Friday, January 30, 2009

தீப் பிழம்பாகிய தியாகி - முத்துக்குமார்

முத்துக்குமாரா
தமிழனுக்காய் உயிர் கொடுத்தாய் நீ
ஈழத் தமிழன் அவலம் பொறுக்காமல்
உன்னையே நீ அழித்தாய்
தீப் பிழம்பாய் நீ எரிந்து
உன்னை நீயே கொடுத்தாய்
தமிழன் விடிவிற்காய்
இந்திய அரசு கேட்குமா இதையெல்லாம்?
தியாகி திலீபனையே கொன்றவர்கள்
கேட்பார்கள் உன் கோரிக்கையை
என்றா எதிர்பார்த்தாய்?
ஏன் இந்த முடிவெடுத்தாய்?
எம் நெஞ்செல்லாம்
இரத்தக் கண்ணீர் வடிக்கிறதே
அறிவாயா எம் முத்துக்குமரா?

ஈழமக்களின் மனத்தினிலே
நீ ஓர் பெரிய மாவீரன்
எம் வலி பொறுக்க முடியாமல்
தீப் பிழம்பாகிய தியாகி நீ
ஈழம் மலரும் ஓர் நாள்
முத்தான எம் முத்துக் குமரன்
வீர நாயகனாய் வீற்றிருப்பான்
எம் மக்கள் மத்தியிலே
திண்ணமிது திடமாகச் சொல்கின்றேன்

வாழ வேண்டியவன் நீ
எமக்காக இன்னும் போராட வேண்டியவன் நீ
வீரத் தமிழன் நீ
மற்றவர்க்காய் மரணித்த
யேசுவையும் விஞ்சியவன் நீ
ஈழ்த்தமிழருக்காய் சிலுவை சுமந்தவன் நீ
மற்றவரின் விடிவிற்காய்
உன்னையே எரித்தவன் நீ!

என்னமாய் வலித்திருக்கும்
உன் உடலெல்லாம்
தமிழன் விடிவிற்காய்
தாங்கினாய் வலி எல்லாம்
ஈந்தாய் உன் உயிர்தனையே
தமிழன் வாழ்விற்காய்
நன்றி சொல்ல ஓர் வார்த்தையில்லை
வணங்கி நிற்கின்றோம்
நல் வாழ்வு வாழ்வேண்டும் நீ
வானகத்தே எம் மாவீரருடன்.

Thursday, January 29, 2009

புத்தனின் பெயரால் புதைக்கின்றாய்

புலம்பெயர் நாட்டில் நாமிருந்து
புண்ணாகிப் போன எம் இதயங்களில்
எழுகின்ற உணர்ச்சிகளை
அறிவீரா எம் உடன்பிறப்புகளே?
ஆறுதல் சொல்ல எமக்கோர் வார்த்தை இல்லை
அரவணைக்க துடிக்கின்ற எம் கைகள் உங்கில்லை
அறிவாயா எம் உறவுகளே?

நவீன கிட்லர் மகிந்தரின்
மமதை கொண்ட ராணுவத்தின்
செல்லடிபட்டும் குண்டடிபட்டும்
குற்றுயிராய் விழும் குழந்தைகள் கூட
மருந்தில்லாமல் மரணிக்கும்
அவலத்தை ஆரால் தாங்கமுடியும்
இந்த அகிலத்தில்?

பாவி மகிந்தா!!
புத்தனின் பெயரால்
புதை குழி தோண்டிப் புதைக்கின்றாய்
ஒன்றுமறியா எம்மவரை....
போருக்குப் போகின்றேன் என்று சொல்லி
எம் கற்ப்பிணிப் பெண்களையும்
தள்ளாடும் முதியோரையும்
தவழும் குழந்தைகளையும்
வெட்டிச் சாய்க்கின்றாய்
உனைக் கேட்பதற்கு
உலகத்தில் எவருமில்லை என்ற
மமதை தானே?

எம் தமிழர்
எம் பெற்றோர், உற்றோர்
அண்ணன் தம்பி
அக்கா தங்கை
ஆறி அமர இடமுமின்றி
அள்ளிக் குடிக்கத் தண்ணியின்றி
அரை வயிறு நிரப்ப வழியுமின்றி
மண் தரையிலும் மர நிழலிலும்
படுத்துத் தூங்குகின்ற காட்சிகள்
எம் மனதைப் பிழிந்து பிய்த்து எறிகிறதே!!

பிள்ளைகள் வீரிட்டு ஓலமிட
அம்மாக்கள் அரவணைத்து
உறக்கமும் இல்லாமல்
பேய் இருட்டில் விழித்திருக்க
வெளிச்சத்துடன் வந்தே
போடுகின்றாய் குண்டுகளை
பேடி மகிந்தா இதுதானா உன் வீரம்?

மறத் தமிழன் புற முதுகிட்டதாய்
சரித்திரம் இல்லையடா!
ஆறு நாட்டுப் படையுடனும்
அயல் நாட்டான் அரவணைப்புடனும்
அள்ளிக் கொடுக்கின்ற ஆயுதங்களுடனும்
பிச்சை ஏந்தி வந்துவிட்டாய்
போருக்கா இல்லை?
பொது மக்களை அழிப்பதற்காய்..