Sunday, October 28, 2007

ஏன் இந்தத் தலைக்குனிவு

தலை குனிந்தபடியே வந்த தங்கம்மாவை
தற்செயலாய் சந்தித்தேன் சுவீடன் கடைத்தெருவில்
நாட்டிலே தங்கம் குமராய் இருக்கையிலே
தலை நிமிர்ந்து நடப்பாள் ஓர் வீர நடை
எவருக்கும் அடிபணியோம் நாம் பெண்கள்
என்று சொல்லியே தீரமுடன் வலம் வருவாள்
இங்கே மட்டும் என்ன தலைக்குனிவு
ஏன் இந்தத் தலைக்குனிவு.....
ஆணுடன் பெண்ணும் சரி சமனாய் வாழும்
இந் நாட்டில் ஏன் இந்தக் கோலம்?
ஏன் இந்தத் தலைக்குனிவு!
ஒன்றுமே புரியவில்லை எனக்கு
ஆவலை அடக்க முடியாமல் கேட்டேன் தங்கத்தை
ஏன் இந்தத் தலைக்குனிவு?

கேட்டதும் வந்ததே கோபம் பொத்துக்கொண்டு
எப்போ வந்தாய் நீ சுவீடனுக்கு
என்ன கேள்வி கேட்டாய் நீ என்னைப் போய்
எவ்வளவைத் தாங்கி எத்தனையைச் சுமந்து
நம் பெண்கள் இருக்கின்றார் இங்கு
தலை நிமிர முடியுமா நம்மால்?
நாட்டிலே இருந்து இப்போ வந்ததினால்
நிமிர்கிறதோ உனது தலை?
வாழ்ந்து பார் இந் நாட்டில் சில காலம்
நிமிர்ந்த தலை குனிந்து கொள்ளும்
வீர நடை சோர்ந்து போகும்
சொல்லி நின்றாள் தங்கமவள்

பெண்களின் உரிமைக்குப் பேர் எடுத்த சுவீடன் என்று
கனவுகளைச் சுமந்துகொண்டே வந்தேன் நானும் இங்கு
தங்கத்தின் கதை கேட்டு தளர்ந்து போனேன்
என் கனவெல்லாம் உடைந்தே போய்ச்சு
ஒன்றுமே புரியவில்லை எனக்கு
இங்கேயும் அடிமையாய் தலை குனிந்து வாழ்வதா?
எங்கே போனாலும் எம் பெண்கள் அடிமைதானா?

உள்ளூரப் பயம் ஒன்று
வாட்டி வதக்கியது என்னுள்ளே
கற்பனைகள் பலவோடு
காலடி எடுத்து வைத்தேன் நான் இங்கு
இந் நாட்டில் என்ன பயம்?
தலை நிமிர்ந்து போனால்
நம் தரம் கெட்டுப் போகுமா இங்கு?
அடிமை விலங்கொடிக்க அரும்பாடு படுகின்றார்
மகளிர் அங்கு தமிழ் ஈழத்தில்
அடிமையாய் வாழ்வதா நாம் இங்கே
தலி குனிந்து வாழ்வதற்கா
புலம் பெயர்ந்தோம் நாம் எல்லாம்
ஆயிரம் கேள்விகள் மனதுள்ளே எழுந்து வர
ஆத்திரமாய் நான் கேட்டேன்
அடக்குமுறை ஆண்கள் உள்ளனரா இன்றும்
போராட்டம் தொடங்கிடுவோம்
தலை நிமிர்ந்து வாழ்ந்திடுவோம்

பலமான சிரிப்புடனே பவ்வியமாய் சொன்னாள் தங்கம்
தலைக்குனிவு வந்ததிற்கு
நம் பெண்கள் தான் அடிப்படையே
வயதுக்கோர் பவுணில் தாலிக்கொடி போடாட்டில்
புலம்பெயர் நாட்டில் வக்கில்லாப் பெண்ணென்று
நையாண்டி செய்திடுவார் நம் பெண்கள்
அத்தானை வெருட்டித்தான்
ஐம்பதிலே செய்தேன் தாலிக்கொடி
இன்று தலை நிமிர்த்த முடியாமல்
அலைக்களிந்து திரிகின்றேன்
தலை நிமிர முடியுமா என்னால்?

Monday, October 22, 2007

வெளிக்கிடடி தமிழ் ஈழத்ற்கு

போதுமடி போதும்! இவ்வளவும் போதும்!
நாட்டிலை நானிருந்தால் இப்போ
நல்ல சருகை வேட்டி கட்டி சால்வையை முறுக்கி
வீர நடை நடந்திருப்பேன்
இங்கேயோ நீளக் கால்ச்சட்டை
நிக்கவே விடுகுதில்லை
அதுக்கை ஒரு சப்பாத்து
காலை நசுக்கி நுள்ளித் தொல்லை தருகிறது
அண்டைக்கு வேட்டியைக் கட்டச் சொன்னாய்
கடுங் குளிரிலை எல்லாமே விறைச்சுப் போச்சு
டாக்குத்தரிட்டை மருந்துக்குப் போனால்
அடுத்த சமருக்குத்தான் விறைப்பெடுபடுமாம்
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு
இப்பவே வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

ஊரிலை இருந்தோம் நாம் எப்படி ஒற்றுமையாய்
அங்கே வருத்தம் எண்டு நான் படுத்தால்
பாக்கவெண்டு வரும் சனக் கூட்டம்
இங்கை வருத்தம் எண்டு நான் படுக்க
நல்ல பிளான் போடுறேனாம்! காசெடுக்கப் போறேனாம்!
சொல்லிறாங்கள் நாக்கூசாமல்
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு
இப்பவே வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

ஈழத்தில் பெண்கள்தான் போராட முன்னணியில்
இங்கேயோ அடுத்தவன்ரை குடும்பத்தை
அவதூறாய்ப் பேசுவதில் அவர்கள்தான் முன்னணியில்
வதந்தி கொண்டோட வாச்சிருக்கு இவர்களுக்கு
சில ஆண் துணைகள்
இதுகளோடை வாழப் பிடிக்கவில்லை எனக்கு
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!
இப்பவே வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

உதவி புரிவோர்கள் உள்ளார்கள்
எம்நாட்டில் பெருமளவில்
அலட்டிக் கொள்வதில்லை அவர்கள் பெரிதாக
இங்கோ சிறிதாக உதவி செய்தாலும்
தம்பட்டமடித்தே தம்மைப் புகழ்ந்திடுவார்
காலை மாலையென கதைத்தே
எமை வதைத்திடுவார்
காணுமிந்த வாழ்க்கை
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!
இப்பவெ வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

கார் உண்டு, வீடுண்டு
கனமான தங்க நகைகள் உண்டு
தொலைக்காட்சியுண்டு
பல ரகமான தொலைபேசிகளுமுண்டு
கணனியுண்டு கமராக்கள் பலவுண்டு
இன்னும் உண்டு எல்லாமே இங்குண்டு
இருந்தென்ன? மனத்தில் இல்லாததொன்றுண்டு
அதை நாடிப் போகின்றேன் நான் தமிழ் ஈழம்
உனக்கும் விருப்புண்டால்
வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!
இப்பவே வெளிக்கிடடி தமிழ் ஈழத்திற்கு!

Sunday, October 21, 2007

பொய்க் காதல்

நான் உன் அன்புக்காய் ஏங்கினேன்
நீயோ என்
அழகுக்காய் ஏங்கினாய்
நான் உன்
இதயத்தின் ஆழத்தை தேடினேன்
நீயோ என்
உடம்பில் பொன்னை தேடினாய்
நான் உன்னிடத்தில்
உள்ளத்தை தேடினேன்
நீயோ என்னிடத்தில்
உதட்டை தேடினாய்
நான் உன்
குணத்தை நோக்கினேன்
நீயோ என்
பணத்தை நோக்கினாய்
நான் உன்
நாணயத்தை எதிர்பார்த்தேன்
நீயோ என்
சீதனத்தை எதிர்பார்த்தாய்
உண்மைக் காதல் வாழ வேண்டும்
உன் பொய்க்காதல் சாகவேண்டும்
முடிவெடுத்தேன் நான் முடிவாக
உண்மைய்க் காதலுக்காய்
தூர எறிந்திட்டேன்
உன் பொய்க் காதலையே!
உன்னையும் தான்!

Sunday, October 14, 2007

வெள்ளைக்காதல்

வேலையில்லாக் கந்தனுக்கு
வெள்ளையிலே ஓர் தனிப்பிடிப்பு
அப்பா அம்மா பார்த்த பெண்களெல்லாம்
அற்பமாய்த் தெரிந்தார்கள் அவனுக்கு
கொழுத்த சீதனத்துடன் கொண்டு வந்தார்
அப்பா ஓர் பெண்பிள்ளை
குணத்திலே தங்கமான பெண்ணொன்றை
தன்னோடு கூட்டிவந்தார் அவன் அம்மா
பணமும் குணமும் பட்டிக்காட்டான்
பேசும் பேச்சுக்கள் தெரியாதா உங்களுக்கு
வெள்ளையாய் பெண்ணொன்று வேண்டுமென்றான்
வேலையில்லாக் கந்தன்
கறுத்த பெண்ணைக் கைப்பிடித்தால்
கருமம் பிடித்த வாழ்க்கைதான் மிஞ்சுமென்றான்
வெளிநாட்டுக்குப் போனவங்கள்
வெள்ளைகாரியையே கொண்டுவாறாங்கள்
நானும் போறேன் வெளிநாடு
நாட்டுக்கு வாறேன் வெள்ளையோடு
சொல்லிப்புறப்பட்டான்
வேலையில்லாதோர் ஓடும் வெளிநாட்டிற்கு

குளிரும் கூதலுமாய் காலநிலை
கும்மிருட்டு எங்கு பார்த்தாலும்
கடவுளை மனத்தில் வைத்தபடி
காலடி எடுத்து வைத்தான் வெளிநாட்டினிலே
பாசை ஒன்றும் புரியவில்லை அவனுக்கு
பாடசாலைக்குப் போகட்டாம் படிப்பதற்கு
இதுதானோ விதியென்று போனான் பள்ளிக்கு
படிப்பொன்றும் ஏறவில்லை என்றாலும்
பக்கத்து வகுப்பு பமீலாவுடன்
பரிச்சயம் மட்டும் ஏற்பட்டதவனுக்கு

கந்தன் இப்போ கன்டோவாய் மாறிவிட்டான்
கருப்புத்தான் என்றாலும் வெள்ளைக்காரன் தான் நானென்றான்
மாட்டுவண்டியை அவன் மறந்தான்
மாடாய் உழைத்த தன் தந்தையையும் அவன் துறந்தான்
அம்மா என்ற அன்புத் தெய்வத்தை
அடிக்கடி பணம் கேட்கும் தொல்லை என்றான்
பகிர்ந்துண்ணும் பண்பாட்டை பட்டிக்காடென்றான்
வகுப்பில் பமீலாவை தன் பக்கத்தே இருத்தி
பலமான முத்தங்கள் கொடுத்திடுவான்
சில நேரம் நஸ்சாக சில்மிசமும் செய்திடுவான்
வெள்ளைப் பொம்பிளையள் வாழப்பிறந்ததுகள்
எங்கடை பொம்பிளையள் வாய்காட்டப் பிறந்ததுகள்
சொல்லிடுவான் நாக் கூசாமல்

எட்டு முழத்தில் இப்பவும் சேலை உடுக்குதுகள்
எங்கடை பொம்பிளையள் வெளிநாட்டில்
தண்ணி அடித்தால் தரம் கெட்டுப் போகுமாம் தங்களுக்கு
டிஸ்கோ போவது டிசிப்பிளீன் இல்லையாம்
வாழ்வை ரசிக்க வக்கில்லாத பிறப்புக்கள்
இதுகளைக் கைப்பிடித்தால் பாழாகும் வாழ்வென்று
வெள்ளையுடன் இன்பமாய் வாழ முடிவெடுத்தான்
வெளிப்படையாய் பல இரவு பரீட்சித்து பார்த்தபின்பு
பமீலாவை கைப்பிடித்தான் கன்டோவாய் மாறிய கந்தன்

ஒளிவில்லை மறைவில்லை ஒற்றுமைக்கும் குறைவில்லை
ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் ஏதுமில்லை
ஆளுக்குச் சரிபாதி என்ற சமத்துவ சமுதாயம்
இதுவல்லோ வாழ்க்கையென்று இன்புற்று இருக்கையிலே
இடியாய் விழுந்ததோர் செய்தி!
கறுவல் ஒருவனிடம் கள்ளத் தொடர்பாம் பமீலாவிற்கு
கண்டிப்பாய் கேட்டான் கன்டோ
"வெட்கமாய் இல்லை உனக்கு"
ஆம் வெட்கம்தான்! உன்னைப்போல் உலகம் புரியாதவனை
கலியாணம் செய்தது வெட்கம்தான்!
வெட்டொன்று துண்டிரண்டாய் அட்டகாசமாய்
பதிலளித்தள் பமீலா
வெள்ளையைத் தேடி தான் போக
வெறும் கறுவலை நாடி வெள்ளை போவதேனோ!
ஓடி வந்தான் என்னிடத்தில், அழுகையுடன்

காலிலே போடுகின்ற கறுப்புச் சப்பாத்து
கண்ணுக்கழகாய் இருப்பதுவும் தெரியாதோ?
கருங்கூந்தல் வேணுமென்று
கன்னியர்கள் கலங்குவதுவும் உனக்குத் தெரியாதோ?
கன்டோவே கந்தனாய் நீ மாறிவிடு
உடல் கறுப்பென்றாலும்
உள்ளம் வெள்ளை கொண்டவர்கள் நம் பெண்கள்
உன்னையே திருத்தி உருவாக்கும் சக்தியுண்டு அவர்கட்கு
மன்னிக்கும் குணம்கொண்ட மனிதர்கள் எம் பெண்கள்
மடத்தனம் வேண்டாம் இனியும்
மடல் ஒன்று வரைந்திடு உன் அம்மாவிற்கு
கயமை புரிந்தவர்க்கும் கருணை காட்டும் பெண்கள்
இன்றும் உள்ளார் எம் நாட்டில்
அம்மா சொல்பவளை ஏற்றுக்கொள்
அன்பாய் குடும்பத்தை நடாத்திவிடு
வெள்ளை உள்ளத்தை கண்டு கொள்வாய்
வெள்ளைக் காதல் என்னவென்று புரிந்து கொள்வாய்
சொல்லி வைத்தேன் அவனுக்கு!
சூடு பட்டதனால் புரிந்திருக்கும் அவனுக்கு!
ஆம் சூடு பட்டதனால் புரிந்திருக்கும் அவனுக்கு!

Monday, October 8, 2007

மாப்பிள்ளையில்லாக் கல்யாணம்

சுப்பற்ரை பெட்டைக்கு சுண்ணாகச் சந்தைக்குப் பக்கத்தில்
பெரிய பந்தல் போட்டு கோலாகலக் கல்யாணம்
அக்கம் பக்கத்தார் உற்றார் உறவினர் யாவர்க்கும்
இது ஓர் பெரிய கொண்டாட்டம்
சுப்பற்ரை சரசுவுக்கு இப்போதான் இதமான பதினெட்டு
சுகமான லண்டன் கனவுகளில்
வளமான வாழ்க்கைக்காய் ஏங்கித் தவங்கிடந்தாள்

அத்தானின் காரினிலே அகலமான லண்டன் றோட்டினிலே
மாலை வேளைகளில் மணிக்கணக்காய் ஓடித்திரியவேண்டும்
அறிந்தவர் தெரிந்தவர் வீட்டிற்கெல்லாம்
அடிக்கடி விசிட் போகவேண்டும்
அட்டகாசமாய் லண்டனைச் சுற்றி
பல றவுண்டுகள் அடிக்கவேண்டும்
கடைகளெல்லாம் ஏறி இறங்கி
அத்தானின் காட்டினிலே கன சாமான்கள் வேண்ட வேண்டும்
இரவினில் அப்பிடி இப்பிடியான படங்களைப் பார்த்துவிட்டு
அளவில்லாமல் நித்திரை கொள்ளவேண்டும்
எண்ண அலைகள் சிறகடிக்க
அமைதியாக அமர்ந்திருந்தாள் சரசு

இரண்டு கூட்டம் மேளம் சக்கை போடு போட
பலகாரத்தட்டுக்கள் அங்கும் இங்கும் பறக்க
சூடான தேநீரை எல்லோரும் சுவைத்து அருந்த
லண்டன் மாப்பிள்ளை லங்காதரனின்
ஆள் உயரப் போட்டோ பந்தலிலே கம்பீரமாய் நின்றிருக்க
மாப்பிள்ளை வீட்டார் மலர்மாலை சகிதம்
மகிழ்ச்சியுடன் மணப்பந்தலுக்கு வருகின்றார்

இது ஓர் நவீனக் கல்யாணம்
இங்கு ஓமம் வளர்ப்பதில்லை
ஐயருக்கு இங்கேதும் வேலை இல்லை
மாப்பிள்ளை இல்லாமல் தாலி கட்டாமல்
தடல்புடலாய் நடக்கும் நவீனக் கல்யாணம்

சுருள் கேசத்துடன் சுத்தமான கோட் சூட்டுடனே
அமைதியாய் வீற்றிருந்த அவனின் அலங்காரப் போட்டோவிற்கு
நாணத்துடன் தலை குனிந்து
பக்குவமாய் மலர்மாலை தனை சூட்டிவிட்டாள் சரசு
மாமியவள் தன் கையாலே மோதிரத்தை
ஆசையுடன் பக்குவமாய் அவளின் விரலினிலே மாட்டிவிட்டாள்
நவீனக் கல்யாணம் நலமே நிறைவேற
எல்லோரும் மகிழ்ச்சியிலே திளைத்திருந்தார்

ஏயன்சிக்காற ஏகாம்பரத்திட்டை காசு கட்டி
கையைப்பிடித்து காலைப்பிடித்து கடைசியில்
கட்டுநாயக்காவிற்குப் போய் சரசுவை
ஒரு மாதிரியாய் பிளைட்டினிலே ஏற்றிவிட்டு
அப்பாடி என்று பெருமூச்சு விட்ட சுப்பர்
அமைதியான மனத்துடனே வீடு திரும்பிவிட்டார்

மொஸ்கோவில் மூன்று மாதம் நின்று
மொடேண் கேள் ஆய் மாறிய சரசு
திடீரென ஒரு நாள் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியபடி
வீட்டு வாசலிலே வந்திறங்க
சுப்பற்றை நெஞ்சம் சுக்கு நூறாக சிதைந்தே போயிற்று
அக்கம் பக்கத்தார் துக்கம் விசாரிக்க
அழுகையை அடக்கமுடியாமல் சுப்பர்
ஓய்ந்து ஒடுங்கிவிட்டார்

இரண்டு வருடங்கள் உருண்டே போயிற்று
சுப்பண்ணை அங்கை ஓடி இங்கை ஓடி
அவனைப் பிடித்து இவனைப் பிடித்து ஒருவாறு
சரசுவை லண்டனிலே கால் பதிக்க வைத்து விட்டார்
சரசு எயாப்போட்டில் வந்திறங்கி
தன் அன்பிற்குரியவரை எதிர்பார்த்து நிற்கையிலே
எங்குமே அவனைக் காணவில்லை
அங்கே பார்த்தாள் இங்கே பார்த்தாள்
சுற்று முற்றும் சுழன்று சுழன்று பார்த்தாள்
அந்த அழகான சுருண்ட கேசத்துக்குரியவனை
எங்குமே காணவில்லை
ஏக்கத்துடன் மனமுடைந்து திரும்புகையில்
கலோ என்ற குரல் கேட்டு திகைப்புற்றாள்
சுருண்ட கேசத்தை எங்கோ தொலைத்திட்ட சுப்பர் மாப்பிள்ளை
பாலைவனமான வழுக்கல் தலையுடனே நின்றிருக்க
சரசுவின் நெஞ்சம் தவியாய்த் தவித்து
கொண்ட கனவெல்லாம் கொட்டுண்டு போக
உம் என்ற முகத்துடனே அவனோடு
வீடு நோக்கிப் புறப்பட்டாள்

கடிதத்தின் வரவிற்காய் காத்திருந்த சுப்பண்ணை
காலையில் வந்திருந்த கடிதத்தை
பிரித்துப் பார்த்ததுமே மூர்ச்சித்து விழுந்திட்டார்
அவள் அப்பா பார்த்த கங்காதரன் தலை
அங்கே மாறி இருப்பதனால்
நீளத் தலைமுடியும் நீலக்கல்லில்
கடுக்கனும் போட்டிருக்கும்
நிதர்சனைக் கைப்பிடித்து
கல்யாணமும் செய்துவிட்டாள் சரசு
மூர்ச்சித்து விழுந்த சுப்பண்ணை
மூச்சுவிட மறந்துவிட்டார்.

Monday, October 1, 2007

விற்று வேண்டுகிறோம்

பொழுது போக்க ஒரு ரீவீ இல்லை

சிந்தனை வளர்க்க ஒரு கொம்பியூட்டர் இல்லை

போக வர சொந்தமாய் ஒரு காரும் இல்லை

சந்தோசமும் சிரிப்பும் கலகலப்பும்

மட்டுமே அங்கிருந்தது

அவற்றை விற்றுத்தான்

இவற்றை வேண்டுகிறோம்

இங்கு புலம்பெயர் நாடுகளில்