Thursday, December 27, 2007

நம்பவே முடியவில்லை

ஐம்பது வயதினிலே அரைக்கிழமாய்
நான் இன்று வரைகின்றேன் இக்கவிதை
என்னுள்ளே புதைந்து கிடக்கின்ற
எண்ணக்கிடக்கைகளை
அள்ளித் தெளிக்கின்றேன்
அன்பு கொண்டவரே கொஞ்சம் கேளுங்கள்

ஐம்பத்து நான்கினிலே அன்பான என் அம்மா
என்னைப் பெற்றேடுத்தாள் இப் பாரினிலே
என்க்கோர் தெய்வம் உண்டென்றால்
தெளிவாகச் சொல்கின்றேன் அது என் அம்மாதான்
என்னை விட்டு நீ பிரிந்தாய் இம் மண்ணை நீ துறந்தாய்
ஆனால்.......
என்னுள்ளே நீ இருக்கின்றாய் எனக்காக வாழ்கின்றாய்
உன்னை நித்தமும் நான் நினைக்கின்றேன்
உணர்வாயா என் அம்மா!

கண்டிப்பான என் அப்பா
கருணையிலும் நீ முதலிடம்தான்
உனக்காக வாழாது எமக்காக வாழ்ந்த
எனதருமை அப்பாவே உன்னைப்போல்
வாழ வழியொன்று தேடி அலைகின்றேன் நான் இங்கு......

ஐந்துடன் ஒன்று ஆறு சகோதரராய்
வாழ்ந்த அவ் வாழ்க்கை
அடி பிடி சண்டை போடுகின்ற நேரங்கள்
அன்புடன் அரவணைக்கும் அந்தக் காலங்கள்
கலகலவெனவே கேட்டிடும் சிரிப்பொலிகள்
அம்மா அடிக்கவர
அக்காமார் தடுக்கின்ற சில கணங்கள்
அந்தவொரு சந்தோசம்
அகிலத்தில் இனி எனக்கில்லை எந்நாளும்

முப்பதுரண்டினிலே முத்தான முழு நிலவாய்
முல்லை மலர்ச் சிரிப்புடனே
என் வாழ்க்கையில் இணைந்து கொண்டாள்
இதயத்துள் புகுந்து கொண்டாள்
அழகான அவள் சிரிப்பழகில்
என்னையே நான் மறந்திடுவேன்
மனைவியாய் நான் அவளை நினைத்துப் பார்க்கவில்லை
என் குழந்தையவள்....எனக்கோர்
நிகரில்லா நண்பியவள்
தாயில்லாக் குறையை தணிக்கும் தாரமவள்
கடுமையான நோயில் நான் தவித்துப் போகையிலே
உன் உள்ளத்து அன்பை
நான் முற்றாய் உணர்ந்து கொண்டேன்
உணவை ஊட்டிவிட்டாய் உன் கைகளினால்
உண்ணாவிரதம் பல இருந்தாய் என் மீட்புக்காய்
எனக்காக நீயே எல்லாம் செய்து தந்தாய்
ஆண்டவனே உனக்கு நன்றி கூறுகின்றேன்
இவளை எனக்கு நீ அளித்ததற்காய்...

அன்பான பிள்ளைகளை எண்ணிப் பார்க்கையிலே
அளவில்லா ஆனந்தம் என்னுள்ளே பொங்கியெழும்
குடும்பத்தின் குலவிளக்கே நீங்கள் தான்
கள்ளங்கபடமில்லா சிறுமிகள் நீர்
காலம் எங்கே போனாலும்
வயது ஏறிச் சென்றாலும்
சிறு குழந்தைகளே நீர் எனக்கு

விடலைப் பருவத்தே பெற்ற நண்பர்கள்
காலத்தால் அழியாத அவ் நினைவலைகள்
சந்தியிலே நாமிருந்து போட்ட சத்தங்கள்
நக்கலடித்துப் பாடிய பாட்டுக்கள்
பாடசாலையிலே பண்ணிய அட்டகாசங்கள்
மாங்காய் தேங்காய்
மதிலேறிப் பறித்த அநுபவங்கள்
களவாகக் கள்ளடித்த அந்தக் கூவங்கள்
கள்ளமாய்ப் பார்த்து
காதலுக்காய் ஏங்கிய காலங்கள்
மருத்துவக் கல்லூரியில் போட்ட கும்மாளங்கள்
எல்லாமே என் மனதுள்
பசுமையாய் பதிந்திருக்கும்

சிங்களப் பகுதியிலே வேலை செய்த நேரங்கள்
சிந்தையிலே என்றும் நிறைந்திருக்கும்
ஆண்கள் பெண்கள் கூடியமர்ந்து
அங்கே அரட்டை அடித்த அநுபவங்கள்
இன்னும் என் மனத்தில் இனிமையாய் ஓடி வரும்
மாலை தீவை மறக்கமுடியுமா என் வாழ்நாளில்
அன்பான மனைவியுடன் அளவில்லா மகிழ்ச்சியுடன்
ஒவ்வோர் நாளுமே அங்கே ஒவ்வோர் தேனிலவு
ஓமானில் வாழ்ந்த வருடங்கள்
புதிய நட்பினைப் புகுத்திய காலமது
நல்ல நண்பர்கள் உண்மை நண்பர்கள்
இன்றும் என்னுடன் உரையாடும் அன்பு உள்ளங்கள்
தந்த காலமிது....இனி வருமோ அக்காலம்

சுவீடன் நாட்டினிலே இருக்கின்ற இக்காலம்
அட்டகாசமில்லாத அமைதியான ஓர் காலம்
உதவிக்கு ஓடி வர ஊர்க்கார நண்பர்கள்
அக்கம்பக்கத்தே அரவணைக்கும்
எமது தமிழ் அன்பர்கள்
ஆபத்து என்று சொன்னால்
இங்கு தமிழினமே ஒன்று சேரும்
குடும்ப வாழ்க்கைக்கு
குறைவேதுமில்லை இந் நாட்டினிலே
வாழ்ந்துவிட்ட ஐம்பது ஆண்டுக் காலத்தை
எண்ணிப் பார்க்கின்றேன்
நம்பவே முடியவில்லை
எனக்கா ஐம்பது?
என்னால் நம்பவே முடியவில்லை.

மணி ஓசை

காலை எழுந்து
ஒரு கப் ரீயைக் குடித்து
அமைதியாய் ஆறுதலாய்
அமர்ந்தேன் நானும் சோபாவில்
கோவில் மணி ஓசை
ஊரில் கேட்ட இதம் எண்ணத்தில் ஓடி வர
அடித்தது இங்கே பழையபடி
ரெலிபோன் மணி தொந்தரவாய்.

Wednesday, December 26, 2007

பாவம் அவன்

அன்பான குடும்பம் ஒன்று
அமைதியாய் வாழ்ததிங்கு
அளவான வருமானம்
அதுவே போதுமென்று
அடக்கமாய் அட்டகாசம் செய்யாது
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தான்
கறுப்பிலே வேலையென்றால்
கண்டிப்பாய் சொல்லிடுவான் நோ என்று
உண்ண உணவுண்டு
உடுப்பதற்கு நல்ல உடையுண்டு
உறைவதற்கு அழகான வீடுண்டு
இனியென்ன வேண்டும் நமக்கென்று
இனிமையாய் வாழ்ந்திட்டான்

ஆடம்பரம் என்றாலே அது
நமக்கெதற்கு என்றிடுவான்
நாட்டிலே நாமிருந்த கோலத்தை
எண்ணிப்பார் என் இனியவளே என்றிடுவான்
பனை ஓலை வேய்ந்த வீட்டினிலே
பக்குவமாய் எரிகின்ற அரிக்கன் லாம்புடனே
நாமிருந்த வாழ்க்கைதனை நினைத்துப்பார்
என்றே பேசிடுவான்
கடகத்தில் கத்தரிக்காய் வாழைக்காய்
கருவாடு என்றெல்லாம்
தலையில் சுமந்தே உன் அம்மா
சந்தைக்குப் போய் வியாபாரம்
செய்ததை மறந்தனையோ நீ என்பான்
மாட்டு வண்டியிலே மண்பாதை வீதியிலே
கூடி நாம் போனவைகள் எல்லாம்
நினத்துப்பார் என்றிடுவான்

வில்லா(வீடு) வேண்டுகின்றார்
வித விதமாய் கார் எல்லாம் ஓடுகின்றார்
வட்டிக்குப் பணம் கொடுக்கின்றார்
வசதியாய் வாழ்க்கை வாழ்கின்றார்
பளபளப்பாய் சாறிகள் உடுக்கின்றார்
பகட்டாய் நகையெல்லாம் அணிகின்றார்
பகலென்றும் இரவென்றும் பாட்டிகள் வைக்கின்றார்
நாம் வந்து வருடங்கள் பத்தாச்சு
கண்ட பயன் என்ன இந்தச் சுவீடனிலே
கால் தூசிக்கும் மதிப்பில்லை நமக்கிங்கு
காசு பணம் இருந்தால்தான்
கடவுளுமே கண் திறப்பார் இந் நாட்டில்
இனியும் பொறுக்க முடியாது என்னால்
இன்றே தேடும் பணமென்றாள்
தத்துவங்கள் எல்லாமே வீசி எறிவீர் இன்றோடு
கொள்கை என்று சொன்னவற்றை
கொலை பண்ணி எறியுமையா
தமிழன் என்றோர் இனமுண்டு-இங்கே
தனித்துவமாய் அவனுக்குச் சில குணமுண்டு
நாமும் சேர்வோம் அவரோடு
நன்றே வாழ்வோம் பணத்தோடு
இது ஒன்றும் புதினமில்லை வெளிநாட்டில்
பயப்பட ஒன்றுமில்லை, பாவம் நீங்கள்
ஒன்றுமே தெரியாது உங்களுக்கு
எல்லாமே சொல்லி வைத்தாள் பக்குவமாய்
மாண்புமிகு மனைவியவள்

இன்று நாட்டை வெறுத்திட்டான்
நல்ல கொள்கைகளை விட்டிட்டான்
தானிருந்த நிலமைதனை
சத்தியமாய் மறந்திட்டான்
பேராசை பிடித்தவனாய்
இரவு பகலாய் வேலை செய்கின்றான்
பணத்திற்காய் பாசத்தையே விற்றிட்டான்
வட்டிக்குப் பணமென்றால் எப்பவுமே ரெடி என்பான்
நல்ல நட்பையெல்லாம்
தூர வீசி எறிந்திட்டான்
காசுக்காய் நயவஞ்சகங்கள்
சளைக்காமல் செய்திடுவான்
சிறையிலே இருப்பதற்கும்
சித்தமே எப்போதுமென்பான்
சட்டத்தை மதிக்காமல்
கடத்தல்கள் செய்திடுவான்
சேர்த்திட்டான் பணமதனை ஒருவாறாய்
நிம்மதியை இழந்திட்டான்
பணக்காரன் ஆயிட்டான்

பாவம் அவன்
உண்மையில் பணக்காரன் என்றால்
என்னவென்று புரியவில்லை அவனுக்கு
பாவம் அவன்.

இரத்தக்கண்ணீரை காணிக்கை ஆக்குகின்றேன்

(இக் கவிதை சில ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ்சில் நடந்த உண்மைச் சம்பவத்தின் போது என்னால் எழுதப்பட்டது)


தமிழ் அரக்கர்(கள்) இருவரினால்
தன்மானம் இழந்து
தன் உயிரையும் மாய்த்துவிட்ட
அந்த தமிழ் மழலைக்கு
என் இதயத்தில் இருந்து
கொட்டும் இரத்தக் கண்ணீரை
காணிக்கை ஆக்குகின்றேன்

நம் நாட்டில்
நம் ஈழத்தமிழ் நாட்டில்
சிங்களக் காடையரின் சினந்த பார்வையும்
சீண்டுகின்ற சின்னத்தனமான வாசகமும்
கண்டு கொதித்தெழுந்த தமிழ் இனமே
இன்று வெட்கித் தலை குனிந்து
மனம் புண்பட்டு
மாற்றானின் கேள்விக்கு
மறுமொழி சொல்லத் தெரியாமல்
ஓடி ஒழிகின்ற தமிழ் இனமே!

இங்கு அயல் நாட்டான் வரவில்லை
அந்நியன் நம்மைப் பார்த்துச் சீறவில்லை
அரசாங்கம் நம்மை நசுக்கவில்லை
எம்மவர்கள்! ஐயோ! ஐயோ! எம்மவர்கள்!
ஆம் இவர்கள் எம்மவர்கள்
சொல்ல நா எழவில்லை
தொண்டை இடம் கொடுக்கவில்லை
இதயம் வெடிக்கிறது! ஆம் இதயம் வெடிக்கிறது!
நம் தமிழன் அரக்கன் ஆனான்
காம வெறியன் ஆனான்
நம் பிஞ்சு மழலைகளை
வெட்டிக் குவிக்கின்ற
கொலை பாதகன் ஆனான்
எம்மவர்கள்! ஐயோ! ஐயோ! எம்மவர்கள்!

அன்பான ஓர் பிள்ளை
வஞ்சகம் சூது ஏதுமறியா
பால் வடியும் ஓர் தமிழ்ப் பிள்ளை
ஆருக்கும் பிள்ளைகளில் கோபமில்லை
மனத் தாபமில்லை
கொலைவெறியர் கூட
பிள்ளைகளை அவ்வளவாய் வதைப்பதில்லை
நாட்டிலே இருக்க வழியில்லை! ஓர் நாதியில்லை!
நாம் ஒற்றுமையாய் ஓர் நாளும் இருந்ததில்லை
சிங்களக் காடையரின் கண்ணினிலே
நம் பிள்ளைகளை சிக்கவைக்காமல்
ஓடி வந்தோம்! ஓடி வந்தோம்!
அகதிகளாய் ஓடி வந்தோம்!
அங்கு தமிழன் ஒன்றுபட்டால்
இன்று இந்த இரண்டும் கெட்டான் வாழ்வு நமக்கில்லை

அந்தோ பரிதாபம்! ஐயோ பரிதாபம்!
மாமா! மாமா! என்று
பாசமுடன் அழைக்கும் மழலையையே
மானபங்கம் செய்யத் துணிந்திட்டான் மடைத் தமிழன்
நம் மண்ணிற்கே ஈனம் படைத்திட்டான்
நம்மையெல்லாம் தலை குனிய வைத்திட்டான்
நிதர்சினி என்கின்ற சின்னச் செல்வத்தை
நிரந்தரமாய் தூங்க வைத்திட்டான்

பல கலையும் பக்குவமாய் படிக்க வைத்து
பாரினிலே பல பேரும் போற்றி வாழ்ந்திடுவாய் என்று
பகல் இரவாய் பாடு பட்டுழைத்த
பெற்றோரை விட்டு விட்டு
பாதி வழியில் வானுலகம் சென்று விட்டாய்
இல்லை! இல்லை! உன்னை வானுலகம்
அனுப்பிவிட்டார் அந்தக் கயவர்...
கயவனே! காடையனே!
அங்கெல்லாம் நம்மவர்கள்
இரவென்றும் பகலென்றும் கண்விழித்து
நமக்காகப் போராடும் பொழுதினிலே
நீ இங்கு நம் மழலைகளின் மானத்தைப் பறித்து
அவர்கள் குருதியிலே குளித்து மகிழ்கின்றாய்
ஆம்...
அவர்கள் குருதியிலே குளித்து மகிழ்கின்றாய்
மலர்கின்ற நிதர்சினியின் முகத்தினிலே நீ
மலர்வளையம் சாத்த வைத்துவிட்டாய்

காம வெறியனே! கல் நெஞ்சக்காரனே!
நாமெல்லாம் உன் முகத்தில்
காறித் துப்புகின்ற வேளையைத்தான்
எதிர்பார்த்து இருக்கின்றோம்
ஆம்.....
உன் முகத்தில் காறித் துப்புகின்ற
வேளையைத்தான் எதிர் பார்த்து இருக்கின்றோம்

நிதர்சினியே!
உன்னை நாம் இன்று இழந்திட்டோம்
உன் பால் வடியும் முகத்தை பலி கொடுத்திட்டோம்
உலகத் தமிழரெல்லாம் உன் நினைவால்
உறக்கமின்றி இருக்கின்றார்
கண்களிலே வழிகின்ற கண்ணீரை
அணை கட்ட முடியாமல் தவிக்கின்றார்
என் நெஞ்சத்தின் இரத்தக் கண்ணீரால்
அம் மழலைக்கு உங்களுடன் சேர்ந்து
ஓர் அஞ்சலி செலுத்தி முடிக்கின்றேன்.

Monday, December 24, 2007

சிறைக்கைதிகளுக்காக

சிறீலங்காவின் சித்திரவதைக் கூடங்களில்
இரத்தத்தைச் சிந்தினீர்கள் நீங்கள்
உங்கள் சோகத்தை நினைத்து
இரத்தக் கண்ணீரை சிந்துகிறோம் நாங்கள்

Sunday, December 23, 2007

என் அப்பா (ஐயா)

அடக்கமான என் அப்பா
கண்டிப்பாய் இருந்தாலும்
கருணையின் வடிவம் அவர்
உழைக்கின்ற பணமனைத்தும்
கொடுத்திடுவார் அம்மாவின் கையினிலே
சும்மா இருக்கமாட்டார் ஓர் நேரம்
பந்தம் பிடிப்பது பந்தா காட்டுவது
சுத்தமாகப் பிடிக்காது என் அப்பாவிற்கு

பிள்ளைகள் படிக்கவேண்டும் நல்லாக
பார்க்கவேண்டும் உத்தியோகம் பெரிதாக
எந்நாளும் சொல்லிடுவார் எம்மிடமே
சயிக்கிளிலே சென்றிடுவார் பல தூரம்
எம்மையும் அழைத்துச் சென்றிடுவார் சிலநேரம்
தனிமையாய் சென்று அமைதியாய் நின்று
வணங்கிடுவார் கடவுளரை நிம்மதியாய் எந்நாளும்

தானுண்டு தன் குடும்பம் உண்டு
என்றே இருந்திட்டார்
நீதி கேட்க ஐயாவிடம் வருபவர்கள்
நிம்மதியாய் வீடு திரும்பிடுவார்
அல்லும் பகலும் உழைத்தாலும்
அந்திம காலத்தே நோய் அவரை வாட்டியதே
பிள்ளைகளின் அன்பும் பரிவும்
பக்கத்தே எந்நேரமும் இருந்தே பார்த்திட்ட
என் அம்மாவின் அரவணைப்பும்
நிட்சயமாய் உன் நோயின் தாக்கத்தை தணித்திருக்கும்
ஐயா உம்மை நாம் பிரிந்திட்டோம்
குடும்பத்தின் குலவிளக்காய்
நீ எமக்காக வாழ்ந்ததனை
மறக்கமாட்டோம் எந்நாளும்
எம்முடனே நீ என்றும் வாழ்கின்றாய்.

Saturday, December 22, 2007

விட்டகலா நினைவுகள் - சுனாமி

அகிலத்தையே அதிரவைத்து
ஆசியாவை அழித்தொழித்து
என் இதயத்தையே சுட்டெரித்த
சுனாமியின் நினைவுகள்
சுக்கு நூறாய் உடைக்கிறது என் இதயத்தை இன்றும்
ஆண்டு பதினொன்று கடந்தாலும்
என் நாளும் முயன்றாலும்
அழிக்க முடியவில்லையே உன் நினைவுகளை
மறக்கமுடியா நினைவுகளை
மறப்பதற்கே முயன்று நானும்
தோற்றே போய்விட்டேன் உன்னிடமே

சுனாமி என்று பெயர் கொண்டே
எம்மை அழிப்பதற்காய்
எம் மனத்தைச் சிதைப்பதற்காய்
எம் வாழ்வை ஒழிப்பதற்காய்
ஆர்ப்பரித்து எழுந்த ஆழிப் பேரலையே
உன் கொடுமைதனை கோபாவேசத்தை
என் சொல்லில் அடக்கிட முடியாது
எழுத்தில் வடித்திட முடியாது
உள்ளத்தில் இருந்து வடிகின்ற
இரத்தக் கண்ணீர்தான் இதை எடுத்தியம்பும்

அன்று கேட்ட அலறல் சத்தம்
அகிலத்தின் ஒவ்வோர் மூலையிலும்
இன்னும் எதிரொலியாய் கேட்கிறது
உன் பேரலையின் இரைச்சலையும் விஞ்சி
பச்சிளம் குழந்தைகளும்
படிக்கப்போன பிள்ளைகளும்
நடை பயில உன்னை நாடிவந்த வயோதிபரும்
காதலின் சுகத்தை உன்னுடனே
பகிர்ந்து கொள்ள வந்த காதலரும்
எழுப்பிய அபயக்குரல்
மீண்டும் மீண்டும் என் இதயத்தை மோதி
என் உணர்வுகளை வதைக்கிறது

அமைதியாய் இருந்தாய் நீ
ஆழிப்பேரலையாய் வந்து எம்மை அழிப்பதற்கா?
பொறுமையாய் இருந்தாய் நீ
பொல்லாத சுனாமியாய் வந்து எம்மை அள்ளிச் செல்வதற்கா?
தென்றல் காற்றை எம்மீது வீசி நின்றாய்
தெருவெல்லாம் வெள்ளமாய் வந்து
எம் வீடுகளை அடித்து உடைப்பதற்கா?
வாழ்வதற்கு எம் மீனவர்க்கு வழி சமைத்துக் கொடுத்தாய்
உன் பசி ஆற அவர்களையும் உணவாய் எடுத்துக் கொள்வதற்கா?
குழந்தைகளை அரவணைத்தாய் உன் கரைகளிலே விளையாட
அவர்கள் அலறும் கூக்குரல் கேட்டு மகிழ்வதற்கா?

தரணியில் மனிதன் வாழ
உனை நினைத்தோம் தாயாக
பொறுமையின் பொக்கிசமாய் உனை மதித்தோம்
உனைப்போல் பெருவாழ்வு வாழவேண்டும் மனிதன் என்றோம்
ஏன் இந்தக் கோலம் கொண்டாய்?
ஏன் இப்படிக் கோபம் கொண்டாய் எம்மீது?
ஏன் செய்தாய் இக் கொடுமை எங்களுக்கு?
என்ன அநியாயம் செய்தோம் நாம் உனக்கு?
கொலை வெறியர் அழிக்கின்றார் மானிடரை என்றே
கதிகலங்கி உலகம் நிற்கையிலே
ஆழிப்பேரலையாய் அட்டகாசமாய் ஆணவச் சிரிப்புடனே
உலகத்தின் உச்சக் கொலைவெறியன்
நீயேதான் என்று
பறைசாற்றி நின்றாயே பாதகனே சுனாமியே!
உன் பேய்க் கூத்து ஓய்ந்த பின்னே
உன் கரையெங்குமே சுடுகாடு
உடல் உருக்குலைந்து சிதையுண்டு
இறந்தவர்கள் ஒருபக்கம்
உற்றாரை பெற்றாரை
உடன் பிறந்தாரை உற்ற நண்பர்களை
இழந்து தவித்தவர்கள் மறுபக்கம்
கட்டிப்பிடித்த குழந்தைகள் கைநழுவி
உன் அலையிலே போனபோது
பெற்றமனம் துவண்ட காட்சி
ஒன்றுமே இல்லாது
ஒழிந்து போன உல்லாச விடுதிகள்
இயற்கையை உன் கடல் அழகை ரசிப்பதற்காய்
வந்த வெளிநாட்டாரை
உன் கோரப் பற்களினால்
வெட்டிச் சாய்த்துவிட்ட நிகழ்வுகள்
எல்லாமே விட்டகலா நினைவுகளாய்
என் மனத்தை ஆட்டிப் படைக்கிறதே!

கார் ஒன்றைக் கண்டேன் நான்
நிற்கிறது ஓர் வீட்டின் கூரை மீது
பிள்ளை ஒன்றைக் கண்டேன்
துடி துடித்துக் கிடக்கிறது
தென்னை மர வட்டுக்குள்ளே
வயோதிபர் ஒருவரைக் கண்டேன்
வான் ஒன்றின் கீழ் நசிந்து கிடக்கின்றார்
உன் பேய் அலைகள் எழுந்து பாய்கிறது
வீதிகளின் மேலால் கோபுரங்கள் மேலால்
நெடிதுயர்ந்த மரங்கள் மேலால்
ஊழிக்காலம் உலா வந்ததோ என்றே
எனது மனம் எண்ணியது
வெறுமையை மட்டும்
எஞ்சவிட்டாய் எமக்காக!
வெறுமையும் தனிமையும் செய்கின்ற கொடுமைதனை
உணர்ந்தார்கள் மக்களெல்லாம்!

அறிந்து கொண்டேன் உன் சீற்றத்தை
பொறுமையின் வள்ளல் நீ
பொய்யுரைக்கவில்லை நான்
மனிதர்கள் மனத்திலே
வஞ்சனைகள் வானளாவி நிற்கிறது
தமக்குள்ளே வளர்க்கின்றார் குரோதத்தை
போட்டியும் பொறாமையும் கொண்டே
மனிதகுலம் வெட்டிச் சாய்க்கிறது தம் இனத்தை
பொறுக்கமுடியவில்லையா உன்னால்
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்
பொறுமையின் சின்னமாய் இருந்த நீ
சீற்றம் கொண்டுவிட்டாய் மனித குலம் மீதே
கோரத்தாண்டவம் ஆடியே நீ முடித்திட்டாய்
பார்க்கவில்லை நீ ஓர் பாரபட்சம்
சாதியில்லை இனமில்லை மதமில்லை
வேறெந்தவொரு பேதமுமில்லை உன்னிடத்தில்
கொடியவனே என்றாலும் நீ
எம்மவர்க்கு உணர்த்திவிட்டாய் சமத்துவத்தை
நல்ல மனம் பெற்று நாமும் வாழ்வோம் இனிதாக!!!

Friday, December 14, 2007

தேசத்தின் குரல் பாலா அண்ணன்

புற்று நோயென்னும்
பொல்லாத அரக்கனிலால்
புனிதமான எம் பாலா அண்ணன்
உயிர் பறித்த செய்திதனை
கேட்ட உலகத் தமிழர்
இதயமெல்லாம் உறைந்து போய்
உணர்வற்றுக் கிடக்கிறது
சிங்களத்தின் கிபீர் விமானங்கள்
பொழிகின்ற குண்டுகளே
உலுக்காத தமிழ் மனத்தை
உலுக்கியதே உன் மரணம்

எம் அண்ணன் உயிர் பறித்த காலனவன்
தமிழ் இனத்தின் கவலைகள்
புரியாத கொடிய பாவியவன்
ஓர் இனத்தின் விடியலுக்காய்
தன் தொழில் துறந்து
சொத்து சுகம் இழந்து
உயிரை மட்டுமே
தன்னகத்தே வைத்திருந்த எம் பாலாவை
ஏன் கவர்ந்து கொண்டாய் கொடியவனே
மரணித்த பாலா அண்ணர்
வந்துதிப்பார் தமிழ் ஈழத்தில்
மீண்டும் ஓர் முறை சத்தியமாய்

அரசியல் துறையினிலே
அதி சிறந்த விரிவுரையாளனாய்
நீ இருந்தாய் அகிலம் போற்ற
தமிழ் ஈழ மக்கள் அனைவருமே
உன் உடன் பிறப்பாய் நீ உணர்ந்தாய்
தமிழ் மண்ணை தாயிலும் மேலாக
நேசித்த உத்தம புருசன் நீ
சென்னயிலே எம்
தானைத் தலைவனை சந்தித்த மறு கணமே
துறந்தாய் உன் உல்லாச வாழ்க்கைதனை
இணந்தாய் எம் போராட்டத் தீயினிலே
முப்பது வருடமதாய்
தமிழ் ஈழப் போராட்டம்
தலை நிமிர்ந்து நிற்பதற்காய்
சளைக்காமல் உழைத்தாய் நீ
உயிரையும் துச்சமேன மதித்தே!

பேச்சு வார்த்தை மேசைதனில்
நகைச்சுவையாய் விடயத்தை
நாசூக்காய் விட்டெறிவாய்!
மதியுரையர் பாலா அண்ணர்
மதிநுட்பம் வென்று வரும் என்றே
நம்பிடுவார் உலகத் தமிழரெல்லாம்
பதில் சொல்லமுடியாமல்
பதுங்கிடுவார் எதிர் தரப்பார்
ஈழத் தமிழ் இனத்தின் வேட்கை தனை
அவர்கள் வேண்டுகின்ற உரிமைகளை
சிங்களத்தின் கொடுமையினை
உலகம் புரிந்து கொள்ள வைத்தவனே
மாவீரர் நாளினிலே நீ
சொல்கின்ற விளக்கவுரை
அறு சுவையும் அள்ளித் தெளித்தே
தேன் அமுதாய் பாய்ந்து வந்து
எம் இதயத்துள் புகுந்து கொள்ளும்
மாமனிதரையும் ஒரு படி விஞ்சிய
மதி மாமனிதன் நீ
எம் தேசியத் தலைவனின்
தேசத்தின் குரல் என்னும்
பட்டம் பெற்றவன் நீ

எவருக்கும் அடிபணிய மாட்டாய் நீ
வல்லரசு என்றாலும்
இணத்தலைமை ஆனாலும்
இந்தியாவாய் இருந்தாலும்
சிங்களத்தின் சிந்தனையே ஆனாலும்
மதியுரையர் பாலாவின் மதி நுட்பம்
எதிர்த்தே வெற்றி கொள்ளும்
எதற்க்கும் அஞ்சாத மனிதன் அவர்
ஆயுதம் ஏந்தாத அதிசயப் போராளி
ஆம் நீர் ஓர் அதிசயப் போராளி
தமிழ் ஈழ மீட்பிற்காய் தன்னையே
அர்ப்பணித்த ஓர் அதிசயப் போராளி

ஆலோசனை வேண்டி ஆறுதல் வேண்டி
எம் தலைவன் பிரபா
ஓடுகின்ற பாலா அண்ணா
நீண்ட காலமாய் நீரிழிவு நோயை
எதிர்த்தே வெற்றி கொண்டாய்
சிறுநீரகங்கள் செயல் இழந்த போதும்
சிறிதளவும் கலங்கவில்லை நீ
போராளியின் சிறுநீரகம்
பொருத்தியுள்ளேன் நானென்று
பெருமிதமாய் சொல்வாய் நீ
புற்று நோயை மட்டும்
புறமுதுகிடச் செய்ய முடியாது
போனது ஏன் ஐயா
கல் நெஞ்சுக் கார காலன் அவன்
வஞ்சனையாய் எடுத்திட்டான்
உன் இன் உயிரை
எம் மக்கள் துயர் துடைக்க
எழுந்து வரமாட்டாயா எம் பாலா அண்ணா

இன்னும் பல ஆண்டு வாழ்வாய் நீ என்று
நம்பினோம் நாமெல்லாம்
நீ ஓர் ஏமாற்றுக் காரன் ஐயா
பொல்லாத வருத்தங்கள்
பலவும் சுமந்து கொண்டே
நகைச் சுவையும் அறு சுவையும்
கலந்து பேசி நம்ப வைத்தாய்
நம்மை எல்லாம்
நீடூழி வாழ்வாய் நீ என்றே
நாமெல்லாம் நம்பி ஏமாந்தோம்

தமிழன் இதயமெங்கும்
துள்ளித் திரிந்தவன் நீ
தன் நிகரில்லா எம் தலைவனுக்கு
உற்ற துணைவன் நீ
தமிழீழ விடுதலைக்காய் வித்தாகிப் போன
விடுதலை வீரர்களின் மனங்களிலே
உறைந்து கிடப்பவன் நீ
ஈழத் தமிழன் பெருமை கொள்ள
அரசியல் உலகினிலே
அட்டகாசமாய் புகுந்து விளையாடியவன் நீ

தமிழர் இதயமெங்கும் பேரிடியாய்
வீழ்ந்த செய்தி இது
ஓர் சத்தியத்திற்காய் வாழ்ந்த
விடுதலை வீரன் இன்று
வித்தாகிப் போகின்ற செய்திதனை
செவி மடுக்க மறுக்கிறதே
என் செவி இரண்டும்

தினம் தினம் சாவோடு போராடி
உன் உடலெல்லாம் உபாதைகள்
வாட்டி வதைத்தெடுக்க
தளர்ந்து போகாது
இலட்சியத்தில் மட்டுமே உறுதியாய்
இருந்தவன் நீ
துன்பத்தில் நீ துவண்ட போதெல்லாம்
உலகத் தமிழினமே உனக்காய்
இரத்தக் கண்ணீரச் சிந்தியதே
அறிவாயா பாலா அண்ணா
உன் மூச்சுக் காற்று
உலகெல்லாம் சுற்றி வந்து
எம் சுவாசக் காற்றில் கலந்து
எம்முள்ளே இரத்தத்துடன்
கலந்தே இருக்கிறது
காலன் உன்னைக் கவர்ந்தாலும்
உன் மூச்சு எம்முள்ளே
என்றும் நிலைத்திருக்கும்
எம் பாலா அண்ணன்
நீண்டு நிலைத்திருப்பார் எம்முடனே
கடைசித் தமிழன் மூச்சு உள்ளவரை

ஈழம் காணும் வீறுடனே
அகிலமும் சுற்றி வந்த பாலா அண்ணா
மீழாத் துயில் கொள்ளும் செய்தி
ஈழத் தமிழரின் இதயத்தில்
இன்னுமொரு ஆணியை இறுக அடிக்கிறது
புலிகளின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்
என்று எடுத்துரைத்தவனே
தமிழ் ஈழம் மலரும் இது திண்ணம்
என்றே மலர் வளையம் சூடுகிறோம்
கனத்த மனத்துடனே

படுக்கையிலே நீ சாவிற்காய்
நாட்களை எண்ணிய வேளையிலும்
உனது துயரமெல்லாம்
எம் இனம் படும் துன்பத்தின்
ஒரு பருக்கை என்பாய்
மரணம் ஓர் துன்பமல்ல
இனிப் பணி செய்ய முடியாமல் போவதுதான்
தன் மனக் கவலை என்பார்
இனியும் பாலா அண்ணாவின் கதை சொல்ல
கல் நெஞ்சம் எனக்கில்லை

மாவீரர் வானத்தே
உன்னை மலர் தூவி
வரவேற்கக் காத்தே இருக்கின்றார்
தமிழ் ஈழம் மலர்வது உறுதி
என்று நீர் போடும் சத்தம்
எமக்கு உரத்தே கேட்கிறது
தமிழினத்தின் விடியலுக்காய்
தன்னையே அர்ப்பணித்த
இந்த வீரனுக்கு என்
தலை குனிந்த வணக்கங்கள்.

Monday, December 10, 2007

ஏன் பறித்தாய் ராணுவமே?

என் பசுமையான நினைவுகளில்
பதிந்திருக்கும் இனிமைகளை
அள்ளிக்கொடுத்த என் அருமை ஊரே
என் இதயத்தின் ஒவ்வோர் அணுக்களிலும்
உன் நினைவே
குடிகொண்டிருக்கும் எந்நாளும்

சிறியதோர் கிராமமாய்
சிங்காரச் செழிப்புடனே
அயலவரை அங்கலாய்க்க வைத்தாயே
என்ன இல்லை எமதூரில்?
அழகான வீடுகளும்
அளவில்லாத் தோட்டங்களும்
மின் விளக்கின் ஒளியினையே
எல்லோர்க்கும் முன்னமே நாம் பெற்றோம்
வீதி ஓரமெங்கும் பசுமை செளித்திருக்க
மதில்களெல்லாம் தொடராய்
விரிந்து செல்லும்...

பத்தாம் வகுப்புவரை பாடசாலை
ஐந்தாறு சங்கங்கள்
அனைத்துக்கும் கட்டிடங்கள்
படித்தோரின் எண்ணிக்கை
பலத்தைக் கொடுத்தது எம்மூருக்கு
கலைகளுக்குப் பெயர் எடுத்த
பெரியார்கள் வாழ்ந்தார்கள்
எமதூரில்
பெருமை சேர்த்தார்கள்
அகிலமெங்கும் குரும்பசிட்டிக்கே!

இளமையின் காலத்தை
இனிய எம் மண்ணில் களித்ததற்காய்
சொல்கின்றேன் நன்றிதனை
எந்நாளும் கடவுளிற்கே
இன்னும் ஓர்முறை
எம் மண்ணை முத்தமிட்டால்
மனத்தின் சுமையெல்லாம்
பஞ்சாய்ப் பறந்துவிடும்

எம் அப்பாவும் அம்மாவும்
அவர்தம் பெற்றோரும்
பிறந்து வளர்ந்து
பூரிப்பாய் வாழ்ந்த பூமி அது
எமக்கல்லோ சொந்தமது
எமக்கல்லோ சொந்தமது!
எம் கண்களெல்லாம்
கண்ணீரைக் கொட்டிநிற்க
பகை கொண்டு வெறி கொண்டு
எமதூரை ஏன் பறித்தாய்
ராணுவமே?

அரசடிச் சந்திக்கும்
அம்மன் கோவிலிற்கும்
மணிக்கடைப் படிக்கட்டிற்கும்
மாறி மாறி ஓடிய நாட்கள்
மனதினை விட்டகல
மறுத்தே நிற்கிறது
அயலூரார் மெச்சுகின்ற
அருமையான ஊரெனவே
பேரெடுத்தாய் சிறப்பாக
அடிபிடி சண்டைக்கு
போகமாட்டார் எமதூரார்
அள்ளிக் கொடுக்கின்ற வியாபாரத்தில்
நீ என்றுமே முன்னணியில்

இனிய இளமைப் பருவத்தே
நாமெல்லாம்
கூடிக் கும்மாளம் அடித்த காலங்கள்
எம் ஊரின் ஒவ்வோர் மூலையும்
எம் கதை சொல்லும் வாயிருந்தால்
இன்னும் ஓர் முறை
எம் ஊரில் கால்பதிக்க
கடவுளே கருணை காட்ட மாட்டாயா?
கல் நெஞ்சு ராணுவத்தை
எம் ஊரை விட்டு
துரத்தி அடிக்க மாட்டாயா?