ளித் தெளிக்கின்றேன்
அன்பு கொண்டவரே கொஞ்சம் கேளுங்கள்

ஐம்பத்து நான்கினிலே அன்பான என் அம்மா
என்னைப் பெற்றேடுத்தாள் இப் பாரினிலே
என்க்கோர் தெய்வம் உண்டென்றால்
தெளிவாகச் சொல்கின்றேன் அது என் அம்மாதான்
என்னை விட்டு நீ பிரிந்தாய் இம் மண்ணை நீ துறந்தாய்
ஆனால்.......
என்னுள்ளே நீ இருக்கின்றாய் எனக்காக வாழ்கின்றாய்
உன்னை நித்தமும் நான் நினைக்கின்றேன்
உணர்வாயா என் அம்மா!

கண்டிப்பான என் அப்பா
கருணையிலும் நீ முதலிடம்தான்
உனக்காக வாழாது எமக்காக வாழ்ந்த
எனதருமை அப்பாவே உன்னைப்போல்
வாழ வழியொன்று தேடி அலைகின்றேன் நான் இங்கு......

ஐந்துடன் ஒன்று ஆறு சகோதரராய்
வாழ்ந்த அவ் வாழ்க்கை
அடி பிடி சண்டை போடுகின்ற நேரங்கள்
அன்புடன் அரவணைக்கும் அந்தக் காலங்கள்
கலகலவெனவே கேட்டிடும் சிரிப்பொலிகள்
அம்மா அடிக்கவர
அக்காமார் தடுக்கின்ற சில கணங்கள்
அந்தவொரு சந்தோசம்
அகிலத்தில் இனி எனக்கில்லை எந்நாளும்

முப்பதுரண்டினிலே முத்தான முழு நிலவாய்
முல்லை மலர்ச் சிரிப்புடனே
என் வாழ்க்கையில் இணைந்து கொண்டாள்
இதயத்துள் புகுந்து கொண்டாள்
அழகான அவள் சிரிப்பழகில்
என்னையே நான் மறந்திடுவேன்
மனைவியாய் நான் அவளை நினைத்துப் பார்க்கவில்லை
என் குழந்தையவள்....எனக்கோர்
நிகரில்லா நண்பியவள்
தாயில்லாக் குறையை தணிக்கும் தாரமவள்
கடுமையான நோயில் நான் தவித்துப் போகையிலே
உன் உள்ளத்து அன்பை
நான் முற்றாய் உணர்ந்து கொண்டேன்
உணவை ஊட்டிவிட்டாய் உன் கைகளினால்
உண்ணாவிரதம் பல இருந்தாய் என் மீட்புக்காய்
எனக்காக நீயே எல்லாம் செய்து தந்தாய்
ஆண்டவனே உனக்கு நன்றி கூறுகின்றேன்
இவளை எனக்கு நீ அளித்ததற்காய்...

அன்பான பிள்ளைகளை எண்ணிப் பார்க்கையிலே
அளவில்லா ஆனந்தம் என்னுள்ளே பொங்கியெழும்
குடும்பத்தின் குலவிளக்கே நீங்கள் தான்
கள்ளங்கபடமில்லா சிறுமிகள் நீர்
காலம் எங்கே போனாலும்
வயது ஏறிச் சென்றாலும்
சிறு குழந்தைகளே நீர் எனக்கு

விடலைப் பருவத்தே பெற்ற நண்பர்கள்
காலத்தால் அழியாத அவ் நினைவலைகள்
சந்தியிலே நாமிருந்து போட்ட சத்தங்கள்
நக்கலடித்துப் பாடிய பாட்டுக்கள்
பாடசாலையிலே பண்ணிய அட்டகாசங்கள்
மாங்காய் தேங்காய்
மதிலேறிப் பறித்த அநுபவங்கள்
களவாகக் கள்ளடித்த அந்தக் கூவங்கள்
கள்ளமாய்ப் பார்த்து
காதலுக்காய் ஏங்கிய காலங்கள்
மருத்துவக் கல்லூரியில் போட்ட கும்மாளங்கள்
எல்லாமே என் மனதுள்
பசுமையாய் பதிந்திருக்கும்

சிங்களப் பகுதியிலே வேலை செய்த நேரங்கள்
சிந்தையிலே என்றும் நிறைந்திருக்கும்
ஆண்கள் பெண்கள் கூடியமர்ந்து
அங்கே அரட்டை அடித்த அநுபவங்கள்
இன்னும் என் மனத்தில் இனிமையாய் ஓடி வரும்
மாலை தீவை மறக்கமுடியுமா என் வாழ்நாளில்
அன்பான மனைவியுடன் அளவில்லா மகிழ்ச்சியுடன்
ஒவ்வோர் நாளுமே அங்கே ஒவ்வோர் தேனிலவு
ஓமானில் வாழ்ந்த வருடங்கள்
புதிய நட்பினைப் புகுத்திய காலமது
நல்ல நண்பர்கள் உண்மை நண்பர்கள்
இன்றும் என்னுடன் உரையாடும் அன்பு உள்ளங்கள்
தந்த காலமிது....இனி வருமோ அக்காலம்

சுவீடன் நாட்டினிலே இருக்கின்ற இக்காலம்
அட்டகாசமில்லாத அமைதியான ஓர் காலம்
உதவிக்கு ஓடி வர ஊர்க்கார நண்பர்கள்
அக்கம்பக்கத்தே அரவணைக்கும்
எமது தமிழ் அன்பர்கள்
ஆபத்து என்று சொன்னால்
இங்கு தமிழினமே ஒன்று சேரும்
குடும்ப வாழ்க்கைக்கு
குறைவேதுமில்லை இந் நாட்டினிலே
வாழ்ந்துவிட்ட ஐம்பது ஆண்டுக் காலத்தை
எண்ணிப் பார்க்கின்றேன்
நம்பவே முடியவில்லை
எனக்கா ஐம்பது?
என்னால் நம்பவே முடியவில்லை.

மணி ஓசை

காலை எழுந்து
ஒரு கப் ரீயைக் குடித்து
அமைதியாய் ஆறுதலாய்
அமர்ந்தேன் நானும் சோபாவில்
கோவில் மணி ஓசை
ஊரில் கேட்ட இதம் எண்ணத்தில் ஓடி வர
அடித்தது இங்கே பழையபடி
ரெலிபோன் மணி தொந்தரவாய்.

Wednesday, December 26, 2007

பாவம் அவன்

அன்பான குடும்பம் ஒன்று
அமைதியாய் வாழ்ததிங்கு
அளவான வருமானம்
அதுவே போதுமென்று
அடக்கமாய் அட்டகாசம் செய்யாது
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தான்
கறுப்பிலே வேலையென்றால்
கண்டிப்பாய் சொல்லிடுவான் நோ என்று
உண்ண உணவுண்டு
உடுப்பதற்கு நல்ல உடையுண்டு
உறைவதற்கு அழகான வீடுண்டு
இனியென்ன வேண்டும் நமக்கென்று
இனிமையாய் வாழ்ந்திட்டான்

ஆடம்பரம் என்றாலே அது
நமக்கெதற்கு என்றிடுவான்
நாட்டிலே நாமிருந்த கோலத்தை
எண்ணிப்பார் என் இனியவளே என்றிடுவான்
பனை ஓலை வேய்ந்த வீட்டினிலே
பக்குவமாய் எரிகின்ற அரிக்கன் லாம்புடனே
நாமிருந்த வாழ்க்கைதனை நினைத்துப்பார்
என்றே பேசிடுவான்
கடகத்தில் கத்தரிக்காய் வாழைக்காய்
கருவாடு என்றெல்லாம்
தலையில் சுமந்தே உன் அம்மா
சந்தைக்குப் போய் வியாபாரம்
செய்ததை மறந்தனையோ நீ என்பான்
மாட்டு வண்டியிலே மண்பாதை வீதியிலே
கூடி நாம் போனவைகள் எல்லாம்
நினத்துப்பார் என்றிடுவான்

வில்லா(வீடு) வேண்டுகின்றார்
வித விதமாய் கார் எல்லாம் ஓடுகின்றார்
வட்டிக்குப் பணம் கொடுக்கின்றார்
வசதியாய் வாழ்க்கை வாழ்கின்றார்
பளபளப்பாய் சாறிகள் உடுக்கின்றார்
பகட்டாய் நகையெல்லாம் அணிகின்றார்
பகலென்றும் இரவென்றும் பாட்டிகள் வைக்கின்றார்
நாம் வந்து வருடங்கள் பத்தாச்சு
கண்ட பயன் என்ன இந்தச் சுவீடனிலே
கால் தூசிக்கும் மதிப்பில்லை நமக்கிங்கு
காசு பணம் இருந்தால்தான்
கடவுளுமே கண் திறப்பார் இந் நாட்டில்
இனியும் பொறுக்க முடியாது என்னால்
இன்றே தேடும் பணமென்றாள்
தத்துவங்கள் எல்லாமே வீசி எறிவீர் இன்றோடு
கொள்கை என்று சொன்னவற்றை
கொலை பண்ணி எறியுமையா
தமிழன் என்றோர் இனமுண்டு-இங்கே
தனித்துவமாய் அவனுக்குச் சில குணமுண்டு
நாமும் சேர்வோம் அவரோடு
நன்றே வாழ்வோம் பணத்தோடு
இது ஒன்றும் புதினமில்லை வெளிநாட்டில்
பயப்பட ஒன்றுமில்லை, பாவம் நீங்கள்
ஒன்றுமே தெரியாது உங்களுக்கு
எல்லாமே சொல்லி வைத்தாள் பக்குவமாய்
மாண்புமிகு மனைவியவள்

இன்று நாட்டை வெறுத்திட்டான்
நல்ல கொள்கைகளை விட்டிட்டான்
தானிருந்த நிலமைதனை
சத்தியமாய் மறந்திட்டான்
பேராசை பிடித்தவனாய்
இரவு பகலாய் வேலை செய்கின்றான்
பணத்திற்காய் பாசத்தையே விற்றிட்டான்
வட்டிக்குப் பணமென்றால் எப்பவுமே ரெடி என்பான்
நல்ல நட்பையெல்லாம்
தூர வீசி எறிந்திட்டான்
காசுக்காய் நயவஞ்சகங்கள்
சளைக்காமல் செய்திடுவான்
சிறையிலே இருப்பதற்கும்
சித்தமே எப்போதுமென்பான்
சட்டத்தை மதிக்காமல்
கடத்தல்கள் செய்திடுவான்
சேர்த்திட்டான் பணமதனை ஒருவாறாய்
நிம்மதியை இழந்திட்டான்
பணக்காரன் ஆயிட்டான்

பாவம் அவன்
உண்மையில் பணக்காரன் என்றால்
என்னவென்று புரியவில்லை அவனுக்கு
பாவம் அவன்.

இரத்தக்கண்ணீரை காணிக்கை ஆக்குகின்றேன்

(இக் கவிதை சில ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ்சில் நடந்த உண்மைச் சம்பவத்தின் போது என்னால் எழுதப்பட்டது)


தமிழ் அரக்கர்(கள்) இருவரினால்
தன்மானம் இழந்து
தன் உயிரையும் மாய்த்துவிட்ட
அந்த தமிழ் மழலைக்கு
என் இதயத்தில் இருந்து
கொட்டும் இரத்தக் கண்ணீரை
காணிக்கை ஆக்குகின்றேன்

நம் நாட்டில்
நம் ஈழத்தமிழ் நாட்டில்
சிங்களக் காடையரின் சினந்த பார்வையும்
சீண்டுகின்ற சின்னத்தனமான வாசகமும்
கண்டு கொதித்தெழுந்த தமிழ் இனமே
இன்று வெட்கித் தலை குனிந்து
மனம் புண்பட்டு
மாற்றானின் கேள்விக்கு
மறுமொழி சொல்லத் தெரியாமல்
ஓடி ஒழிகின்ற தமிழ் இனமே!

இங்கு அயல் நாட்டான் வரவில்லை
அந்நியன் நம்மைப் பார்த்துச் சீறவில்லை
அரசாங்கம் நம்மை நசுக்கவில்லை
எம்மவர்கள்! ஐயோ! ஐயோ! எம்மவர்கள்!
ஆம் இவர்கள் எம்மவர்கள்
சொல்ல நா எழவில்லை
தொண்டை இடம் கொடுக்கவில்லை
இதயம் வெடிக்கிறது! ஆம் இதயம் வெடிக்கிறது!
நம் தமிழன் அரக்கன் ஆனான்
காம வெறியன் ஆனான்
நம் பிஞ்சு மழலைகளை
வெட்டிக் குவிக்கின்ற
கொலை பாதகன் ஆனான்
எம்மவர்கள்! ஐயோ! ஐயோ! எம்மவர்கள்!

அன்பான ஓர் பிள்ளை
வஞ்சகம் சூது ஏதுமறியா
பால் வடியும் ஓர் தமிழ்ப் பிள்ளை
ஆருக்கும் பிள்ளைகளில் கோபமில்லை
மனத் தாபமில்லை
கொலைவெறியர் கூட
பிள்ளைகளை அவ்வளவாய் வதைப்பதில்லை
நாட்டிலே இருக்க வழியில்லை! ஓர் நாதியில்லை!
நாம் ஒற்றுமையாய் ஓர் நாளும் இருந்ததில்லை
சிங்களக் காடையரின் கண்ணினிலே
நம் பிள்ளைகளை சிக்கவைக்காமல்
ஓடி வந்தோம்! ஓடி வந்தோம்!
அகதிகளாய் ஓடி வந்தோம்!
அங்கு தமிழன் ஒன்றுபட்டால்
இன்று இந்த இரண்டும் கெட்டான் வாழ்வு நமக்கில்லை

அந்தோ பரிதாபம்! ஐயோ பரிதாபம்!
மாமா! மாமா! என்று
பாசமுடன் அழைக்கும் மழலையையே
மானபங்கம் செய்யத் துணிந்திட்டான் மடைத் தமிழன்
நம் மண்ணிற்கே ஈனம் படைத்திட்டான்
நம்மையெல்லாம் தலை குனிய வைத்திட்டான்
நிதர்சினி என்கின்ற சின்னச் செல்வத்தை
நிரந்தரமாய் தூங்க வைத்திட்டான்

பல கலையும் பக்குவமாய் படிக்க வைத்து
பாரினிலே பல பேரும் போற்றி வாழ்ந்திடுவாய் என்று
பகல் இரவாய் பாடு பட்டுழைத்த
பெற்றோரை விட்டு விட்டு
பாதி வழியில் வானுலகம் சென்று விட்டாய்
இல்லை! இல்லை! உன்னை வானுலகம்
அனுப்பிவிட்டார் அந்தக் கயவர்...
கயவனே! காடையனே!
அங்கெல்லாம் நம்மவர்கள்
இரவென்றும் பகலென்றும் கண்விழித்து
நமக்காகப் போராடும் பொழுதினிலே
நீ இங்கு நம் மழலைகளின் மானத்தைப் பறித்து
அவர்கள் குருதியிலே குளித்து மகிழ்கின்றாய்
ஆம்...
அவர்கள் குருதியிலே குளித்து மகிழ்கின்றாய்
மலர்கின்ற நிதர்சினியின் முகத்தினிலே நீ
மலர்வளையம் சாத்த வைத்துவிட்டாய்

காம வெறியனே! கல் நெஞ்சக்காரனே!
நாமெல்லாம் உன் முகத்தில்
காறித் துப்புகின்ற வேளையைத்தான்
எதிர்பார்த்து இருக்கின்றோம்
ஆம்.....
உன் முகத்தில் காறித் துப்புகின்ற
வேளையைத்தான் எதிர் பார்த்து இருக்கின்றோம்

நிதர்சினியே!
உன்னை நாம் இன்று இழந்திட்டோம்
உன் பால் வடியும் முகத்தை பலி கொடுத்திட்டோம்
உலகத் தமிழரெல்லாம் உன் நினைவால்
உறக்கமின்றி இருக்கின்றார்
கண்களிலே வழிகின்ற கண்ணீரை
அணை கட்ட முடியாமல் தவிக்கின்றார்
என் நெஞ்சத்தின் இரத்தக் கண்ணீரால்
அம் மழலைக்கு உங்களுடன் சேர்ந்து
ஓர் அஞ்சலி செலுத்தி முடிக்கின்றேன்.

Monday, December 24, 2007

சிறைக்கைதிகளுக்காக

சிறீலங்காவின் சித்திரவதைக் கூடங்களில்
இரத்தத்தைச் சிந்தினீர்கள் நீங்கள்
உங்கள் சோகத்தை நினைத்து
இரத்தக் கண்ணீரை சிந்துகிறோம் நாங்கள்

Sunday, December 23, 2007

என் அப்பா (ஐயா)

அடக்கமான என் அப்பா
கண்டிப்பாய் இருந்தாலும்
கருணையின் வடிவம் அவர்
உழைக்கின்ற பணமனைத்தும்
கொடுத்திடுவார் அம்மாவின் கையினிலே
சும்மா இருக்கமாட்டார் ஓர் நேரம்
பந்தம் பிடிப்பது பந்தா காட்டுவது
சுத்தமாகப் பிடிக்காது என் அப்பாவிற்கு

பிள்ளைகள் படிக்கவேண்டும் நல்லாக
பார்க்கவேண்டும் உத்தியோகம் பெரிதாக
எந்நாளும் சொல்லிடுவார் எம்மிடமே
சயிக்கிளிலே சென்றிடுவார் பல தூரம்
எம்மையும் அழைத்துச் சென்றிடுவார் சிலநேரம்
தனிமையாய் சென்று அமைதியாய் நின்று
வணங்கிடுவார் கடவுளரை நிம்மதியாய் எந்நாளும்

தானுண்டு தன் குடும்பம் உண்டு
என்றே இருந்திட்டார்
நீதி கேட்க ஐயாவிடம் வருபவர்கள்
நிம்மதியாய் வீடு திரும்பிடுவார்
அல்லும் பகலும் உழைத்தாலும்
அந்திம காலத்தே நோய் அவரை வாட்டியதே
பிள்ளைகளின் அன்பும் பரிவும்
பக்கத்தே எந்நேரமும் இருந்தே பார்த்திட்ட
என் அம்மாவின் அரவணைப்பும்
நிட்சயமாய் உன் நோயின் தாக்கத்தை தணித்திருக்கும்
ஐயா உம்மை நாம் பிரிந்திட்டோம்
குடும்பத்தின் குலவிளக்காய்
நீ எமக்காக வாழ்ந்ததனை
மறக்கமாட்டோம் எந்நாளும்
எம்முடனே நீ என்றும் வாழ்கின்றாய்.

Saturday, December 22, 2007

விட்டகலா நினைவுகள் - சுனாமி

அகிலத்தையே அதிரவைத்து
ஆசியாவை அழித்தொழித்து
என் இதயத்தையே சுட்டெரித்த
சுனாமியின் நினைவுகள்
சுக்கு நூறாய் உடைக்கிறது என் இதயத்தை இன்றும்
ஆண்டு பதினொன்று கடந்தாலும்
என் நாளும் முயன்றாலும்
அழிக்க முடியவில்லையே உன் நினைவுகளை
மறக்கமுடியா நினைவுகளை
மறப்பதற்கே முயன்று நானும்
தோற்றே போய்விட்டேன் உன்னிடமே

சுனாமி என்று பெயர் கொண்டே
எம்மை அழிப்பதற்காய்
எம் மனத்தைச் சிதைப்பதற்காய்
எம் வாழ்வை ஒழிப்பதற்காய்
ஆர்ப்பரித்து எழுந்த ஆழிப் பேரலையே
உன் கொடுமைதனை கோபாவேசத்தை
என் சொல்லில் அடக்கிட முடியாது
எழுத்தில் வடித்திட முடியாது
உள்ளத்தில் இருந்து வடிகின்ற
இரத்தக் கண்ணீர்தான் இதை எடுத்தியம்பும்

அன்று கேட்ட அலறல் சத்தம்
அகிலத்தின் ஒவ்வோர் மூலையிலும்
இன்னும் எதிரொலியாய் கேட்கிறது
உன் பேரலையின் இரைச்சலையும் விஞ்சி
பச்சிளம் குழந்தைகளும்
படிக்கப்போன பிள்ளைகளும்
நடை பயில உன்னை நாடிவந்த வயோதிபரும்
காதலின் சுகத்தை உன்னுடனே
பகிர்ந்து கொள்ள வந்த காதலரும்
எழுப்பிய அபயக்குரல்
மீண்டும் மீண்டும் என் இதயத்தை மோதி
என் உணர்வுகளை வதைக்கிறது

அமைதியாய் இருந்தாய் நீ
ஆழிப்பேரலையாய் வந்து எம்மை அழிப்பதற்கா?
பொறுமையாய் இருந்தாய் நீ
பொல்லாத சுனாமியாய் வந்து எம்மை அள்ளிச் செல்வதற்கா?
தென்றல் காற்றை எம்மீது வீசி நின்றாய்
தெருவெல்லாம் வெள்ளமாய் வந்து
எம் வீடுகளை அடித்து உடைப்பதற்கா?
வாழ்வதற்கு எம் மீனவர்க்கு வழி சமைத்துக் கொடுத்தாய்
உன் பசி ஆற அவர்களையும் உணவாய் எடுத்துக் கொள்வதற்கா?
குழந்தைகளை அரவணைத்தாய் உன் கரைகளிலே விளையாட
அவர்கள் அலறும் கூக்குரல் கேட்டு மகிழ்வதற்கா?

தரணியில் மனிதன் வாழ
உனை நினைத்தோம் தாயாக
பொறுமையின் பொக்கிசமாய் உனை மதித்தோம்
உனைப்போல் பெருவாழ்வு வாழவேண்டும் மனிதன் என்றோம்
ஏன் இந்தக் கோலம் கொண்டாய்?
ஏன் இப்படிக் கோபம் கொண்டாய் எம்மீது?
ஏன் செய்தாய் இக் கொடுமை எங்களுக்கு?
என்ன அநியாயம் செய்தோம் நாம் உனக்கு?
கொலை வெறியர் அழிக்கின்றார் மானிடரை என்றே
கதிகலங்கி உலகம் நிற்கையிலே
ஆழிப்பேரலையாய் அட்டகாசமாய் ஆணவச் சிரிப்புடனே
உலகத்தின் உச்சக் கொலைவெறியன்
நீயேதான் என்று
பறைசாற்றி நின்றாயே பாதகனே சுனாமியே!
உன் பேய்க் கூத்து ஓய்ந்த பின்னே
உன் கரையெங்குமே சுடுகாடு
உடல் உருக்குலைந்து சிதையுண்டு
இறந்தவர்கள் ஒருபக்கம்
உற்றாரை பெற்றாரை
உடன் பிறந்தாரை உற்ற நண்பர்களை
இழந்து தவித்தவர்கள் மறுபக்கம்
கட்டிப்பிடித்த குழந்தைகள் கைநழுவி
உன் அலையிலே போனபோது
பெற்றமனம் துவண்ட காட்சி
ஒன்றுமே இல்லாது
ஒழிந்து போன உல்லாச விடுதிகள்
இயற்கையை உன் கடல் அழகை ரசிப்பதற்காய்
வந்த வெளிநாட்டாரை
உன் கோரப் பற்களினால்
வெட்டிச் சாய்த்துவிட்ட நிகழ்வுகள்
எல்லாமே விட்டகலா நினைவுகளாய்
என் மனத்தை ஆட்டிப் படைக்கிறதே!

கார் ஒன்றைக் கண்டேன் நான்
நிற்கிறது ஓர் வீட்டின் கூரை மீது
பிள்ளை ஒன்றைக் கண்டேன்
துடி துடித்துக் கிடக்கிறது
தென்னை மர வட்டுக்குள்ளே
வயோதிபர் ஒருவரைக் கண்டேன்
வான் ஒன்றின் கீழ் நசிந்து கிடக்கின்றார்
உன் பேய் அலைகள் எழுந்து பாய்கிறது
வீதிகளின் மேலால் கோபுரங்கள் மேலால்
நெடிதுயர்ந்த மரங்கள் மேலால்
ஊழிக்காலம் உலா வந்ததோ என்றே
எனது மனம் எண்ணியது
வெறுமையை மட்டும்
எஞ்சவிட்டாய் எமக்காக!
வெறுமையும் தனிமையும் செய்கின்ற கொடுமைதனை
உணர்ந்தார்கள் மக்களெல்லாம்!

அறிந்து கொண்டேன் உன் சீற்றத்தை
பொறுமையின் வள்ளல் நீ
பொய்யுரைக்கவில்லை நான்
மனிதர்கள் மனத்திலே
வஞ்சனைகள் வானளாவி நிற்கிறது
தமக்குள்ளே வளர்க்கின்றார் குரோதத்தை
போட்டியும் பொறாமையும் கொண்டே
மனிதகுலம் வெட்டிச் சாய்க்கிறது தம் இனத்தை
பொறுக்கமுடியவில்லையா உன்னால்
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்
பொறுமையின் சின்னமாய் இருந்த நீ
சீற்றம் கொண்டுவிட்டாய் மனித குலம் மீதே
கோரத்தாண்டவம் ஆடியே நீ முடித்திட்டாய்
பார்க்கவில்லை நீ ஓர் பாரபட்சம்
சாதியில்லை இனமில்லை மதமில்லை
வேறெந்தவொரு பேதமுமில்லை உன்னிடத்தில்
கொடியவனே என்றாலும் நீ
எம்மவர்க்கு உணர்த்திவிட்டாய் சமத்துவத்தை
நல்ல மனம் பெற்று நாமும் வாழ்வோம் இனிதாக!!!

Friday, December 14, 2007

தேசத்தின் குரல் பாலா அண்ணன்

புற்று நோயென்னும்
பொல்லாத அரக்கனிலால்
புனிதமான எம் பாலா அண்ணன்
உயிர் பறித்த செய்திதனை
கேட்ட உலகத் தமிழர்
இதயமெல்லாம் உறைந்து போய்
உணர்வற்றுக் கிடக்கிறது
சிங்களத்தின் கிபீர் விமானங்கள்
பொழிகின்ற குண்டுகளே
உலுக்காத தமிழ் மனத்தை
உலுக்கியதே உன் மரணம்

எம் அண்ணன் உயிர் பறித்த காலனவன்
தமிழ் இனத்தின் கவலைகள்
புரியாத கொடிய பாவியவன்
ஓர் இனத்தின் விடியலுக்காய்
தன் தொழில் துறந்து
சொத்து சுகம் இழந்து
உயிரை மட்டுமே
தன்னகத்தே வைத்திருந்த எம் பாலாவை
ஏன் கவர்ந்து கொண்டாய் கொடியவனே
மரணித்த பாலா அண்ணர்
வந்துதிப்பார் தமிழ் ஈழத்தில்
மீண்டும் ஓர் முறை சத்தியமாய்

அரசியல் துறையினிலே
அதி சிறந்த விரிவுரையாளனாய்
நீ இருந்தாய் அகிலம் போற்ற
தமிழ் ஈழ மக்கள் அனைவருமே
உன் உடன் பிறப்பாய் நீ உணர்ந்தாய்
தமிழ் மண்ணை தாயிலும் மேலாக
நேசித்த உத்தம புருசன் நீ
சென்னயிலே எம்
தானைத் தலைவனை சந்தித்த மறு கணமே
துறந்தாய் உன் உல்லாச வாழ்க்கைதனை
இணந்தாய் எம் போராட்டத் தீயினிலே
முப்பது வருடமதாய்
தமிழ் ஈழப் போராட்டம்
தலை நிமிர்ந்து நிற்பதற்காய்
சளைக்காமல் உழைத்தாய் நீ
உயிரையும் துச்சமேன மதித்தே!

பேச்சு வார்த்தை மேசைதனில்
நகைச்சுவையாய் விடயத்தை
நாசூக்காய் விட்டெறிவாய்!
மதியுரையர் பாலா அண்ணர்
மதிநுட்பம் வென்று வரும் என்றே
நம்பிடுவார் உலகத் தமிழரெல்லாம்
பதில் சொல்லமுடியாமல்
பதுங்கிடுவார் எதிர் தரப்பார்
ஈழத் தமிழ் இனத்தின் வேட்கை தனை
அவர்கள் வேண்டுகின்ற உரிமைகளை
சிங்களத்தின் கொடுமையினை
உலகம் புரிந்து கொள்ள வைத்தவனே
மாவீரர் நாளினிலே நீ
சொல்கின்ற விளக்கவுரை
அறு சுவையும் அள்ளித் தெளித்தே
தேன் அமுதாய் பாய்ந்து வந்து
எம் இதயத்துள் புகுந்து கொள்ளும்
மாமனிதரையும் ஒரு படி விஞ்சிய
மதி மாமனிதன் நீ
எம் தேசியத் தலைவனின்
தேசத்தின் குரல் என்னும்
பட்டம் பெற்றவன் நீ

எவருக்கும் அடிபணிய மாட்டாய் நீ
வல்லரசு என்றாலும்
இணத்தலைமை ஆனாலும்
இந்தியாவாய் இருந்தாலும்
சிங்களத்தின் சிந்தனையே ஆனாலும்
மதியுரையர் பாலாவின் மதி நுட்பம்
எதிர்த்தே வெற்றி கொள்ளும்
எதற்க்கும் அஞ்சாத மனிதன் அவர்
ஆயுதம் ஏந்தாத அதிசயப் போராளி
ஆம் நீர் ஓர் அதிசயப் போராளி
தமிழ் ஈழ மீட்பிற்காய் தன்னையே
அர்ப்பணித்த ஓர் அதிசயப் போராளி

ஆலோசனை வேண்டி ஆறுதல் வேண்டி
எம் தலைவன் பிரபா
ஓடுகின்ற பாலா அண்ணா
நீண்ட காலமாய் நீரிழிவு நோயை
எதிர்த்தே வெற்றி கொண்டாய்
சிறுநீரகங்கள் செயல் இழந்த போதும்
சிறிதளவும் கலங்கவில்லை நீ
போராளியின் சிறுநீரகம்
பொருத்தியுள்ளேன் நானென்று
பெருமிதமாய் சொல்வாய் நீ
புற்று நோயை மட்டும்
புறமுதுகிடச் செய்ய முடியாது
போனது ஏன் ஐயா
கல் நெஞ்சுக் கார காலன் அவன்
வஞ்சனையாய் எடுத்திட்டான்
உன் இன் உயிரை
எம் மக்கள் துயர் துடைக்க
எழுந்து வரமாட்டாயா எம் பாலா அண்ணா

இன்னும் பல ஆண்டு வாழ்வாய் நீ என்று
நம்பினோம் நாமெல்லாம்
நீ ஓர் ஏமாற்றுக் காரன் ஐயா
பொல்லாத வருத்தங்கள்
பலவும் சுமந்து கொண்டே
நகைச் சுவையும் அறு சுவையும்
கலந்து பேசி நம்ப வைத்தாய்
நம்மை எல்லாம்
நீடூழி வாழ்வாய் நீ என்றே
நாமெல்லாம் நம்பி ஏமாந்தோம்

தமிழன் இதயமெங்கும்
துள்ளித் திரிந்தவன் நீ
தன் நிகரில்லா எம் தலைவனுக்கு
உற்ற துணைவன் நீ
தமிழீழ விடுதலைக்காய் வித்தாகிப் போன
விடுதலை வீரர்களின் மனங்களிலே
உறைந்து கிடப்பவன் நீ
ஈழத் தமிழன் பெருமை கொள்ள
அரசியல் உலகினிலே
அட்டகாசமாய் புகுந்து விளையாடியவன் நீ

தமிழர் இதயமெங்கும் பேரிடியாய்
வீழ்ந்த செய்தி இது
ஓர் சத்தியத்திற்காய் வாழ்ந்த
விடுதலை வீரன் இன்று
வித்தாகிப் போகின்ற செய்திதனை
செவி மடுக்க மறுக்கிறதே
என் செவி இரண்டும்

தினம் தினம் சாவோடு போராடி
உன் உடலெல்லாம் உபாதைகள்
வாட்டி வதைத்தெடுக்க
தளர்ந்து போகாது
இலட்சியத்தில் மட்டுமே உறுதியாய்
இருந்தவன் நீ
துன்பத்தில் நீ துவண்ட போதெல்லாம்
உலகத் தமிழினமே உனக்காய்
இரத்தக் கண்ணீரச் சிந்தியதே
அறிவாயா பாலா அண்ணா
உன் மூச்சுக் காற்று
உலகெல்லாம் சுற்றி வந்து
எம் சுவாசக் காற்றில் கலந்து
எம்முள்ளே இரத்தத்துடன்
கலந்தே இருக்கிறது
காலன் உன்னைக் கவர்ந்தாலும்
உன் மூச்சு எம்முள்ளே
என்றும் நிலைத்திருக்கும்
எம் பாலா அண்ணன்
நீண்டு நிலைத்திருப்பார் எம்முடனே
கடைசித் தமிழன் மூச்சு உள்ளவரை

ஈழம் காணும் வீறுடனே
அகிலமும் சுற்றி வந்த பாலா அண்ணா
மீழாத் துயில் கொள்ளும் செய்தி
ஈழத் தமிழரின் இதயத்தில்
இன்னுமொரு ஆணியை இறுக அடிக்கிறது
புலிகளின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்
என்று எடுத்துரைத்தவனே
தமிழ் ஈழம் மலரும் இது திண்ணம்
என்றே மலர் வளையம் சூடுகிறோம்
கனத்த மனத்துடனே

படுக்கையிலே நீ சாவிற்காய்
நாட்களை எண்ணிய வேளையிலும்
உனது துயரமெல்லாம்
எம் இனம் படும் துன்பத்தின்
ஒரு பருக்கை என்பாய்
மரணம் ஓர் துன்பமல்ல
இனிப் பணி செய்ய முடியாமல் போவதுதான்
தன் மனக் கவலை என்பார்
இனியும் பாலா அண்ணாவின் கதை சொல்ல
கல் நெஞ்சம் எனக்கில்லை

மாவீரர் வானத்தே
உன்னை மலர் தூவி
வரவேற்கக் காத்தே இருக்கின்றார்
தமிழ் ஈழம் மலர்வது உறுதி
என்று நீர் போடும் சத்தம்
எமக்கு உரத்தே கேட்கிறது
தமிழினத்தின் விடியலுக்காய்
தன்னையே அர்ப்பணித்த
இந்த வீரனுக்கு என்
தலை குனிந்த வணக்கங்கள்.

Monday, December 10, 2007

ஏன் பறித்தாய் ராணுவமே?

என் பசுமையான நினைவுகளில்
பதிந்திருக்கும் இனிமைகளை
அள்ளிக்கொடுத்த என் அருமை ஊரே
என் இதயத்தின் ஒவ்வோர் அணுக்களிலும்
உன் நினைவே
குடிகொண்டிருக்கும் எந்நாளும்

சிறியதோர் கிராமமாய்
சிங்காரச் செழிப்புடனே
அயலவரை அங்கலாய்க்க வைத்தாயே
என்ன இல்லை எமதூரில்?
அழகான வீடுகளும்
அளவில்லாத் தோட்டங்களும்
மின் விளக்கின் ஒளியினையே
எல்லோர்க்கும் முன்னமே நாம் பெற்றோம்
வீதி ஓரமெங்கும் பசுமை செளித்திருக்க
மதில்களெல்லாம் தொடராய்
விரிந்து செல்லும்...

பத்தாம் வகுப்புவரை பாடசாலை
ஐந்தாறு சங்கங்கள்
அனைத்துக்கும் கட்டிடங்கள்
படித்தோரின் எண்ணிக்கை
பலத்தைக் கொடுத்தது எம்மூருக்கு
கலைகளுக்குப் பெயர் எடுத்த
பெரியார்கள் வாழ்ந்தார்கள்
எமதூரில்
பெருமை சேர்த்தார்கள்
அகிலமெங்கும் குரும்பசிட்டிக்கே!

இளமையின் காலத்தை
இனிய எம் மண்ணில் களித்ததற்காய்
சொல்கின்றேன் நன்றிதனை
எந்நாளும் கடவுளிற்கே
இன்னும் ஓர்முறை
எம் மண்ணை முத்தமிட்டால்
மனத்தின் சுமையெல்லாம்
பஞ்சாய்ப் பறந்துவிடும்

எம் அப்பாவும் அம்மாவும்
அவர்தம் பெற்றோரும்
பிறந்து வளர்ந்து
பூரிப்பாய் வாழ்ந்த பூமி அது
எமக்கல்லோ சொந்தமது
எமக்கல்லோ சொந்தமது!
எம் கண்களெல்லாம்
கண்ணீரைக் கொட்டிநிற்க
பகை கொண்டு வெறி கொண்டு
எமதூரை ஏன் பறித்தாய்
ராணுவமே?

அரசடிச் சந்திக்கும்
அம்மன் கோவிலிற்கும்
மணிக்கடைப் படிக்கட்டிற்கும்
மாறி மாறி ஓடிய நாட்கள்
மனதினை விட்டகல
மறுத்தே நிற்கிறது
அயலூரார் மெச்சுகின்ற
அருமையான ஊரெனவே
பேரெடுத்தாய் சிறப்பாக
அடிபிடி சண்டைக்கு
போகமாட்டார் எமதூரார்
அள்ளிக் கொடுக்கின்ற வியாபாரத்தில்
நீ என்றுமே முன்னணியில்

இனிய இளமைப் பருவத்தே
நாமெல்லாம்
கூடிக் கும்மாளம் அடித்த காலங்கள்
எம் ஊரின் ஒவ்வோர் மூலையும்
எம் கதை சொல்லும் வாயிருந்தால்
இன்னும் ஓர் முறை
எம் ஊரில் கால்பதிக்க
கடவுளே கருணை காட்ட மாட்டாயா?
கல் நெஞ்சு ராணுவத்தை
எம் ஊரை விட்டு
துரத்தி அடிக்க மாட்டாயா?

Tuesday, November 13, 2007

சிங்களமே ஓடிவிடு எம் மண்ணைவிட்டு

எல்லாளன் ஆண்ட பூமி இது
எல்லைகள் போட நீ யார் எமக்கு
சங்கிலியன் கட்டிக்காத்த பூமி இது
சண்டித்தனம் விடுவதற்கு துணிவேது உனக்கு
ஓடிவிடு எம் மண்ணைவிட்டு

சுயநலக்கார மனிதன்

மழையில் நனையாமல் இருப்பதற்காய்
மரத்தின் கீழ் ஒதுங்கும் மனிதன்
அந்த மரமும் மழையில் நனைகிறதென்று
என்றாவது அதற்க்கு குடை பிடிக்க நினைத்ததுண்டா!

Monday, November 12, 2007

தலை குனிந்து நில்லடா

தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா
ஆச்சி அப்புவோடை பூட்டன் பூட்டியும்
ஒன்றாய் ஒற்றுமையாய்
இருந்தான் தமிழன் அன்று
இன்றோ ஐரோப்பாவில்....
அண்ணனும் தம்பியும்
அடிபிடி சண்டையில் முன்னணியில்
அக்காளும் தங்கையும் ஆளுக்காள் ஒவ்வோர் பக்கம்
அப்பாவையும் அம்மாவையும் இங்கே வரவழைத்து
அங்கே அவர்க்கிருந்த
நிம்மதியையும் நிர்மூலமாக்கி
பிள்ளை பார்ப்பதற்கும்
பிற வேலை செய்வதற்குமாய்
அவர்களை தமிழா நீ படுத்தும் பாடு
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா!

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான்
இலங்கை வேந்தன் அன்று
இன்றோ ஐரோப்பாவில்...
கடன் கொடுத்தோர் கலங்கி நிற்கும் பரிதாபம்
கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதனால்
வாங்கிக் கட்டியவர் இங்கு ஏராளம் ஏராளம்
சீட்டுக் கட்டியதால் சின்னாபின்னமான
குடும்பங்கள் எத்தனை எத்தனை
சீட்டுப் பிடித்தவர்கள் சிங்கார வாழ்க்கை வாழ்கையிலே
சீட்டுக் கட்டியோர் சித்தப் பிரமை பிடித்தே
அலைந்து திரிகின்றார்
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா!

நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவன் தமிழன்
காலம் காலமாய் நட்பினைக் காத்தவன் தமிழன்
இன்றோ ஐரோப்பாவில்...
உயிர் நண்பனையே
உடனிருந்து ஏமாற்றுகிறான் தமிழன்
பணமுடையவனே பலருக்கும் நண்பன்
களவும் பொய்யும் செய்து
கனதியாய் பணம் சேர்த்தவனே
எல்லோர்க்கும் நண்பன்
கண்ணியமாய் வாழ்பவர்கள்
கவலைப்பட்டே காலத்தை தள்ளும் பரிதாபக் காட்சி
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா!

பஞ்சத்தில் தான் வாழ்ந்தாலும்
அறிவுப் பசிக்கு உணவளித்தவன் தமிழன்
எளிமையாய் வாழ்ந்தாலும்
இன்பமாய் வாழ்ந்தவன் தமிழன் அன்று
இன்றோ ஐரோப்பாவில்.....
காசிருக்கும்போது கல்வி எதற்கென்கின்றான்
பணம் சேர்ப்பவனே அறிவாழி என்கின்றான்
இரவு பகல் வேலை செய்யும் கணவன்
தனிமையிலே ஏக்கமுறும் மனைவி
பெற்றோரைக் காணாது பரிதவிக்கும் குழந்தை
இதுவே சுக வாழ்வு என்கின்றான் தமிழன்
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா!

Tuesday, November 6, 2007

விடியவில்லை வெள்ளிக்கிழமை

அந்த பொல்லாத வெள்ளிக்கிழமை
விடியவே இல்லை
தமிழர் மனமெல்லாம் ஒரே கும்மிருட்டு
விடி காலைப் பொழுதினிலே
இடியெனவே வீழ்ந்த செய்தி
விடியலைக் கருமையாக்கி
விழிகளைக் குளமாக்கி
ஒளிதனை முற்றாய் மறைத்து
இருள்மயமாய் காட்சி தருகிறது

எம் தமிழர் மனமெல்லாம்
நிறைந்திருந்த தமிழ்செல்வன்
ஈழத்தின் தங்கச் செல்வன்
புன்னகை மாறாத புலி வீரன்
வீர மரணம் எய்திட்டான்
என்ற செய்தி கேட்டு
பதை பதைதிட்டார் ஈழத் தமிழர் எல்லாம்
ஒவ்வோர் தமிழனின் இதயமும்
ஓர் கணம் அசைவற்று நின்றே
தன் இயக்கத்தை தொடர்ந்தது

புலம் பெயர் நாட்டில் எம்மவர்
நம்ப மறுத்தார் இச் செய்தியினை
கண்களில் ஓர் துளி கண்ணீர்
கொட்டவில்லை எனக்கு
என் கைகள் ஒரு வரி கவிதை
வடிக்கவில்லை இன்றுவரை
மனம் ஓர் வெறுமையாய்
உணர்வற்றுக் கிடக்கிறது
நம்ப மறுக்கிறது எனது மனம்
எப்படி நம்புவோம் நாம் இதனை
இப்போதும் எம் கண் முன்னால் அந்தப் புன்சிரிப்பு
அழகாய் வந்து நிற்கிறதே

போர் புரிய வக்கில்லா
பொல்லாத சிங்கள இனவெறியன்
சமாதானம் முன்னெடுத்த
எம் தமிழர் மனமெல்லாம்
இரண்டறக் கலந்துவிட்ட
எம் தமிழ்செல்வன் உயிர் குடித்திட்டான்
குண்டுகளை வீசியே வஞ்சனையாய் .....
அப்பாவித் தமிழர் உயிர் ஆயிரம் ஆயிரமாய்
பலி எடுத்த குண்டுகளால்
இன்று சமாதானத்தின் முதல்வனையே
சாகடித்தீர் உம் வெறி தீர
அக்கிரமம் கொண்டவரே
திண்ணமாய்ச் சொல்கின்றேன்
விலை கொடுப்பீர் பெரிதாக

எங்கள் தலைவன் இதயத்தின்
ஓர் பாதி தமிழ்செல்வன்
எப்படித் தாங்கிடுவோம்
உன் மறைவை
என்றும் மாறா எம் செல்வன் புன்சிரிப்பு
இனி எப்போ காண்பார் எம் தமிழர்
உலகெங்கும் சுற்றி வந்தாய்
உன்னதமாய் சமாதானம் பேசி வந்தாய்
புலம் பெயர் தமிழருடன்
ஈழத் தமிழர் பாசத்தை பகிர்ந்தளித்தாய்
ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வாக மீழாது உறங்குவதை
எப்படித் தாங்கிடுவார் எம் தமிழர்
எழுந்து வர மாட்டாயா எமக்காக?

ஈழத் தமிழர் அழுகையின் ஓலம்
அகில உலகெங்கும் பட்டுத் தெறிக்கிறது
புலம் பெயர் தமிழர்கள்
செய்வதறியாது தவிக்கின்றார்
தமிழ் நாட்டுத் தமிழர்கள்
கோவம் கொதிப்பேறி அனல் கக்குகின்றார்
உலகப் பந்தின் சமாதானம் விரும்பிகள்
தம் உள்ளம் கொதிக்க திகைக்கின்றார்
சிங்கள இன வெறியன்
இன்னுமோர் முறை
காட்டுமிராண்டிகள் தாமென்று
உலகிற்கு பறை சாற்றி நிற்கின்றார்

ஊன்று கோலால் ஊன்றி நடக்கும்
எம் இனியவனே
தமிழரின் நல்வாழ்க்கைக்காய்
நீ தாங்கிய வலிகள் எத்தனை? எத்தனை?
நீ பட்ட விழுப்புண்கள்
வேதனை தந்தனவா எம் செல்வா?
எல்லாம் தாங்கினாயோ எமக்காக?
உன் உள்ளத்தின் மென்மையினை
அறிவார் நம் தமிழர்
இருபத்திநான்கு ஆண்டுகளாய்
உளைத்தாய் எம் மண்ணின் விடுதலைக்காய்
புன்னகை மாறாத முகத்துடனே
புரிந்திட்டாய் அரசியல் பணிதனையே
உனைக் கொன்றார்
புத்தரின் புதல்வர்கள்
எரிமலையாய் கொதிக்கிறது
தமிழர் நெஞ்சம்

நீ சண்டையிலே வீரன்
அரசியலில் வெகு சூரன்
அறிவார் எதிரியெல்லாம்
எமைவிட மேலாவே
எல்லாளன் நடவடிக்கை
துட்டரையும் துட்டகைமுனுவின் கொட்டத்தையும்
துடைத்தெறிந்த நேரத்தில்
கோழைகள் துஸ்டர்கள்
எம்மைக் கொதிப்படைய வைக்கின்றார்
புத்தரின் தருமத்தை குழி தோண்டிப் புதைப்பவர்கள்
குண்டு வீசிக் கொன்றுவிட்டார் வஞ்சனையாய்
நீ போட்ட குண்டு தகர்த்தெறிந்தது
சமாதானத்தின் வழிமுறையை
சர்வதேசம் போடுகின்ற சத்தங்கள்
இனியும் எம்மை பணிய வைக்கமுடியாது
புரியவைப்பார் எம் புலி வீரர்
தானைத் தலைவன் இருக்கின்றான்
தமிழ் ஈழம் வெல்வோம் உறுதி இது
பிரிகேடியர் தமிழ்செல்வன் ஆத்மா
சாந்தி அடையும் நிட்சயமாய்
மாவீரர் வீரசொர்க்கத்தில்
வரவேற்கக் காத்திருக்கின்றார்
அங்கிருந்தே பார்ப்பாய் தமிழ் ஈழம் மலர்வதனை.

Friday, November 2, 2007

கண்ணீர்த்துளிகள்

சோபாவில் படுத்திருந்து
என் எண்ணத்தை பின்னோக்கி ஓடவிட்டேன்
ஆண்டுகள் பல பின் நோக்கி
என் மனம் அசை போட்டே
எம்மவர் வாழ்க்கையினை எண்ணிப் பார்க்கிறது
சிறு குடிசை வீடுகளும்
விருப்புடனே செய்த விவசாயப் பூமிகளும்
காடுகளாய் வளர்ந்திருந்த இயற்கையின் வனப்புகளும்
ஒவ்வொன்றாய் என் மனத்தை தொட்டுச் செல்கிறது

புழுதி கிளப்ப புயல் போல் ஓடிடும் சயிக்கிள்கள்
பஸ் இற்காய் காத்திருக்கும் பெரியவர்கள்
பேசுகின்ற பயமற்ற ஊர் வம்புப் பேச்சுக்கள்
சமையல் முடித்தே சந்திக்கும் பெண்களின்
கலகலப்பான கதை அளப்புக்கள்
காதல் யோடிகள் பற்றி கதை கதையாய்
கிசு கிசுக்கும் இளசுகள்
வஞ்சகமே இல்லாத அந்த நிகழ்வுகள்
என் இதயத்தை கிள்ளி விடுகிறது பலமாக

ஒவ்வோர் வீட்டிலுமே ஒவ்வோர் ராயா
ராயாவும் ராணியுமாய் மகிழ்ந்தே வாழ்ந்திடுவார்
வறுமையிலும் செழுமை காணும் வளமான வாழ்க்கை
உண்மையான ஊழலற்ற அரசாங்கம்
நடப்பது அவர்தம் வீட்டில்தான்
உள்ளத்தின் உணர்வுகள் தான்
அங்கே எழுதாத சட்டங்கள்....

மகிழ்வான அந்தக் கடந்த காலம்
எங்கே தொலைந்தது அந்தக் காலம்?
எங்கே தொலைந்தார்கள்
அந்த உண்மையான மனிதர்கள்?
கண்களிலே கண்ணீர் தடை போடமுடியாமல்
கன்னத்தை ஒரு தரம் துடைத்துவிட்டு
மீண்டும் ஓர் முறை எண்ணத் தலைப்பட்டேன்

காலம் மனிதனை மாற்றுகிறதா?
இல்லை காலத்தை மனிதன் மாற்றுகிறானா?
கேள்வியொன்று எழுந்து வந்து
விடை காணமுடியாமல் விக்கித்து நிற்கிறது!
ஆண்களும் பெண்களுமாய் எத்தனை சிநேகிதங்கள்
கள்ளம் கபடமில்லா உண்மையான நேசங்கள்
அப்போ பணமும் பொருளும் பந்தாவும்
எம்மில் யாரிடமும் இருந்ததில்லை
அன்பு மட்டும் தான் அங்கே அரசாங்கம் நடாத்திற்று
பணத்திற்காய் பாசத்தை கொன்றொழிக்கும் பச்சோந்திகள்
பார்த்ததே இல்லை அன்று நாம் எம்மிடையே
உண்மையாய் உன்னதமாய் வாழ்ந்த
அந்த மனிதக் கூட்டம்
கண்களிலே இன்னுமோர் முறை கண்ணீர்த்துளிகள்
உண்மை அன்புக்காய் உத்தம நட்புக்காய்
ஏங்குகிறதோ எனது மனம்?

காலம் மனிதனை மாற்றவில்லை என்றால்
கல்லு மனம் படைத்த இந்த மனிதர்கள்
எப்படி வந்தார்கள் எங்கிருந்து வந்தார்கள்
இப் புலம் பெயர் நாட்டிற்கு?
மீண்டும் கண்ணீர்த்துளிகள்.

Sunday, October 28, 2007

ஏன் இந்தத் தலைக்குனிவு

தலை குனிந்தபடியே வந்த தங்கம்மாவை
தற்செயலாய் சந்தித்தேன் சுவீடன் கடைத்தெருவில்
நாட்டிலே தங்கம் குமராய் இருக்கையிலே
தலை நிமிர்ந்து நடப்பாள் ஓர் வீர நடை
எவருக்கும் அடிபணியோம் நாம் பெண்கள்
என்று சொல்லியே தீரமுடன் வலம் வருவாள்
இங்கே மட்டும் என்ன தலைக்குனிவு
ஏன் இந்தத் தலைக்குனிவு.....
ஆணுடன் பெண்ணும் சரி சமனாய் வாழும்
இந் நாட்டில் ஏன் இந்தக் கோலம்?
ஏன் இந்தத் தலைக்குனிவு!
ஒன்றுமே புரியவில்லை எனக்கு
ஆவலை அடக்க முடியாமல் கேட்டேன் தங்கத்தை
ஏன் இந்தத் தலைக்குனிவு?

கேட்டதும் வந்ததே கோபம் பொத்துக்கொண்டு
எப்போ வந்தாய் நீ சுவீடனுக்கு
என்ன கேள்வி கேட்டாய் நீ என்னைப் போய்
எவ்வளவைத் தாங்கி எத்தனையைச் சுமந்து
நம் பெண்கள் இருக்கின்றார் இங்கு
தலை நிமிர முடியுமா நம்மால்?
நாட்டிலே இருந்து இப்போ வந்ததினால்
நிமிர்கிறதோ உனது தலை?
வாழ்ந்து பார் இந் நாட்டில் சில காலம்
நிமிர்ந்த தலை குனிந்து கொள்ளும்
வீர நடை சோர்ந்து போகும்
சொல்லி நின்றாள் தங்கமவள்

பெண்களின் உரிமைக்குப் பேர் எடுத்த சுவீடன் என்று
கனவுகளைச் சுமந்துகொண்டே வந்தேன் நானும் இங்கு
தங்கத்தின் கதை கேட்டு தளர்ந்து போனேன்
என் கனவெல்லாம் உடைந்தே போய்ச்சு
ஒன்றுமே புரியவில்லை எனக்கு
இங்கேயும் அடிமையாய் தலை குனிந்து வாழ்வதா?
எங்கே போனாலும் எம் பெண்கள் அடிமைதானா?

உள்ளூரப் பயம் ஒன்று
வாட்டி வதக்கியது என்னுள்ளே
கற்பனைகள் பலவோடு
காலடி எடுத்து வைத்தேன் நான் இங்கு
இந் நாட்டில் என்ன பயம்?
தலை நிமிர்ந்து போனால்
நம் தரம் கெட்டுப் போகுமா இங்கு?
அடிமை விலங்கொடிக்க அரும்பாடு படுகின்றார்
மகளிர் அங்கு தமிழ் ஈழத்தில்
அடிமையாய் வாழ்வதா நாம் இங்கே
தலி குனிந்து வாழ்வதற்கா
புலம் பெயர்ந்தோம் நாம் எல்லாம்
ஆயிரம் கேள்விகள் மனதுள்ளே எழுந்து வர
ஆத்திரமாய் நான் கேட்டேன்
அடக்குமுறை ஆண்கள் உள்ளனரா இன்றும்
போராட்டம் தொடங்கிடுவோம்
தலை நிமிர்ந்து வாழ்ந்திடுவோம்

பலமான சிரிப்புடனே பவ்வியமாய் சொன்னாள் தங்கம்
தலைக்குனிவு வந்ததிற்கு
நம் பெண்கள் தான் அடிப்படையே
வயதுக்கோர் பவுணில் தாலிக்கொடி போடாட்டில்
புலம்பெயர் நாட்டில் வக்கில்லாப் பெண்ணென்று
நையாண்டி செய்திடுவார் நம் பெண்கள்
அத்தானை வெருட்டித்தான்
ஐம்பதிலே செய்தேன் தாலிக்கொடி
இன்று தலை நிமிர்த்த முடியாமல்
அலைக்களிந்து திரிகின்றேன்
தலை நிமிர முடியுமா என்னால்?

Monday, October 22, 2007

வெளிக்கிடடி தமிழ் ஈழத்ற்கு

போதுமடி போதும்! இவ்வளவும் போதும்!
நாட்டிலை நானிருந்தால் இப்போ
நல்ல சருகை வேட்டி கட்டி சால்வையை முறுக்கி
வீர நடை நடந்திருப்பேன்
இங்கேயோ நீளக் கால்ச்சட்டை
நிக்கவே விடுகுதில்லை
அதுக்கை ஒரு சப்பாத்து
காலை நசுக்கி நுள்ளித் தொல்லை தருகிறது
அண்டைக்கு வேட்டியைக் கட்டச் சொன்னாய்
கடுங் குளிரிலை எல்லாமே விறைச்சுப் போச்சு
டாக்குத்தரிட்டை மருந்துக்குப் போனால்
அடுத்த சமருக்குத்தான் விறைப்பெடுபடுமாம்
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு
இப்பவே வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

ஊரிலை இருந்தோம் நாம் எப்படி ஒற்றுமையாய்
அங்கே வருத்தம் எண்டு நான் படுத்தால்
பாக்கவெண்டு வரும் சனக் கூட்டம்
இங்கை வருத்தம் எண்டு நான் படுக்க
நல்ல பிளான் போடுறேனாம்! காசெடுக்கப் போறேனாம்!
சொல்லிறாங்கள் நாக்கூசாமல்
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு
இப்பவே வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

ஈழத்தில் பெண்கள்தான் போராட முன்னணியில்
இங்கேயோ அடுத்தவன்ரை குடும்பத்தை
அவதூறாய்ப் பேசுவதில் அவர்கள்தான் முன்னணியில்
வதந்தி கொண்டோட வாச்சிருக்கு இவர்களுக்கு
சில ஆண் துணைகள்
இதுகளோடை வாழப் பிடிக்கவில்லை எனக்கு
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!
இப்பவே வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

உதவி புரிவோர்கள் உள்ளார்கள்
எம்நாட்டில் பெருமளவில்
அலட்டிக் கொள்வதில்லை அவர்கள் பெரிதாக
இங்கோ சிறிதாக உதவி செய்தாலும்
தம்பட்டமடித்தே தம்மைப் புகழ்ந்திடுவார்
காலை மாலையென கதைத்தே
எமை வதைத்திடுவார்
காணுமிந்த வாழ்க்கை
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!
இப்பவெ வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

கார் உண்டு, வீடுண்டு
கனமான தங்க நகைகள் உண்டு
தொலைக்காட்சியுண்டு
பல ரகமான தொலைபேசிகளுமுண்டு
கணனியுண்டு கமராக்கள் பலவுண்டு
இன்னும் உண்டு எல்லாமே இங்குண்டு
இருந்தென்ன? மனத்தில் இல்லாததொன்றுண்டு
அதை நாடிப் போகின்றேன் நான் தமிழ் ஈழம்
உனக்கும் விருப்புண்டால்
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!
இப்பவே வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

Sunday, October 21, 2007

பொய்க் காதல்

நான் உன் அன்புக்காய் ஏங்கினேன்
நீயோ என்
அழகுக்காய் ஏங்கினாய்
நான் உன்
இதயத்தின் ஆழத்தை தேடினேன்
நீயோ என்
உடம்பில் பொன்னை தேடினாய்
நான் உன்னிடத்தில்
உள்ளத்தை தேடினேன்
நீயோ என்னிடத்தில்
உதட்டை தேடினாய்
நான் உன்
குணத்தை நோக்கினேன்
நீயோ என்
பணத்தை நோக்கினாய்
நான் உன்
நாணயத்தை எதிர்பார்த்தேன்
நீயோ என்
சீதனத்தை எதிர்பார்த்தாய்
உண்மைக் காதல் வாழ வேண்டும்
உன் பொய்க்காதல் சாகவேண்டும்
முடிவெடுத்தேன் நான் முடிவாக
உண்மைய்க் காதலுக்காய்
தூர எறிந்திட்டேன்
உன் பொய்க் காதலையே!
உன்னையும் தான்!

Sunday, October 14, 2007

வெள்ளைக்காதல்

வேலையில்லாக் கந்தனுக்கு
வெள்ளையிலே ஓர் தனிப்பிடிப்பு
அப்பா அம்மா பார்த்த பெண்களெல்லாம்
அற்பமாய்த் தெரிந்தார்கள் அவனுக்கு
கொழுத்த சீதனத்துடன் கொண்டு வந்தார்
அப்பா ஓர் பெண்பிள்ளை
குணத்திலே தங்கமான பெண்ணொன்றை
தன்னோடு கூட்டிவந்தார் அவன் அம்மா
பணமும் குணமும் பட்டிக்காட்டான்
பேசும் பேச்சுக்கள் தெரியாதா உங்களுக்கு
வெள்ளையாய் பெண்ணொன்று வேண்டுமென்றான்
வேலையில்லாக் கந்தன்
கறுத்த பெண்ணைக் கைப்பிடித்தால்
கருமம் பிடித்த வாழ்க்கைதான் மிஞ்சுமென்றான்
வெளிநாட்டுக்குப் போனவங்கள்
வெள்ளைகாரியையே கொண்டுவாறாங்கள்
நானும் போறேன் வெளிநாடு
நாட்டுக்கு வாறேன் வெள்ளையோடு
சொல்லிப்புறப்பட்டான்
வேலையில்லாதோர் ஓடும் வெளிநாட்டிற்கு

குளிரும் கூதலுமாய் காலநிலை
கும்மிருட்டு எங்கு பார்த்தாலும்
கடவுளை மனத்தில் வைத்தபடி
காலடி எடுத்து வைத்தான் வெளிநாட்டினிலே
பாசை ஒன்றும் புரியவில்லை அவனுக்கு
பாடசாலைக்குப் போகட்டாம் படிப்பதற்கு
இதுதானோ விதியென்று போனான் பள்ளிக்கு
படிப்பொன்றும் ஏறவில்லை என்றாலும்
பக்கத்து வகுப்பு பமீலாவுடன்
பரிச்சயம் மட்டும் ஏற்பட்டதவனுக்கு

கந்தன் இப்போ கன்டோவாய் மாறிவிட்டான்
கருப்புத்தான் என்றாலும் வெள்ளைக்காரன் தான் நானென்றான்
மாட்டுவண்டியை அவன் மறந்தான்
மாடாய் உழைத்த தன் தந்தையையும் அவன் துறந்தான்
அம்மா என்ற அன்புத் தெய்வத்தை
அடிக்கடி பணம் கேட்கும் தொல்லை என்றான்
பகிர்ந்துண்ணும் பண்பாட்டை பட்டிக்காடென்றான்
வகுப்பில் பமீலாவை தன் பக்கத்தே இருத்தி
பலமான முத்தங்கள் கொடுத்திடுவான்
சில நேரம் நஸ்சாக சில்மிசமும் செய்திடுவான்
வெள்ளைப் பொம்பிளையள் வாழப்பிறந்ததுகள்
எங்கடை பொம்பிளையள் வாய்காட்டப் பிறந்ததுகள்
சொல்லிடுவான் நாக் கூசாமல்

எட்டு முழத்தில் இப்பவும் சேலை உடுக்குதுகள்
எங்கடை பொம்பிளையள் வெளிநாட்டில்
தண்ணி அடித்தால் தரம் கெட்டுப் போகுமாம் தங்களுக்கு
டிஸ்கோ போவது டிசிப்பிளீன் இல்லையாம்
வாழ்வை ரசிக்க வக்கில்லாத பிறப்புக்கள்
இதுகளைக் கைப்பிடித்தால் பாழாகும் வாழ்வென்று
வெள்ளையுடன் இன்பமாய் வாழ முடிவெடுத்தான்
வெளிப்படையாய் பல இரவு பரீட்சித்து பார்த்தபின்பு
பமீலாவை கைப்பிடித்தான் கன்டோவாய் மாறிய கந்தன்

ஒளிவில்லை மறைவில்லை ஒற்றுமைக்கும் குறைவில்லை
ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் ஏதுமில்லை
ஆளுக்குச் சரிபாதி என்ற சமத்துவ சமுதாயம்
இதுவல்லோ வாழ்க்கையென்று இன்புற்று இருக்கையிலே
இடியாய் விழுந்ததோர் செய்தி!
கறுவல் ஒருவனிடம் கள்ளத் தொடர்பாம் பமீலாவிற்கு
கண்டிப்பாய் கேட்டான் கன்டோ
"வெட்கமாய் இல்லை உனக்கு"
ஆம் வெட்கம்தான்! உன்னைப்போல் உலகம் புரியாதவனை
கலியாணம் செய்தது வெட்கம்தான்!
வெட்டொன்று துண்டிரண்டாய் அட்டகாசமாய்
பதிலளித்தள் பமீலா
வெள்ளையைத் தேடி தான் போக
வெறும் கறுவலை நாடி வெள்ளை போவதேனோ!
ஓடி வந்தான் என்னிடத்தில், அழுகையுடன்

காலிலே போடுகின்ற கறுப்புச் சப்பாத்து
கண்ணுக்கழகாய் இருப்பதுவும் தெரியாதோ?
கருங்கூந்தல் வேணுமென்று
கன்னியர்கள் கலங்குவதுவும் உனக்குத் தெரியாதோ?
கன்டோவே கந்தனாய் நீ மாறிவிடு
உடல் கறுப்பென்றாலும்
உள்ளம் வெள்ளை கொண்டவர்கள் நம் பெண்கள்
உன்னையே திருத்தி உருவாக்கும் சக்தியுண்டு அவர்கட்கு
மன்னிக்கும் குணம்கொண்ட மனிதர்கள் எம் பெண்கள்
மடத்தனம் வேண்டாம் இனியும்
மடல் ஒன்று வரைந்திடு உன் அம்மாவிற்கு
கயமை புரிந்தவர்க்கும் கருணை காட்டும் பெண்கள்
இன்றும் உள்ளார் எம் நாட்டில்
அம்மா சொல்பவளை ஏற்றுக்கொள்
அன்பாய் குடும்பத்தை நடாத்திவிடு
வெள்ளை உள்ளத்தை கண்டு கொள்வாய்
வெள்ளைக் காதல் என்னவென்று புரிந்து கொள்வாய்
சொல்லி வைத்தேன் அவனுக்கு!
சூடு பட்டதனால் புரிந்திருக்கும் அவனுக்கு!
ஆம் சூடு பட்டதனால் புரிந்திருக்கும் அவனுக்கு!

Monday, October 8, 2007

மாப்பிள்ளையில்லாக் கல்யாணம்

சுப்பற்ரை பெட்டைக்கு சுண்ணாகச் சந்தைக்குப் பக்கத்தில்
பெரிய பந்தல் போட்டு கோலாகலக் கல்யாணம்
அக்கம் பக்கத்தார் உற்றார் உறவினர் யாவர்க்கும்
இது ஓர் பெரிய கொண்டாட்டம்
சுப்பற்ரை சரசுவுக்கு இப்போதான் இதமான பதினெட்டு
சுகமான லண்டன் கனவுகளில்
வளமான வாழ்க்கைக்காய் ஏங்கித் தவங்கிடந்தாள்

அத்தானின் காரினிலே அகலமான லண்டன் றோட்டினிலே
மாலை வேளைகளில் மணிக்கணக்காய் ஓடித்திரியவேண்டும்
அறிந்தவர் தெரிந்தவர் வீட்டிற்கெல்லாம்
அடிக்கடி விசிட் போகவேண்டும்
அட்டகாசமாய் லண்டனைச் சுற்றி
பல றவுண்டுகள் அடிக்கவேண்டும்
கடைகளெல்லாம் ஏறி இறங்கி
அத்தானின் காட்டினிலே கன சாமான்கள் வேண்ட வேண்டும்
இரவினில் அப்பிடி இப்பிடியான படங்களைப் பார்த்துவிட்டு
அளவில்லாமல் நித்திரை கொள்ளவேண்டும்
எண்ண அலைகள் சிறகடிக்க
அமைதியாக அமர்ந்திருந்தாள் சரசு

இரண்டு கூட்டம் மேளம் சக்கை போடு போட
பலகாரத்தட்டுக்கள் அங்கும் இங்கும் பறக்க
சூடான தேநீரை எல்லோரும் சுவைத்து அருந்த
லண்டன் மாப்பிள்ளை லங்காதரனின்
ஆள் உயரப் போட்டோ பந்தலிலே கம்பீரமாய் நின்றிருக்க
மாப்பிள்ளை வீட்டார் மலர்மாலை சகிதம்
மகிழ்ச்சியுடன் மணப்பந்தலுக்கு வருகின்றார்

இது ஓர் நவீனக் கல்யாணம்
இங்கு ஓமம் வளர்ப்பதில்லை
ஐயருக்கு இங்கேதும் வேலை இல்லை
மாப்பிள்ளை இல்லாமல் தாலி கட்டாமல்
தடல்புடலாய் நடக்கும் நவீனக் கல்யாணம்

சுருள் கேசத்துடன் சுத்தமான கோட் சூட்டுடனே
அமைதியாய் வீற்றிருந்த அவனின் அலங்காரப் போட்டோவிற்கு
நாணத்துடன் தலை குனிந்து
பக்குவமாய் மலர்மாலை தனை சூட்டிவிட்டாள் சரசு
மாமியவள் தன் கையாலே மோதிரத்தை
ஆசையுடன் பக்குவமாய் அவளின் விரலினிலே மாட்டிவிட்டாள்
நவீனக் கல்யாணம் நலமே நிறைவேற
எல்லோரும் மகிழ்ச்சியிலே திளைத்திருந்தார்

ஏயன்சிக்காற ஏகாம்பரத்திட்டை காசு கட்டி
கையைப்பிடித்து காலைப்பிடித்து கடைசியில்
கட்டுநாயக்காவிற்குப் போய் சரசுவை
ஒரு மாதிரியாய் பிளைட்டினிலே ஏற்றிவிட்டு
அப்பாடி என்று பெருமூச்சு விட்ட சுப்பர்
அமைதியான மனத்துடனே வீடு திரும்பிவிட்டார்

மொஸ்கோவில் மூன்று மாதம் நின்று
மொடேண் கேள் ஆய் மாறிய சரசு
திடீரென ஒரு நாள் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியபடி
வீட்டு வாசலிலே வந்திறங்க
சுப்பற்றை நெஞ்சம் சுக்கு நூறாக சிதைந்தே போயிற்று
அக்கம் பக்கத்தார் துக்கம் விசாரிக்க
அழுகையை அடக்கமுடியாமல் சுப்பர்
ஓய்ந்து ஒடுங்கிவிட்டார்

இரண்டு வருடங்கள் உருண்டே போயிற்று
சுப்பண்ணை அங்கை ஓடி இங்கை ஓடி
அவனைப் பிடித்து இவனைப் பிடித்து ஒருவாறு
சரசுவை லண்டனிலே கால் பதிக்க வைத்து விட்டார்
சரசு எயாப்போட்டில் வந்திறங்கி
தன் அன்பிற்குரியவரை எதிர்பார்த்து நிற்கையிலே
எங்குமே அவனைக் காணவில்லை
அங்கே பார்த்தாள் இங்கே பார்த்தாள்
சுற்று முற்றும் சுழன்று சுழன்று பார்த்தாள்
அந்த அழகான சுருண்ட கேசத்துக்குரியவனை
எங்குமே காணவில்லை
ஏக்கத்துடன் மனமுடைந்து திரும்புகையில்
கலோ என்ற குரல் கேட்டு திகைப்புற்றாள்
சுருண்ட கேசத்தை எங்கோ தொலைத்திட்ட சுப்பர் மாப்பிள்ளை
பாலைவனமான வழுக்கல் தலையுடனே நின்றிருக்க
சரசுவின் நெஞ்சம் தவியாய்த் தவித்து
கொண்ட கனவெல்லாம் கொட்டுண்டு போக
உம் என்ற முகத்துடனே அவனோடு
வீடு நோக்கிப் புறப்பட்டாள்

கடிதத்தின் வரவிற்காய் காத்திருந்த சுப்பண்ணை
காலையில் வந்திருந்த கடிதத்தை
பிரித்துப் பார்த்ததுமே மூர்ச்சித்து விழுந்திட்டார்
அவள் அப்பா பார்த்த கங்காதரன் தலை
அங்கே மாறி இருப்பதனால்
நீளத் தலைமுடியும் நீலக்கல்லில்
கடுக்கனும் போட்டிருக்கும்
நிதர்சனைக் கைப்பிடித்து
கல்யாணமும் செய்துவிட்டாள் சரசு
மூர்ச்சித்து விழுந்த சுப்பண்ணை
மூச்சுவிட மறந்துவிட்டார்.

Monday, October 1, 2007

விற்று வேண்டுகிறோம்

பொழுது போக்க ஒரு ரீவீ இல்லை

சிந்தனை வளர்க்க ஒரு கொம்பியூட்டர் இல்லை

போக வர சொந்தமாய் ஒரு காரும் இல்லை

சந்தோசமும் சிரிப்பும் கலகலப்பும்

மட்டுமே அங்கிருந்தது

அவற்றை விற்றுத்தான்

இவற்றை வேண்டுகிறோம்

இங்கு புலம்பெயர் நாடுகளில்

Sunday, September 30, 2007

தியாகி திலீபன்

திலீபன் என்றதுமே தித்திக்கும் என் மனது
சோகத்தையும் வென்றதொரு புல்லரிப்பு
என் இதயத்தில் எழுந்து வரும்
உலகத்தில் உன்னதமாய் ஓர் உயிர் பிரிந்ததென்றால்
அது அகிலத்தின் தியாகி அவன் திலீபன் இன்னுயிர் தான்
அகிம்சை என்றோர் ஆயுதத்தை கையிலெடுத்தான்
தன்னை தானே சிலுவையில் அறைந்து கொண்டான்


அன்னையர்கள் ஆறாத துயரத்தில்
தம் மார்பில் அடித்தே கதறி அழ
ஆண்களெல்லாம் தம் கண்களிலே
வழிகின்ற விழி நீரை துடைத்தெறிய
அருமைத் தம்பிகளும் அன்புத் தங்கைகளும்
பச்சிளம் குழந்தைகளும்
அண்ணா! அண்ணா! என்று அழுதிட்ட குரலோ
வானத்தை எட்டி நிற்க
தன் உயிரையும் உடலையும்
துடி துடிக்க தற்கொடையாக்கிவிட்டான்
திலீபனாய் நின்ற அவன் தியாகியாய் மாறிவிட்டான்


என்றும் அன்பான திலீபன்
எப்போதும் அகலாத புன்சிரிப்பு
மற்றவர்க்காய் மட்டும் வாழ்ந்த புனிதனவன்
எம்மவர்க்காய், எம் தமிழிற்காய், தமிழ் ஈழ மீட்பிற்காய்
தன்னையே ஈகின்ற கொடிய விரதமதை
திண்ணமதாய் செய்தே முடித்திட்டான்
தமிழர்க்கு விடுதலை வேண்டி அவன்
பெரும் தவமே செய்திட்டான்
விண்ணிலிருந்து பார்ப்பேன்
விடுதலையை என்றுரைத்தே
சென்றுவிட்டான் வெகுதூரம் எமை விட்டு


நவ இந்தியாவிடம்
நயமாய்க் கேட்டான் நீதியொன்றை
அகிம்சை சாத்வீகம் இவையல்லோ
ஆன்மீக இந்தியாவை இளக வைக்கும் என நினைத்தான்
"உன்னையே வருத்தி உணர்வுகளை அடக்கி
மாற்ற முயன்றாய் நீ அவர் மனதினையே"
வஞ்சகர்கள் நெஞ்சுக்குள் வரவில்லை இரக்கமது
எடுத்திட்டார் உன் இன்னுயிரை
வதைத்திட்டார் எம் தமிழினத்தை
தமிழ்நாட்டுத் தமிழரும் சேர்ந்தே கலங்கி நின்றார்
உன் நிலை கண்டு


காந்தி பிறந்த மண்ணில் தவறுதலாய்ப் பிறந்தவர்கள்
இங்கு தமிழீழத்தில் காந்தீயம் சாவதற்கு
அடிப்படையாய் இருந்திட்டார்
கல்லுக்குள் ஈரமுண்டு கண்டிடலாம் சில வேளை
இந்தக் கயவர் நெஞ்சுக்குள்
கடுகளவும் ஈரமில்லை
வெறி பிடித்த இந்திய ராணுவமே
வெறும் ஆயுதத்தை மட்டுமா ஒப்படைத்தார்
தமிழர் படை உன்னிடத்தில்
எம் மக்கள் உயிரையுமே ஒப்படைத்தார் உனை நம்பி
புத்தரின் புனிதர்கள் கொடியவர் என்பதனால்
காந்தியின் புதல்வர்கள் என்றல்லோ
எண்ணி உமை நாம் நம்பிட்டோம்
துரோகியாய் நீர் இருக்க
தூய நண்பனாய் உனை நினத்தோம்
அபயம் அளிக்க நீர் வருவதாய்
ஆவலுடன் எதிர்பார்த்தோம்
அன்புடன் உமை வரவேற்றோம்
ஆறுதல் தருவாய் நீ எனவே
அக மிக மகிழ்ந்திட்டோம்



பிராந்திய வல்லரசாய் உன் வன்மத்தைக் காட்ட நீ
தெரிவு செய்திட்டாய் ஈழ தேசமதை
உண்ணா நோன்பிருந்தே உம் உள்ளமதை
மாற்ற அவன் முயன்றே தோற்றிட்டான்
தமிழன் உரிமை ஒன்றும் உன் தயவால் கிட்டாது
என்றே உணர்ந்தான் எம் திலீபன்
பூண்டான் கொடிய விரதம் அவன்
நல்லூர்க் கந்தன் வீதியிலே
உணவின்றி நீரின்றி தன் நாக் காய்ந்து
உடலில் உரமின்றி நிற்கத் தயவுமின்றி
மரணத்தை நோக்கி அவன் மகிழ்வுடன் போகையிலும்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!
தமிழீழம் மலரட்டும்!
என்றே எமக்குரைத்தான்
விழிப்பாய் இருங்கள்! விழிப்பாய் இருங்கள்! என
எமை விழித்தே சொன்னான் பல தடவை


பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
பொறுக்கிகள் செய்த அநியாயம் பொறுக்குதில்லையே
பொன்னான எங்கள் தங்கத் திலீபன்
தன் உயிரையே விலை கொடுத்த கொடுமைதனை
நினைக்க நினைக்க நெஞ்சு பொறுக்குதில்லையே
கல்மனம் கொண்ட இந்திய ராணுவமே
கடுகளவும் இல்லையா கருணை உனக்கு
தாய் நாட்டுக்காரர் தருமம் அறிந்தவர்கள்
என்றேதான் நம்பிட்டோம் நாமெல்லாம்
பொல்லாத பாவிகள்
எம் மண்ணை அழித்திட்டார்
நல்ல பண்பை அழித்திட்டார்
எம் பெண்கள் கற்ப்பைப் பறித்திட்டார்
எம் திலீபன் உயிரையும் எடுத்திட்டார்


காந்தியைக் கொல்ல ஒரு கோட்சே
இங்கு எம் திலீபனைச் சாகடிக்க
ஓராயிரம் கோட்சேக்கள்
வெட்கமாயில்லை உங்களுக்கு
காந்தி உயிருடன் இன்றிருந்தால்
உம் செயல் கண்டு தன்னையே மாய்த்திருப்பார்
அன்றே உயிர் நீத்ததனால்
இன்று தப்பிப் பிழைத்துவிட்டார்


நல்லூர்க் கந்தா நான் உனைக் கேட்கின்றேன்
இது நியாயமா சொல்லுமையா
தமிழ்க் கடவுள் நீ என்றால்
தமிழர்க்காய் எம் திலீபன் உயிர் காக்க
ஏன் மறந்தாய் சொல்லுமையா


தமிழர்கள் வாழ்விற்காய்
ஈழ தேசத்தின் விடிவிற்காய்
உன் உடலை வருத்தியே
உயிர் துறந்தாய் திலீபா
மறவாது தமிழ் உலகம் உன்னை
இந்த மாநிலத்தில் தமிழ் மனிதன் உள்ளவரை

Monday, September 24, 2007

உறக்கம் கெடுக்கும் கனவுகள்

கண்ணும் கண்ணும் சந்தித்தால்
கதைகள் பேசும் சுகமாக
விண்ணும் மண்ணும்
தெரியும் சரி சமனாக
விடிய விடிய விழித்திருந்தே
காணும் ஆயிரம் கனவுகளை
உறக்கம்தான் கெடுத்துவிடும் கவனம்!

Friday, September 21, 2007

அவலம்

சாராயம் குடித்து சத்தியெடுத்து
தலை குப்பிற விழுந்த தம்பண்ணை
தட்டுத் தடுமாறி எழும்ப முடியாமல்
தவழ்ந்து போகையிலே கண்டார்
குண்டடிபட்டு காலைத் தொலைத்துவிட்ட கண்ணன்
பொய்க்கால் போடக் காசில்லாமல்
கைகளினால் தவழ்கின்ற அவலத்தை

ஆண்களுக்குச் சமத்துவம் வேண்டும்

போதும் போதும் பொறுத்தது போதும்
ஆண்களே நீங்களெல்லாம் பொறுத்தது போதும்
பொங்கி எழு ஆண்மகனே
சங்கே முழங்கு என்று பொங்கி எழு ஆண்மகனே
இழந்த உன் உரிமையை வென்று எடுக்க
பொங்கி எழு ஆண்மகனே
அன்று நீ சமையல் அறையை எட்டியும் பார்க்கவில்லை
இன்றோ சமையலிலே நீதான் முன்னணியில்
சட்டி பானை என்றால் என்னவென்றே தெரியாமால் நீ இருந்தாய்
இன்றோ சட்டி பானை கழுவுவதில்
நீதான் முதன்மையாய் இருக்கின்றாய்
டிஸ்வோசர் வேண்ட நீ முயற்சி எடுத்திட்டால்
பெண்ணோ அதை தட்டியே கழித்திடுவாள்
ஆண் சிங்கமாய் அன்று நீ இருந்தாய்
இன்றோ அடுப்பூதும் சுண்டெலியாய் நீ இருக்கின்றாய்
அம்மாவின் கையாலே அறுசுவையும் நீ உண்டாய்
இன்றோ ஐரோப்பாவில் அடுப்படியில் நீ வெந்தே சாகின்றாய்
ஆண்கள் கட்டாயம் சம உரிமை பெற்றே ஆகவேண்டும்
சமையலிலே பெண்ணும் சரி பாதி பங்கு வகித்தே தீரவேண்டும்

அன்று அம்மா அம்மா என்று தான்
அழுதன பிள்ளைகள் எல்லாமே
இன்று அப்பா அப்பா என்று அழுவது ஏனோ
பிள்ளைப் பராமரிப்பில் பெண்களுக்கும்
சம பங்கு தந்தே தீரவேண்டும்
பத்து மாதம் சுமப்பது பெண்களென்றால்
பின்வரும் பத்து வருடங்களும்
ஆண்களா பிள்ளைகளைச் சுமக்கவேண்டும்
சம்பளம் வந்தவுடன் சட்டையும் சீலையும்
வேண்டத் திரிகின்றார் பெண்களெல்லாம்
ஆண்களுக்கும் சம உரிமை வேண்டும்
அவர்களையும் மனிதர்களாய் மதிக்கவேண்டும்
அவர்களுக்கும் உடுபுடவை வேண்ட சம உரிமை வேண்டும்
கோட்டும் சூட்டும் வேண்ட அவர்களுக்கும்
நீ பணம் கொடுக்கவேண்டும்
விருந்தாளிகள் வீட்டுக்கு வருவதென்றால்
அன்று அடுப்படியில் நிற்பதெல்லாம்
ஆண்களாய் இருப்பது முற்றாக மாறவேண்டும்
விருந்தாளிகளுடன் கதை அளப்பதெல்லாம் பெண்களென்றால்
வேலை செய்வதெல்லாம் ஆண்களா
பொங்கி எழு ஆண்மகனே!
சரி பாதி உரிமைக்காய்
இன்றே போர்க்கொடி உயர்த்திடுவாய்

நகை நகையாய் வேண்டி நம் பணத்தை எல்லாம்
கழுத்திலும் கையிலும் பொத்திப் பொத்தி
வைத்திருக்கும் பெண் அவளே
ஆணுக்கும் ஆசைகள் உண்டென்று
நீ என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா
இன்றே அரைவாசி நகையை பெறுமட்டும்
போராட்டம் நடாத்திடு ஆண்மகனே!
அரைப் போத்தல் தண்ணி அடித்திட்டால்
அநியாயம் முழுக்க ஆண்தான் செய்திட்டான்
என்று பிதற்றுகின்ற பெண்ணே
நீ வேண்டும் சாறிக்கும் நகைக்கும்
அழகுசாதனப் பொருளுக்கும்
யார் தருகின்றார் பணம்
அளவாய் தண்ணி அடிப்பதற்கு
ஆண்கள் கட்டாயம் உரிமை பெற்றே ஆகவேண்டும்!
ஆணுக்குச் சமத்துவம் வேண்டி
ஐரோப்பிய நாடெல்லாம்
மூலை முடுக்கெல்லாம்
ஆண்கள் போராட்டம் நடாத்தவேண்டும்

சீறுகின்ற பெண்ணை
வீட்டில் நீ ஓர் சிரிப்பால் மழுப்புவதை
நான் நன்கறிவேன்
இழந்த ஆணின் உரிமைகளை
அகிம்சையால் வென்றெடுக்க
ஒன்று பட்டுப் போராடி வெற்றி பெறவேண்டும் நீ
உன் போராட்டம் வெற்றி பெறும்
பெண்ணுடன் சமத்துவமாய்
ஆணே கட்டாயம் நீ வாழ்ந்திடுவாய்!

Wednesday, September 19, 2007

தமிழைத் தேடி

புலம்பெயர் நாட்டினிலே
புளுகு தமிழ் கேட்டிடலாம்
நல்ல புறம் சொல்லும் தமிழ் கேட்டிடலாம்
வசை பாடும் தமிழ் கேட்டிடலாம்
நல்ல வஞ்சனை செய்யும் தமிழ் கேட்டிடலாம்
தண்ணி அடித்த பின்னே வரும்
தளதளக்கும் தமிழ் கேட்டிடலாம்
இனிய தமிழ் கேட்க எனக்கோர் ஆசை எழுந்ததனால்
முயன்றே நானும் சென்றேன் தமிழ் நாட்டிற்கு

உல்லாச விடுதி ஒன்றில்
உறைவோம் சில நாள் என்றே
சென்றேன் நானும் உள்ளேயே
காரிகை ஒருத்தி கண் அசைத்தே வரவேற்றாள்
"என்ன வேண்டும்" என்றே இனிதாய் கேட்டு நின்றாள்
அறை ஒன்று வேண்டும் என்றேன் ஆசுவாசமாய்
அதிசயமாய்ப் பார்த்த அவள்
கேட்டாள் மீண்டும் அதை "என்ன வேண்டும்"
அறை ஒன்றே வேண்டும் என்றேன்
அடிக்குமாய்ப்போல் என்னை முறைத்தே
அதே கேள்விதனை அழுத்திக் கேட்டாள்
ஆத்திரம் கொப்பழிக்கச் சொன்னேன் நான்
அறை தர முடியாதா ஆணவம் பிடித்தவளே
அறைந்தாள் என் கன்னத்தில் படீரெனவே
ஐயோ என்று நான் அலறித் துடித்திட்டேன்
என்ன இவள் அடித்தே விட்டாள் என்னை
என்ன பிழை செய்தேன் நான்
ஆற்றாமை மேலோங்க
"றூம்" தானே நான் கேட்டேன்? ஏன் அடித்தாய்
எனக்கென்றேன்
அப்படித் தமிழில் றூம் என்று கேளுமையா
அது என்ன அறை-இங்கே இதுதான் அறை என்றாள்
வெட்கித்து நின்றேன் நான் தமிழை எண்ணி
வீங்கிய கன்னமதை நீவிக்கொண்டே

நேரம் ஓடியது விரைவாக
எனது மணிக்கூடோ ஓடவில்லை இவ்வேளை
மற்றவரை மணி கேட்க என் தன் மானம் தடை போட
புதிதாய் வேண்டுவோம் மணிக்கூடு என்றே
சென்றேன் நானும் வெளியாலே
தேடி அலைந்தேன் மணிக்கூட்டுக் கடையொன்றை
கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை அக்கடையை
மனமது சோர காலது வலிக்க சலித்து நிற்கையிலே
கண்டேன் நானும் ஓர் கனவானை
மறக்காமல் கேட்டேன் நான்
மணிக்கூட்டுக்கடை எங்கேனும் உண்டா
அதிசயமாய்ப் பார்த்தே அவர் சொன்னார்
அப்படி ஒரு கடை எவ்விடமும் இல்லை
மடையா நீ என்று திட்டினேன் மனதாலே
நடந்தேன் இன்னும் சில தூரம் நம்பிக்கையுடனேயே
நல்லவராய்த் தெரிந்த இன்னோருவர்
வந்தார் என் முன்னாலே
கேட்டேன் இரக்கமதாய் அவரிடமும்
மணிக்கூட்டுக் கடையை காட்டும் எனக்கென்று
மிரண்டு போன அம் மனிதர்
தனக்குத் தெரிந்தது தமிழ் மட்டுமே என்றிட்டார்
"ஐயா" பேசுவது நானும் தமிழ்தானே
சோன்னேன் நானும் பவ்வியமாய்
அது என்ன மணிக்கூடு அந்நிய பாசை பேசாதே
கோவமாய்ப் பதில் சொன்னார்
தெரியாதா உங்களுக்கு "watch" என்றேன்
வாச்சா அப்படிப் பேசும் தமிழ் என்றார்
திகைத்தேன் நானும் திரும்பவும் ஓர்முறை
காட்டினார் கடையொன்றை இப்போது
வாங்கினேன் நானும் வாச்சொன்றை
தமிழிற்காய் மீண்டும் வெட்கித்தபடியே

அடைந்தேன் விடுதியை நானும் அலுப்புடனே
அந்தக் காரிகையே மீண்டும் வரவேற்றாள்
அமர்ந்தேன் ஓர் இடத்தில் ஆறுதலாய்
பசியோ சிறிதாய் வயிற்றைக் கிள்ள
பார்த்தேன் நானும் அக்கம் பக்கம்
கோப்பி ஒன்று தட்டில் வந்தது அழகாக
பசியை விரட்ட இதுவா எனக்கு
வந்தே சொன்னாள் அன்புடனே
சாப்பிடுங்க சார் சாப்பிடுங்க
என்னத்தைச் சாப்பிட நான்
பசியோடு உள்ளவனைப் பழிக்காதே நீ என்றேன்
பகிடிவிடாமல் சாப்பிடுங்க இதை என்றாள்
சாப்பாடே இல்லாமல் சாபிடுவதெவ்வாறு
பரிகாசம் செய்யாதே பாவம் உனக்கே என்றேன்
காப்பியைச் சாப்பிடுங்க ஆறினால் அநியாயம் தான் என்றாள்
கோப்பியைக் குடிக்கத்தான் முடியுமென்று
சத்தமாய்ச் சொல்லி என் கன்னத்தில்
நானே அடித்து விட்டேன்
இல்லை அறைந்து கொண்டேன்
தமிழிற்காய் வெட்கித்தபடியே

கோப்பியைக் குடித்துவிட்டே
கனமான சிந்தனையில் நான் இருந்தேன்
சாப்பாட்டுச் சிந்தனையை அறவே கைவிட்டு
சரியான நித்திரை ஒன்றைக் கொள்வோம் இப்போது
என்றே எண்ணி நிற்கையிலே
மீன்டும் வந்தாள்! முழி பிதுங்கியது எனக்கு
தூங்கப் போங்க இப்போ என்றாள்
அதிர்ந்து போனேன் ஐயோ என்றே அலறிவிட்டேன்
தூக்கில் தொங்க விடுவதற்கு
செய்த குற்றமென்ன சொல் என்றேன்
நேரம் என்ன தெரிகிறதா?
தூங்க வைக்கிறேன் பார் என்றாள்
நடுங்கிப் போய் நான் சொன்னேன்
நாளையே போறேன் நாட்டிற்கு
நித்திரை கொள்ள முடியுமா இப்போ நான்
கேட்டேன் படபடக்கும் நெஞ்சுடனே
அதையே சொன்னேன் தானும் என்றாள்
இருந்த தமிழும் மறந்து போக
அடுத்த நாளே வந்து சேர்ந்தேன் இவ்விடமே
தமிழிற்காய் வெட்கித்தபடியே!

Tuesday, September 18, 2007

காதலே ஓடிவிடு

காதலியே உனைக் கைபிடிக்க
என் கையை நீட்டியபடியே
உனை நோக்கி நான் வந்தேன்
ஆனால் உன் கைகளோ
இன்னொருவன் கைகளை இறுகப் பிடித்திருந்தது
அன்று செயலிழந்த என் கைகள்
இன்னும் தன் உணர்வுகளை மீளப் பெறவில்லை

காதலியே உனைப் பார்பதற்காய்
என் கால்களின் வலிமையை அதிகமாக்கி
பல மைல் தூரம் ஓடோடி நான் வந்தேன்
நீயோ சொகுசுக் காரொன்றில்
இன்னொருவனுடன் அருகே அமர்ந்திருந்தாய்
அன்று செயலிழந்த என் கால்கள்
இன்னும் ஓர் அடி கூட நகரவில்லை

காதலியே உனை அணைப்பதற்காய்
என் நெஞ்சத்தின் இனிமைகளை அதிகமாக்கி
உன் அருகே விரைவாக நான் வந்தேன்
என்ன கொடுமை இது
உன் நெஞ்சை அணைத்தபடி இன்னொருவன்
அன்று மூடிய என் நெஞ்சத்தின் உணர்வுகள்
இன்னும் உறக்கத்தில் இருந்து எழவேயில்லை

காதலியே உனை மணமுடிப்பதற்காய்
மலர் மாலை சகிதம் மகிழ்ச்சியுடன்
உன் வீடு தேடி நான் வந்தேன்
நீயோ மாற்றான் ஒருவனின் மனைவியாய் இருந்தாய்
அன்று உடைந்த என் இதயம்
எவராலும் பொருத்த முடியா அவல நிலையில்
மீண்டும் ஓர் முறை நான் காதலித்தால்
என் இதயம் அழிந்தே மாய்ந்து விடும்
காதலே ஓடிவிடு! என்னை வாழ விடு!

Monday, September 17, 2007

வாழத்தெரிந்தவன்

வாழத்தெரிந்தவன் வாயாடி வயிரமுத்து
அவன் படித்ததோ பாலர் வகுப்பு
ஆனால் கதைப்பதோ
பல்கலைக்கழக தேர்வு பற்றி
அன்பாக கதைப்பதிலே
அவனை மிஞ்ச யாருமில்லை
அலுவல் முடிந்தபின்
ஆரோபோல் அவன் போவதே ஓர் தனி அழகு

வேலைக்குப் போகிறவர் எல்லாம்
வெறும் முட்டாள்கள் என்றிடுவான்
ஐரோப்பாவில் வேலை தேடியது
அவன் எப்போதும் இல்லை
அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு
அறவே இல்லை
நாய்க்கு வேலையும் இல்லை
நடக்க நேரமும் இல்லை
வாயாடி வயிரமுத்துவிற்க்கு
எதற்குமே நேரம் இல்லை
ஓடி ஓடி அவன் அங்கும் இங்கும் திரிவதும்
அண்ணை நேரம் இல்லை
அக்கா பிறகு சந்திப்போம் என்று சொல்வதும்
எவரையும் இலகுவில் நெகிழ வைக்கும்
பாவம் வயிரமுத்து பஞ்சாப் பறக்கின்றார்
சொல்பவர்கள் ஏராளம் ஏராளம்
இப்படியும் வாழ்வா
என்று எண்ணத் தோன்றும் பலருக்கு

அரசாங்கத்தில் பெறுவதோ உதவிப் பணம்
ஆனால் கட்டுவதோ கணக்கில்லாச் சீட்டுக்கள்
வயிரமுத்துவிற்கு இதுவெல்லாம் வலு சிம்பிள்
கடன் பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்
கடன் பெற்றால் இவரிற்கோ
நெஞ்சமெல்லாம் அஸ்கிறீமாய் குளிர்ந்துவிடும்
காசிருந்தால் கை கால் ஒன்றும் சும்மா கிடவாது
வெளிக்கிடுவார் சுற்றுலா வெளிநாட்டிற்கு
ஏன் போறான் எதுக்குப் போறான்
அவனுக்கே தெரியாது இதுவெல்லாம்
வெளிநாடு போவதென்றால்
ஏகக் குசி பட்டிடுவான்
வாங்கிடுவான் பொருட்களெல்லாம் வகை வகையாய்
புறப்படுவான் மிடுக்குடனே பளபளப்பாய்

தன் வீட்டுப் பிரச்சனையோ ஆயிரம் ஆயிரம்
அடிதடிகள் கூட அங்கு தாராளம் ஆனாலும்
அக்கம் பக்கத்தார் வீட்டுப் பிரச்சனையில்
வக்கீலாய் மாறி பிரச்சனையைத் தீர்த்து வைப்பான்
தாயும் தந்தையும் தாய் நாட்டில்
தவியாய்த் தவிக்கின்றார்
இருப்பதற்கு இருந்த குடிலும்
இப்போ மழையைத் தாங்காதாம்
இங்கோ வயிரமுத்து அள்ளிப் போட்டிடுவான்
நகை நகையாய் அலுக்காமல்
மனைவிக்கும் அணிவிப்பான் அளவுக்கு மேலாலே

அவரின் பொன்மொழிகள்
இல்லை வாய்மொழிகள்
கேட்டாலே புல்லரிக்கும்
"கடன் பட்டென்றாலும் கட்டு கல்யாணம்"
"கத்துகிறவன் எவனோ அவனே அறிவாழி"
இதுதான் அவனின் தாரக மந்திரம்
வாழத் தெரிந்தவன் வயிரமுத்து!!

எந்தக் கடவுளிடம் சொல்லி அழ

பால் அபிசேகம் பழ அபிசேகம் தேன் அபிசேகம்
எல்லாம் நடக்கிறது கோவிலிலே
பாணுக்கும் பருப்புக்கும் பழைய சாதத்திற்கும்
தவம் கிடக்கிறார் பல கோடி மக்கள்
எந்தக் கடவுளிடம் சொல்லி அழ!

ஏன் மறந்தார்கள்

கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருசன்
என்றவர்கள்
மண்ணானாலும் மனைவி
தடியானாலும் தாரம்
என்று சொல்ல
ஏன் மறந்தார்கள்

தனிமையில் வெறுமை

தனிமையிலே நான் இருந்து
வெறுமைதனை உணர்ந்து கொண்டேன்
கலகலப்பாய் நாம் இருந்த காலத்தை
ஒரு கணம் எண்ணிப் பார்க்கின்றேன்
முன்னோக்கிப் போகின்ற என் எண்ணத்தை
பின்னோக்கித் திருப்புகின்றேன்

அம்மா அப்பாவின் அரவணைப்பில்
அந்த அளவற்ற சந்தோசம்
அண்ணன் தம்பியுடன் அடிபட்டு
அல்லோல கல்லோலமாய் வாழ்ந்த
அந்த வசந்த காலங்கள்
எடுத்தெறிய முயன்றாலும்
என்னுள்ளே மீண்டும் மீண்டும்
விசையாய் எழுந்து நிற்கிறது

பாடசாலையில் படித்த பாடங்கள்
அங்கே அடித்த கும்மாளங்கள்
பள்ளிக்கூடத்தை கட் பண்ணி
படம் பார்த்ததிலே கண்ட இன்பம்
இடையிடையே இனிமையாக வந்து போகும்
அந்தக் காதல் சுகங்கள்
பரீட்சை நெருங்க நெருங்க
பதறுகின்ற நமது நெஞ்சங்கள்
எல்லாமே பசுமையான நினைவுகளாய்
என்றுமே என் மனத்தில் பதிந்திருக்கும்

அக்கம் பக்கத்து வீடுகளில்
அளவான கல் எடுத்து விசையாய் விட்டெறிந்து
விழும் மாங்காய் எடுத்துத் தின்றதில்
நாம் பெற்ற மட்டற்ற மகிழ்ச்சி
இன்றும் இதயத்தே நன்றே நிறைந்திருக்கும்

கள்ளங் கபடமில்லா நல்ல நண்பர்கள்
இவர்களிடம்........
காசில்லை பெரிதாக
காரில்லை மொடேணாக
தற்புகழ்ச்சி செய்கின்ற இழிவில்லை
போட்டி இல்லை பொறாமை இல்லை
ஒழிவு மறைவு ஒன்றுமில்லை
ஆனால் இவர்களிடம்.....
பகிர்ந்துண்ணும் பண்புண்டு
பழகுவதற்கு நல்ல மனமுண்டு
அழிக்க நினைத்தாலும்
என் மனத்தை விட்டு அகலாத
இந்த நினைவலைகள்

இங்கு தனிமையிலே வெறுமை
இந்த வெறுமையினை
பொல்லாத தனிமையினை
அகற்றவென்று தேடுகின்றேன் மனிதர்களை
கண்டால் எனக்கும் ஒருக்கால்
கட்டாயமாய்ச் சொல்லுங்கோ

கள்ளுக்கொட்டில்

தம்பற்றை கள்ளுக்கொட்டிலிலை
சரியான சனக்கூட்டம்
இளையவர் பெரியவர் இளந்தாரிப் பெடியன்கள்
எல்லோரும் இங்கு சரிசமன் தான்
சமத்துவம் என்பது
சரியாகக் கடைப்பிடிக்கப் படுவதும் இங்கேதான்
தன் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ள
தடுத்திடுவார் சிலபேரை முத்தண்ணை
தடுத்த அந்தச் சில பேரிடமே
கையேந்திக் கள்ளுக் குடிப்பார் அந்தண்ணை
பகுத்தறிவென்பது கள்ளிலிருந்துதானோ பிறக்கிறது

ஆண்கள் மட்டும்தான்
இங்கே அனுமதிக்கப் படுவதனால்
எல்லோரும் இங்கே மன்னர் தான்
ராணி இல்லாத ராயாக்கள்
இவர்கள் பாடு கொன்டாட்டம் தான் இங்கு
வீட்டில் வாயே திறக்காத முத்தண்ணை
இங்கே வந்துவிட்டால் முழுநேரப் பேச்சாளர்
அரசியலில் இருந்து தன் வீட்டு அந்தரங்கம் வரை
அவிட்டு விடுவார் அருமையாக முத்தண்ணை
கேட்போரெல்லாம் மெய்மறந்து
சொக்கித்துப் போய்விடுவார்

வீட்டிலே மனிசிக்குப் பயந்த முத்தண்ணை
கள்ளைக் கொஞ்சம் அடித்ததுமே
முழு வீரனாய் மாறிடுவார்
இண்டைக்கு வீட்டை போய்
அவளின்ரை வாயை அடக்கிறேன் பார் என்பார்
ஊத்தடா இன்னொண்டு என்று சொல்லி
அவர் குடிக்கும் அழகே ஓர் தனி அழகு
அக்கம் பக்கத்தார் ஆரேனும் இருக்கினமா
ஆழ்ந்து பார்த்துத்தான்
வீராப்புப் பேசிடுவார் முத்தண்ணை
அரசியல் விவாதமெல்லாம் இங்கேதான்
அக்கு வேறு ஆணி வேறாய் அலசி ஆராய்வார்
அமெரிக்காவில் ஆட்சியை மாற்றக் கூட
இங்கே திட்டங்கள் தீட்டிடுவார்
கள்ளுக்கொட்டிலிலே அரசியல் பேசிய முத்தண்ணை
பெற்றதோ அரசாங்கத்தில் மந்திரிப் பதவி
அனைத்தின் வளர்ச்சிக்கும்
கள்ளுக் கொட்டில்தான் ஆதாரம்
என்பதே அவரின் வாதம்
Five Star Hotel இலை விஸ்க்கி குடித்தாலும்
பிளாவிலே கள்ளை எடுத்து
குவிந்திருக்கும் எறும்பு பூச்சிகளை
அலாக்காக தட்டி எறிந்து விட்டு
அதை உறிஞ்சிக் குடிக்கும் இன்பம்
எங்கே வருமென்பார் முத்தண்ணை
கலம்பிலும் காமட்சி கள்ளுக் கடையை
திறந்து வைத்தே புகழ் ஏணியின்
உச்சிக்கே போய் விட்டார் இந்தண்ணை

சுவீடனுக்கு வந்த அண்ணர்
கள்ளுக் கொட்டிலைக் காணாது
கலங்கியே போய்விட்டார்
கடைசிக் காலத்தில் கள்ளில்லாமல்
காலம் தள்ளுவதெப்படி என்றே
சோர்ந்துவிட்ட முத்தண்ணைக்கு
கனடாவில் கள்ளுக் கடை திறந்த செய்தி
இன்பத்தை அளித்திடவே
அங்கே மாற்றிவிட்டார் தம் இருப்பிடத்தை
"கள்ளில்லா வாழ்வு பாழ்
கள்ளுக் கொட்டில் இல்லாத நாடு பாழ்"
இதுவே முத்தண்ணையின் தத்துவம்.

என் அம்மா

உன்னை உருக்கி உடலை வருத்தி
என்னை இவ்வுலகில் ஈன்றெடுத்த
என் அம்மாவே
உனக்காக ஓர் கவிதை
இன்னும் படைக்கவில்லை
ஏன் என்று எனக்கே புரியவில்லை
என்னுள்ளே கலந்து நீயும் நானாக இருப்பதனால்
தனியாக உனக்காய் கவிபடைக்க முடியவில்லை
காரணமோ?
எழுத வேண்டும் பல கவிதை உனக்காக
என்றே என் மனம் எண்ணும் பல வேளை
கவிதையையும் முந்தும் என் கண்ணீர்
அணைபோட்டு விடும் என் கவிதைகளை
என் கண்ணீரே சொல்லும் ஓர் ஆயிரம் கவிதை
உனக்கு மட்டுமே கேட்கும் அக் கவிதை

அம்மா என்று அழைக்கையிலே
பொங்குகின்ற ஆனந்தம்
அகிலத்தில் எங்கேனும் கிடைக்குமா சொல்லுங்கள்
அன்பு என்றால் என்னவென்றே
அறியாத கயவர்கள்
வாழ்கின்ற இவ்வுலகில்
அன்பையே வாழ்க்கையாய் அர்ப்பணித்து
வாழ்ந்துவிட்டாய் எமக்காக

என் அம்மாவை நினைத்தவுடன்
என் உள்ளம் பாலாய்க் குளிர்ந்து விடும்
அம்மா! அம்மா! என்றே அழைக்கவேண்டும்
இன்னும் பல முறை என்றோர் உணர்வு
உன் உள்ளத்தின் ஆழத்தை
இப்போதான் என்னால் எட்ட முடிகிறது
உனக்காக வாழாது எமக்காக வாழ்ந்து
இன்று வானத்தே உறைகின்ற என் அம்மாவே
உன்னை எண்ணிப் பார்க்கையிலே
என் மனதில் ஓடுகின்ற எண்ணங்கள்
ஒன்றா இரண்டா எடுத்துரைக்க
ஓர் ஆயிரம் எண்ணங்கள்
எல்லாமே என் இதயத்துள் ஆழப் பதிந்திருக்கும்

உன்னை நினைக்கையிலே
என் கண்களிலே சொரிகின்ற கண்ணீர்
உன்னைப் பிரிந்த சோகத்தின் வெளிப்பாடா...இல்லை
அன்பின் அறிகுறியாய் ஆனந்தக் கண்ணீரா?
எனக்கு எதுவென்றே புரியவில்லை
சொல்லித்தர நீயுமில்லை
எங்களுக்காய் உன் இதயத்தைப் பிழிந்து
இரத்தத்தைக் கொட்டி நெஞ்சத்தை அழித்து
எமக்காக வாழ்ந்த அம்மாவே
உனக்காகவும் நீ சிறிது வாழ்ந்திருந்தால்
என் இதயத்தின் சுமை சிறிதேனும் குறைந்திருக்கும்

"அ" சொலிக்கொடுத்த அம்மாவே
நீ அழுவதற்கும் கொஞ்சம் விட்டிருக்கக் கூடாதா
அன்பாக எனக்கு உணவளித்தாய்
ஆடை அணியெல்லாம் நீயே எனக்களித்தாய்
உன் கையாலே குழைத்த சாதம்
அதை உண்கையிலே ஏற்படும் பெரு மகிழ்ச்சி
அகிலத்தில் எங்கேனும் உண்டா அந்த ருசி உணவுகளில்
சிக்கனமாய் சிறப்பாக வாழ்ந்தாய் நீ
சிறுகச் சிறுகச் சேமித்தே
செய்தாய் எமக்காய் எல்லாமே
வேலை எல்லாம் நீயே செய்தாய் வீட்டினிலே
படிக்கவைத்தாய் எம்மை நல்லாவே
இவ் உலகையே சுற்றி வந்தாலும்
பெறமுடியா இன்பத்தை பெற்றிடலாம்
உன்னை ஓர் முறை சந்தித்தால்
ஆண்டவனே முடியுமா உன்னால்
என் அன்பு அம்மாவை
தரமுடியுமா என்னிடமே?