Wednesday, March 12, 2008

கனவைத் திருடாதே

ஆழ்ந்த உறக்கத்தில்
நான் இருந்து
அலை அலையாய்
காணும் சுகமான கனவுகளை
என்னவளே
உன்னுடன் விழித்திருப்பதனால்
தொலைத்துவிட்டேன் இன்றளவும்
இனியும் திருடாதே
என் இன்பக் கனவுகளை
உறங்கவிடு நிதர்சனமாய் நிம்மதியாய்
என் கனவுகள் வேண்டும் எனக்கு
கனவின் மகிழ்ச்சி நிஜத்தில் இல்லை
உணர்வாயா என் காதலியே!

Friday, March 7, 2008

சர்வதேசமே உன் கண் திறக்கவேண்டும்

அன்பாய் உமை வளர்த்தோம்
ஆருயிராய் உமை நினைத்தோம்
ஆண்டவன் தந்த கொடையெனவே
உமை மதித்தோம்
குழந்தையாய் நீவிர்
இவ்வுலகில் வந்துதித்தபோது
குடும்பமே குதித்தெழுந்து
சந்தோசம் கொண்டாடி மகிழ்ந்திற்று

உம் மழலைச் சொல் கேட்பதற்காய்
மணிக்கணக்காய் தவம் கிடப்போம்
நடைபயில வைத்திடுவோம்
நடு வீட்டை வெளியாக்கி
ஓடி விளையாட
மைதானம் அமைத்திடுவோம்
சீராட்டித் தாலாட்டி
சிறப்பாய் வாழ்ந்திருப்போம்

நாம் பட்ட கஸ்டங்கள்
எம் பிள்ளைகள் படக் கூடாதென்றே
பகலென்றும் இரவென்றும்
வேலைகள் செய்திடுவோம்
அ- சொல்லிக் கொடுத்திடுவோம்
ஐந்து வயதாகுமுன்பே
ஆங்கிலமும் புகுத்திடுவோம்
அகிலமும் சென்று வரவேண்டுமென்றே
பாடசாலைக் அனுப்பிவிட்டு
படலையில் காவல் காத்து நிற்போம்
பள்ளி முடிந்ததுமே
பக்குவமாய் அணைத்தெடுத்து
பசிக்குதா கண்ணே என்று
பவ்வியமாய் வினாத் தொடுத்து
பல் சுவையாய் உணவும் ஊட்டிடுவோம்

குழந்தையாய் இருந்தவர் நீர்
இளைஞராய் வளர்ந்துவிட்டீர்
வாழ்வில் இனி எமக்கும்
வசந்தம் தான்
படிப்பார்கள் எம் பிள்ளைகள் வடிவாக
பட்டம் பெறுவார்கள் சிறப்பாக
ஊருக்கும் உதவிடுவார்
எமக்கும் பெருமை சேர்த்திடுவார்
பெற்றோர் எம்முள்ளே
கனவுகள் ஓடி வரும் எந்நாளும்

பாழாய்ப் போன குண்டுச் சத்தம்
கனவுகளை ஒரு நொடியில் கலைக்கிறது
ஏன் வளர்ந்தாய்
என் மகனே! என் மகளே!
பொல்லாத சிங்கள ராணுவம்
உமை போட்டுத் தள்ளப் பார்க்கிறது
வெள்ளை வானில் வருகின்ற
புலனாய்வு எமதர்ம ராயாக்கள்
எம் பிள்ளைகளை
கடத்திக் கொலை செய்கின்றார்
வானில் இருந்தே கொட்டுகின்ற குண்டுகளால்
உம் வாழ்வையே குழி தோண்டிப் புதைக்கின்றார்

எம் பச்சைப் பிள்ளைகள்
நம் கண் முன்னே
கடத்தப் படுவதும்
கண்மூடித்தனமாய் சுடப்படுவதும்
கண்டும் தாங்குமா எம் இதயங்கள்?
சித்திரவதைக் கூடங்களான
சிறீலங்காவின் சிறைக்கூடங்களில்
எம் சின்னஞ் சிறிசுகள்
அடைபட்டுக் கிடக்கையில்
தூங்குமா எம் இதயங்கள்?

இந்த வாழ்விற்கு
விடிவொன்று வேண்டும் விரைவாக
இழப்புக்கள் போதும் இனி
சர்வதேசமே உன் கண் திறக்கவேண்டும்
தமிழன் உரிமையை மதிக்கவேண்டும்
எம் பிள்ளைகள் வாழ்வு சிறக்கவேண்டும்!