Sunday, December 23, 2007

என் அப்பா (ஐயா)

அடக்கமான என் அப்பா
கண்டிப்பாய் இருந்தாலும்
கருணையின் வடிவம் அவர்
உழைக்கின்ற பணமனைத்தும்
கொடுத்திடுவார் அம்மாவின் கையினிலே
சும்மா இருக்கமாட்டார் ஓர் நேரம்
பந்தம் பிடிப்பது பந்தா காட்டுவது
சுத்தமாகப் பிடிக்காது என் அப்பாவிற்கு

பிள்ளைகள் படிக்கவேண்டும் நல்லாக
பார்க்கவேண்டும் உத்தியோகம் பெரிதாக
எந்நாளும் சொல்லிடுவார் எம்மிடமே
சயிக்கிளிலே சென்றிடுவார் பல தூரம்
எம்மையும் அழைத்துச் சென்றிடுவார் சிலநேரம்
தனிமையாய் சென்று அமைதியாய் நின்று
வணங்கிடுவார் கடவுளரை நிம்மதியாய் எந்நாளும்

தானுண்டு தன் குடும்பம் உண்டு
என்றே இருந்திட்டார்
நீதி கேட்க ஐயாவிடம் வருபவர்கள்
நிம்மதியாய் வீடு திரும்பிடுவார்
அல்லும் பகலும் உழைத்தாலும்
அந்திம காலத்தே நோய் அவரை வாட்டியதே
பிள்ளைகளின் அன்பும் பரிவும்
பக்கத்தே எந்நேரமும் இருந்தே பார்த்திட்ட
என் அம்மாவின் அரவணைப்பும்
நிட்சயமாய் உன் நோயின் தாக்கத்தை தணித்திருக்கும்
ஐயா உம்மை நாம் பிரிந்திட்டோம்
குடும்பத்தின் குலவிளக்காய்
நீ எமக்காக வாழ்ந்ததனை
மறக்கமாட்டோம் எந்நாளும்
எம்முடனே நீ என்றும் வாழ்கின்றாய்.

No comments: