Tuesday, November 24, 2009

கொடுமை இது! பகற் கொள்ளை இது!

என் இதயத்தை
ஓர் சம்மட்டியால் ஓங்கி
அடிப்பது போல் ஓர் உணர்வு
கல் நெஞ்சக்காரர்களா
நாம் மனிதர்?
கருணை அன்பு எதுவுமே
புரியாத அற்பப் பதர்களா
நாம் எல்லாம்?
ஓர் ஆயிரம் கேள்விகள்
விடை தெரியாது விக்கித்து நின்றேன்
வெட்கத்துடனேயே

மாட மாளிகை போன்றதோர் வீடு
அங்கு ஓர் பசு மாடு
கழுத்தில் கயிறு கட்டி
தொட்டிலில் சிறைப்பட்டிருந்தது
பாவம் அது.....
இங்கோர் தொட்டிலில்
தாய்ப் பசு
கண்ணுக்கெட்டாத் தூரத்தில்
அதன் கன்றுக் குட்டி
என்ன கொடுமை இது?
தன் தாய்ப் பாலைக்
குடிக்கத் தடுப்பதற்காய்
இந்தச் சிறைவாசம்

தலை முழுகிப் பொட்டிட்டு பூச்சூடி
வந்த வீட்டின் தலைவி
தருகின்றாள் விடுதலை
கன்றுக்குட்டிக்கு.....
துள்ளிக் குதித்து மகிழ்வுடனே ஓடிவந்து
தன் தாயின் முலையிலே
குடிக்கிறது பாலை மகிழ்வுடனே
என்னவோர் அநியாயம்
இடை நடுவே
கன்றை இழுத்தெடுத்து
தாயின் முகத்தருகே
நிற்கவைத்து
கறக்கின்றாள் களவாக
பசுவின் பால்தனையே
என்ன கொடுமை இது
பகற் கொள்ளை இது

கறந்த பாலுடனே
செல்கின்றாள் கோவிலுக்கு
பக்தி பரவசமாய் தருகின்றாள்
பால்தனையே ஐயரிடம்
அமோகமாய் நடக்கிறது
அபிசேகம்
அரோகரா சத்தம் வானைப் பிளக்கிறது
இங்கே பக்தர்கள்
தீர்த்தமாய் பாலைக் குடித்துக் கொண்டிருக்க
அங்கே கன்றுக்குட்டி பசியுடன்
தாயின் அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறது
மனிதனுக்கு மட்டுமா
தாய் பிள்ளைப் பாசம்?

Friday, November 6, 2009

தூக்கமில்லா இரவுகள்

நள்ளிரவு கண் விழித்தேன்
அப்பா அப்பா என்ற குரல் கேட்டு
அழுது துவண்டாய்
நோத் தாங்காமல் என் மகளே

என்....
கண்கள் அழுதன‌
கண்ணீர் சொரிந்தது
இதயம் கனத்தது
இரத்தம் உறைந்தது
இரவு அப்படியே இருந்தது
பகல் தொலைந்தது
உன் துயர் கண்டு
பார்வை மங்கிப் போனது
தூக்கமில்லா இரவுகள்
இன்பமில்லாப் பொழுதுகள்
எதையும் செய்யவில்லை
நான் நானாக....
அந்த ஓர் மாதம்...

என் அருமை மகளே
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் உள்ளம் வடிக்கும்
இரத்தக் கண்ணீரை
நீ கலங்கி நான் பார்த்தால்
என் இதயம்
உடைந்துவிடும் சுக்கு நூறாக‌
காலையிலும் மாலையிலும்
உன் கனிவான முகத்தை
பார்த்தே நாம் மனம் மகிழ்வோம்
நீ இல்லா ஒவ்வோர் நிமிடமுமே
எம் வீட்டில் ஓர் யுகமாகும்
ஓர் மாதம் நீ பட்டாய் வேதனைகள்
ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டே
இயற்கையின் சோதனையோ
விதியின் விளையாட்டோ
யாம் அறியோம்
நீ சுகமாய் திரும்பி வ‌ந்ததற்காய்
சொல்கிறோம் நன்றிதனையே
இயற்கை அன்னைக்கே!

Sunday, October 11, 2009

நாமா பயங்கரவாதிகள்?

காட்டுமிராண்டிச் சிங்களவன்
கையில் ஆயுதம் இல்லா எம்மவரை
நிர்வாணமாக்கி கை கட்டி கண் கட்டி
சுட்டுத் தள்ளுவதை
கண்ட பின்பும்
நாமா பயங்கரவாதிகள்?
இழிவான இந்தியாவே
கயவனான கருணாநிதியே
எம் இனத்தை அழித்து
நம் குருதி குடித்த போதையிலே
ஏப்பம் விடுகின்றீர்!
எம் குழந்தைகளே உமைக் கண்டால்
காறித் துப்பும் உம் முகத்தினிலே

விச வாயுவால் எம்மவரை
மூச்சுத் திணறடித்துக் கொன்றார்கள்
எரிவாயுவினால் நம்மவர்கள்
கொத்துக் கொத்தாய் கருகிச் செத்தார்கள்
கற்பிணித் தாய்மாரும்
தன் தாயின் பால் குடித்த குழ‌ந்தைகளும்
கொடிய சிங்களத்தின் செல்லடியில்
செத்து மடிந்தார்கள்
கையேந்தி நின்றோம் உலகத்தை நோக்கி
வேடிக்கை பார்த்தீர்கள் நீங்க‌ளெல்லாம்
அள்ளி அள்ளிக் கொடுத்தீர்க‌ள்
ஆயுத‌மெல்லாம்...
எம்மை அழிப்ப‌த‌ற்காய்
உரிமை வேண்டும் என்றோம்
சமத்துவம் கோரி நின்றோம்
மனிதனாய் வாழ வழி தாருமென்றோம்
இன்று வதை முகாம்களில்
அணு அணுவாய்ச்
செத்துக் கொண்டிருக்கின்றோம்
இன்னும் நாமா பயங்கரவாதிகள்?

Friday, January 30, 2009

தீப் பிழம்பாகிய தியாகி - முத்துக்குமார்

முத்துக்குமாரா
தமிழனுக்காய் உயிர் கொடுத்தாய் நீ
ஈழத் தமிழன் அவலம் பொறுக்காமல்
உன்னையே நீ அழித்தாய்
தீப் பிழம்பாய் நீ எரிந்து
உன்னை நீயே கொடுத்தாய்
தமிழன் விடிவிற்காய்
இந்திய அரசு கேட்குமா இதையெல்லாம்?
தியாகி திலீபனையே கொன்றவர்கள்
கேட்பார்கள் உன் கோரிக்கையை
என்றா எதிர்பார்த்தாய்?
ஏன் இந்த முடிவெடுத்தாய்?
எம் நெஞ்செல்லாம்
இரத்தக் கண்ணீர் வடிக்கிறதே
அறிவாயா எம் முத்துக்குமரா?

ஈழமக்களின் மனத்தினிலே
நீ ஓர் பெரிய மாவீரன்
எம் வலி பொறுக்க முடியாமல்
தீப் பிழம்பாகிய தியாகி நீ
ஈழம் மலரும் ஓர் நாள்
முத்தான எம் முத்துக் குமரன்
வீர நாயகனாய் வீற்றிருப்பான்
எம் மக்கள் மத்தியிலே
திண்ணமிது திடமாகச் சொல்கின்றேன்

வாழ வேண்டியவன் நீ
எமக்காக இன்னும் போராட வேண்டியவன் நீ
வீரத் தமிழன் நீ
மற்றவர்க்காய் மரணித்த
யேசுவையும் விஞ்சியவன் நீ
ஈழ்த்தமிழருக்காய் சிலுவை சுமந்தவன் நீ
மற்றவரின் விடிவிற்காய்
உன்னையே எரித்தவன் நீ!

என்னமாய் வலித்திருக்கும்
உன் உடலெல்லாம்
தமிழன் விடிவிற்காய்
தாங்கினாய் வலி எல்லாம்
ஈந்தாய் உன் உயிர்தனையே
தமிழன் வாழ்விற்காய்
நன்றி சொல்ல ஓர் வார்த்தையில்லை
வணங்கி நிற்கின்றோம்
நல் வாழ்வு வாழ்வேண்டும் நீ
வானகத்தே எம் மாவீரருடன்.

Thursday, January 29, 2009

புத்தனின் பெயரால் புதைக்கின்றாய்

புலம்பெயர் நாட்டில் நாமிருந்து
புண்ணாகிப் போன எம் இதயங்களில்
எழுகின்ற உணர்ச்சிகளை
அறிவீரா எம் உடன்பிறப்புகளே?
ஆறுதல் சொல்ல எமக்கோர் வார்த்தை இல்லை
அரவணைக்க துடிக்கின்ற எம் கைகள் உங்கில்லை
அறிவாயா எம் உறவுகளே?

நவீன கிட்லர் மகிந்தரின்
மமதை கொண்ட ராணுவத்தின்
செல்லடிபட்டும் குண்டடிபட்டும்
குற்றுயிராய் விழும் குழந்தைகள் கூட
மருந்தில்லாமல் மரணிக்கும்
அவலத்தை ஆரால் தாங்கமுடியும்
இந்த அகிலத்தில்?

பாவி மகிந்தா!!
புத்தனின் பெயரால்
புதை குழி தோண்டிப் புதைக்கின்றாய்
ஒன்றுமறியா எம்மவரை....
போருக்குப் போகின்றேன் என்று சொல்லி
எம் கற்ப்பிணிப் பெண்களையும்
தள்ளாடும் முதியோரையும்
தவழும் குழந்தைகளையும்
வெட்டிச் சாய்க்கின்றாய்
உனைக் கேட்பதற்கு
உலகத்தில் எவருமில்லை என்ற
மமதை தானே?

எம் தமிழர்
எம் பெற்றோர், உற்றோர்
அண்ணன் தம்பி
அக்கா தங்கை
ஆறி அமர இடமுமின்றி
அள்ளிக் குடிக்கத் தண்ணியின்றி
அரை வயிறு நிரப்ப வழியுமின்றி
மண் தரையிலும் மர நிழலிலும்
படுத்துத் தூங்குகின்ற காட்சிகள்
எம் மனதைப் பிழிந்து பிய்த்து எறிகிறதே!!

பிள்ளைகள் வீரிட்டு ஓலமிட
அம்மாக்கள் அரவணைத்து
உறக்கமும் இல்லாமல்
பேய் இருட்டில் விழித்திருக்க
வெளிச்சத்துடன் வந்தே
போடுகின்றாய் குண்டுகளை
பேடி மகிந்தா இதுதானா உன் வீரம்?

மறத் தமிழன் புற முதுகிட்டதாய்
சரித்திரம் இல்லையடா!
ஆறு நாட்டுப் படையுடனும்
அயல் நாட்டான் அரவணைப்புடனும்
அள்ளிக் கொடுக்கின்ற ஆயுதங்களுடனும்
பிச்சை ஏந்தி வந்துவிட்டாய்
போருக்கா இல்லை?
பொது மக்களை அழிப்பதற்காய்..