Saturday, December 22, 2007

விட்டகலா நினைவுகள் - சுனாமி

அகிலத்தையே அதிரவைத்து
ஆசியாவை அழித்தொழித்து
என் இதயத்தையே சுட்டெரித்த
சுனாமியின் நினைவுகள்
சுக்கு நூறாய் உடைக்கிறது என் இதயத்தை இன்றும்
ஆண்டு பதினொன்று கடந்தாலும்
என் நாளும் முயன்றாலும்
அழிக்க முடியவில்லையே உன் நினைவுகளை
மறக்கமுடியா நினைவுகளை
மறப்பதற்கே முயன்று நானும்
தோற்றே போய்விட்டேன் உன்னிடமே

சுனாமி என்று பெயர் கொண்டே
எம்மை அழிப்பதற்காய்
எம் மனத்தைச் சிதைப்பதற்காய்
எம் வாழ்வை ஒழிப்பதற்காய்
ஆர்ப்பரித்து எழுந்த ஆழிப் பேரலையே
உன் கொடுமைதனை கோபாவேசத்தை
என் சொல்லில் அடக்கிட முடியாது
எழுத்தில் வடித்திட முடியாது
உள்ளத்தில் இருந்து வடிகின்ற
இரத்தக் கண்ணீர்தான் இதை எடுத்தியம்பும்

அன்று கேட்ட அலறல் சத்தம்
அகிலத்தின் ஒவ்வோர் மூலையிலும்
இன்னும் எதிரொலியாய் கேட்கிறது
உன் பேரலையின் இரைச்சலையும் விஞ்சி
பச்சிளம் குழந்தைகளும்
படிக்கப்போன பிள்ளைகளும்
நடை பயில உன்னை நாடிவந்த வயோதிபரும்
காதலின் சுகத்தை உன்னுடனே
பகிர்ந்து கொள்ள வந்த காதலரும்
எழுப்பிய அபயக்குரல்
மீண்டும் மீண்டும் என் இதயத்தை மோதி
என் உணர்வுகளை வதைக்கிறது

அமைதியாய் இருந்தாய் நீ
ஆழிப்பேரலையாய் வந்து எம்மை அழிப்பதற்கா?
பொறுமையாய் இருந்தாய் நீ
பொல்லாத சுனாமியாய் வந்து எம்மை அள்ளிச் செல்வதற்கா?
தென்றல் காற்றை எம்மீது வீசி நின்றாய்
தெருவெல்லாம் வெள்ளமாய் வந்து
எம் வீடுகளை அடித்து உடைப்பதற்கா?
வாழ்வதற்கு எம் மீனவர்க்கு வழி சமைத்துக் கொடுத்தாய்
உன் பசி ஆற அவர்களையும் உணவாய் எடுத்துக் கொள்வதற்கா?
குழந்தைகளை அரவணைத்தாய் உன் கரைகளிலே விளையாட
அவர்கள் அலறும் கூக்குரல் கேட்டு மகிழ்வதற்கா?

தரணியில் மனிதன் வாழ
உனை நினைத்தோம் தாயாக
பொறுமையின் பொக்கிசமாய் உனை மதித்தோம்
உனைப்போல் பெருவாழ்வு வாழவேண்டும் மனிதன் என்றோம்
ஏன் இந்தக் கோலம் கொண்டாய்?
ஏன் இப்படிக் கோபம் கொண்டாய் எம்மீது?
ஏன் செய்தாய் இக் கொடுமை எங்களுக்கு?
என்ன அநியாயம் செய்தோம் நாம் உனக்கு?
கொலை வெறியர் அழிக்கின்றார் மானிடரை என்றே
கதிகலங்கி உலகம் நிற்கையிலே
ஆழிப்பேரலையாய் அட்டகாசமாய் ஆணவச் சிரிப்புடனே
உலகத்தின் உச்சக் கொலைவெறியன்
நீயேதான் என்று
பறைசாற்றி நின்றாயே பாதகனே சுனாமியே!
உன் பேய்க் கூத்து ஓய்ந்த பின்னே
உன் கரையெங்குமே சுடுகாடு
உடல் உருக்குலைந்து சிதையுண்டு
இறந்தவர்கள் ஒருபக்கம்
உற்றாரை பெற்றாரை
உடன் பிறந்தாரை உற்ற நண்பர்களை
இழந்து தவித்தவர்கள் மறுபக்கம்
கட்டிப்பிடித்த குழந்தைகள் கைநழுவி
உன் அலையிலே போனபோது
பெற்றமனம் துவண்ட காட்சி
ஒன்றுமே இல்லாது
ஒழிந்து போன உல்லாச விடுதிகள்
இயற்கையை உன் கடல் அழகை ரசிப்பதற்காய்
வந்த வெளிநாட்டாரை
உன் கோரப் பற்களினால்
வெட்டிச் சாய்த்துவிட்ட நிகழ்வுகள்
எல்லாமே விட்டகலா நினைவுகளாய்
என் மனத்தை ஆட்டிப் படைக்கிறதே!

கார் ஒன்றைக் கண்டேன் நான்
நிற்கிறது ஓர் வீட்டின் கூரை மீது
பிள்ளை ஒன்றைக் கண்டேன்
துடி துடித்துக் கிடக்கிறது
தென்னை மர வட்டுக்குள்ளே
வயோதிபர் ஒருவரைக் கண்டேன்
வான் ஒன்றின் கீழ் நசிந்து கிடக்கின்றார்
உன் பேய் அலைகள் எழுந்து பாய்கிறது
வீதிகளின் மேலால் கோபுரங்கள் மேலால்
நெடிதுயர்ந்த மரங்கள் மேலால்
ஊழிக்காலம் உலா வந்ததோ என்றே
எனது மனம் எண்ணியது
வெறுமையை மட்டும்
எஞ்சவிட்டாய் எமக்காக!
வெறுமையும் தனிமையும் செய்கின்ற கொடுமைதனை
உணர்ந்தார்கள் மக்களெல்லாம்!

அறிந்து கொண்டேன் உன் சீற்றத்தை
பொறுமையின் வள்ளல் நீ
பொய்யுரைக்கவில்லை நான்
மனிதர்கள் மனத்திலே
வஞ்சனைகள் வானளாவி நிற்கிறது
தமக்குள்ளே வளர்க்கின்றார் குரோதத்தை
போட்டியும் பொறாமையும் கொண்டே
மனிதகுலம் வெட்டிச் சாய்க்கிறது தம் இனத்தை
பொறுக்கமுடியவில்லையா உன்னால்
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்
பொறுமையின் சின்னமாய் இருந்த நீ
சீற்றம் கொண்டுவிட்டாய் மனித குலம் மீதே
கோரத்தாண்டவம் ஆடியே நீ முடித்திட்டாய்
பார்க்கவில்லை நீ ஓர் பாரபட்சம்
சாதியில்லை இனமில்லை மதமில்லை
வேறெந்தவொரு பேதமுமில்லை உன்னிடத்தில்
கொடியவனே என்றாலும் நீ
எம்மவர்க்கு உணர்த்திவிட்டாய் சமத்துவத்தை
நல்ல மனம் பெற்று நாமும் வாழ்வோம் இனிதாக!!!

No comments: