Tuesday, June 17, 2008

என்னை நான் தேடுகிறேன்

தாயகத்தில் அன்று நான்
நானாக இருந்தேன் மகிழ்வாக
இன்று புலம் பெயர்நாட்டில்
நான் நானாக இல்லை என்பதனால்
என்னைத் தேடுகிறேன் என்னாளும்
வேறு சிலருக்காய் வாழ்கின்றேன்
இங்கே புதிய மனிதனாய்
மனிதப் பண்புகளை
மதித்தார்கள் அங்கே
மனிதன் பணப்பையை
மதிக்கிறார்கள் இங்கே
அதனால் என்னையே நான்
மாற்றிக்கொண்டேன் இவர்களுக்காய்
இப்போ தேடுகிறேன் என்னையே நான்!

Monday, June 16, 2008

ராணுவத்தின் வேட்டுக்கள்

பசியும் பட்டினியும்
கொலையும் கொள்ளையும்
கடத்தலும் கப்பம் கேட்டு மிரட்டுவதும்
வான்குண்டுத் தாக்குதலும்
கிளைமோரின் வெடிப்புகளும்
அகதியாய் இடம் பெயர்வுகளும்
அநியாயச் சாவுகளும்
இவையே எம் மண்ணில்
அன்றாட நிகழ்வுகளாய் ஆனபோதும்
விடிந்த பொழுதில் விழித்தெழுந்து
அல்லும் பகலும் அயராதுழைத்து
அம்மாவையும் அக்கா தங்கையையும்
அரணாகக் காத்து நின்ற
சின்னஞ் சிறுவனையும்
விட்டு வைக்கவில்லை
ராணுவத்தின் வேட்டுக்கள்.

Thursday, May 1, 2008

தலித்துக்கள் விடுகின்ற கண்ணீர்

கண்ணீர் சொல்லும் கதைகள்
கவிதைகளாய் வெளிவந்தால்
காலத்தால் அழியாத
காவியங்கள் பல மலர்ந்திருக்கும்
அவை கதைகளாய் வெளிப்பட்டால்
உலகையே வியக்க வைத்திருக்கும்

தண்ணீர்ப் பஞ்சம்
தமிழ் நாட்டில்
தலைவிரித்தாடுவதால்
விவசாயிகள் கண்களிலே
கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுக்கிறது
அயல் மானிலத்தார்
தண்ணீர் கொடுக்க மறுத்தாலும்
எம் உழவர் துன்பத்தில்
பொழிகின்ற கண்ணீர்
நம் மண்ணில் சொரிவதனால்
விளையும் பயிர்கள் என்றே
நம்பிடுவோம் திடமாக!!!

ஆதி மனிதனையும்
வெட்கித் தலை குனிய வைக்கின்ற
சாதீயம் பேசி
குழி தோண்டிப் புதைக்கின்றார் நாகரீகத்தை
என்ன கொடுமை இது
தமிழ் நாட்டினிலே
தர்மம் செத்தது எப்போது?
ஊரின் நடுவே பெரும் சுவர் எழுப்பி
பிரித்து வைக்கின்றார் தலித் மக்களையே
கலக்கத்தில் தலித்துக்கள்
விடுகின்ற கண்ணீர்
உடைத்துவிடும் அச்சுவரை
பெற்றிடுவார் உரிமைதனை
நம்பிடுவோம் திடமாக!!!

Monday, April 14, 2008

வாழ்க்கை

மனித வாழ்க்கை
மாயத்தில் மட்டுமே நடக்கிறது
நடிக்கிறார்கள் எல்லோரும் நல்லாவே
காதல் இல்லையேல் சாதல்
புலம்பிடுவார்
தம் காம இச்சைகளைத் தீர்ப்பதற்காய்
ஈருடல் ஓர் உயிர் என்றே
வாழ்ந்திடுவார் கணவன் மனைவியுமாய்
அதில் ஒருவர் இறந்திட்டால்
அடுத்த கல்யாணம் செய்வதற்காய் துடித்திடுவார்
எல்லாமே நாடகம்தான்

மக்களுக்குச் சேவை செய்கிறேன் பார் என்று
சேகரிப்பார் வாக்குக்கள் நல்லாவே
வென்றிடுவார் தேர்தலிலே
ஆகிடுவார் மந்திரியாய்
மறந்திடுவார் அம் மக்களையே
ஊழல்கள் புரிந்தே
உல்லாச வாழ்க்கை வாழ்ந்திடுவார்
எல்லாமே நாடகம்தான்

மகிழ்வாய் இருப்பதாய்
தம்மையே ஏமாற்றி
வாழ்ந்திடுவார் பல பேர்
புலம் பெயர் நாட்டினிலே
இரண்டு வேலை செய்திடுவார்
வீட்டுக்கடன் வட்டியைக் கட்டிடுவார்
மிகுதி ஒன்றும் இல்லாமல்
அல்லல் பட்டிடுவார்
வசதியாய் இருப்பது போல்
நடித்திடுவார்
எல்லாமே நாடகம் தான்

உள்ளே அழுகின்ற
ஆயிரம் ஆயிரம் எம்மவர்கள்
வெளியே சிரித்தபடி
உலாவருகின்றார் மற்றவர்க்காய்
உலகமே நாடக மேடை
சொன்னார்கள் பெரியவர்கள்
நடிக்கின்றோம் நாம் எல்லாம்
எல்லாமே நாடகம் தான்

Wednesday, April 2, 2008

குரும்பசிட்டி

என் உள்ளத்தின் உணர்வுகளை
இதயத்தின் அதிர்வுகளை
சுவாசத்தின் மென்மையினை
அள்ளித் தெளித்திட்ட
என் ஊரின் காற்றை
சுவாசிப்பதற்காய்
ஏக்கமுறும் எம்மவர்க்கு
ஊர்க்காற்று வீசுகின்ற
தென்றல் மாலைப் பொழுது இது
மகிழ்வாய் நாம் எல்லாம்
கூடி நிற்கின்றோம் கூட்டுக் குடும்பம் போல்
உள்ளத்தின் உணர்வுகளை
துடைத்தெறிய முற்பட்டு
முடியாமல் போனதினால்
கூடி இங்கு எம் உணர்வுகளை பகிர்கின்றோம்
எம் இதயத்தின் அதிர்வுகள் ஒவ்வொன்றும்
எம் ஊரின் கதை பேசும்
எம் சுவாசத்தின் ஒவ்வோர் மூச்சும்
எம் ஊரின் மூலை முடுக்கெல்லாம்
சுற்றிச் சுழன்று வரும்


என் பசுமையான நினைவுகளில்
பதிந்திருக்கும் இனிமைகளை
அள்ளிக்கொடுத்த என் அருமை ஊரே
என் இதயத்தின் ஒவ்வோர் அணுக்களிலும்
உன் நினைவே
குடிகொண்டிருக்கும் எந்நாளும்
குரும்பசிட்டி என்றதுமே
கூதுகலம் தாங்கமுடியாது
எம் ஊரவற்க்கு
சிறிய ஊர் என்றாலும்
சிங்கப்பூர் என்றே சொல்லிடுவார்
எம் ஊரை மற்றையோர் எல்லாமே
பெருமிதம் மேலோங்கும் எம்மவற்கு
அழியாத எம் ஊரின் நினைவுகளை
எம்மவர் இதயங்கள்
எந்நாளும் சுகமாய் சுமந்து நிற்கும்
சிறியதோர் கிராமமாய்
சிங்காரச் செழிப்புடனே
அயலவரை அங்கலாய்க்க வைத்தாயே
என்ன இல்லை எமதூரில்?
அழகான வீடுகளும்
அளவில்லாத் தோட்டங்களும்
மின் விளக்கின் ஒளியினையே
எல்லோர்க்கும் முன்னமே நாம் பெற்றோம்
வீதி ஓரமெங்கும் பசுமை செளித்திருக்க
மதில்களெல்லாம் தொடராய்
விரிந்து செல்லும்...
ஐந்தாறு கோவில்கள்
அடுக்கடுக்காய் சூழ்ந்திருக்கும்
அழகான கோபுரங்கள்
அதற்கு இன்னும் மெருகூட்டும்
அழகான அம்மன் கோவில் தேரை
அண்ணார்ந்து பார்த்தே
அகமகிழ்வோம் நாம் எல்லாம்
அயலூரவர்கள் எல்லாம்
எம் கோவில் நோக்கிப் படையெடுப்பார்
அருள் புரிவார்
எம் அம்மாளாச்சியுமே அற்புதமாய்

பத்தாம் வகுப்புவரை பாடசாலை
ஐந்தாறு சங்கங்கள்
அனைத்துக்கும் கட்டிடங்கள்
படித்தோரின் எண்ணிக்கை
பலத்தைக் கொடுத்தது எம்மூருக்கு
கலைகளுக்குப் பெயர் எடுத்த
பெரியார்கள் வாழ்ந்தார்கள்
எமதூரில்
பெருமை சேர்த்தார்கள்
அகிலமெங்கும் குரும்பசிட்டிக்கே!

இளமையின் காலத்தை
இனிய எம் மண்ணில் களித்ததற்காய்
சொல்கின்றேன் நன்றிதனை
எந்நாளும் கடவுளிற்கே
இன்னும் ஓர்முறை
எம் மண்ணை முத்தமிட்டால்
மனத்தின் சுமையெல்லாம்
பஞ்சாய்ப் பறந்துவிடும்

எம் அப்பாவும் அம்மாவும்
அவர்தம் பெற்றோரும்
பிறந்து வளர்ந்து
பூரிப்பாய் வாழ்ந்த பூமி அது
எமக்கல்லோ சொந்தமது
எமக்கல்லோ சொந்தமது!
எம் கண்களெல்லாம்
கண்ணீரைக் கொட்டிநிற்க
பகை கொண்டு வெறி கொண்டு
எமதூரை ஏன் பறித்தாய்
ராணுவமே?

அரசடிச் சந்திக்கும்
அம்மன் கோவிலிற்கும்
மணிக்கடைப் படிக்கட்டிற்கும்
மாறி மாறி ஓடிய நாட்கள்
மனதினை விட்டகல
மறுத்தே நிற்கிறது
அயலூரார் மெச்சுகின்ற
அருமையான ஊரெனவே
பேரெடுத்தாய் சிறப்பாக
அடிபிடி சண்டைக்கு
போகமாட்டார் எமதூரார்
அள்ளிக் கொடுக்கின்ற வியாபாரத்தில்
நீ என்றுமே முன்னணியில்

இனிய இளமைப் பருவத்தே
நாமெல்லாம்
கூடிக் கும்மாளம் அடித்த காலங்கள்
விடலைப் பருவத்தே பெற்ற நண்பர்கள்
காலத்தால் அழியாத அவ் நினைவலைகள்
சந்தியிலே நாமிருந்து போட்ட சத்தங்கள்
நக்கலடித்துப் பாடிய பாட்டுக்கள்
மாங்காய் தேங்காய்
மதிலேறிப் பறித்த அநுபவங்கள்
கள்ளமாய்ப் பார்த்து
காதலுக்காய் ஏங்கிய காலங்கள்

எம் ஊரின் ஒவ்வோர் மூலையும்
எம் கதை சொல்லும் வாயிருந்தால்
இன்னும் ஓர் முறை
எம் ஊரில் கால்பதிக்க
கடவுளே கருணை காட்ட மாட்டாயா?
கல் நெஞ்சு ராணுவத்தை
எம் ஊரை விட்டு
துரத்தி அடிக்க மாட்டாயா?

இந்தக் கவிதை எம் ஊரவரின் ஒன்றுகூடல் நிகழ்வான ஊர்க்காற்று நிகழ்வின் போது என்னால் வாசிக்கப்பட்டது.

Wednesday, March 12, 2008

கனவைத் திருடாதே

ஆழ்ந்த உறக்கத்தில்
நான் இருந்து
அலை அலையாய்
காணும் சுகமான கனவுகளை
என்னவளே
உன்னுடன் விழித்திருப்பதனால்
தொலைத்துவிட்டேன் இன்றளவும்
இனியும் திருடாதே
என் இன்பக் கனவுகளை
உறங்கவிடு நிதர்சனமாய் நிம்மதியாய்
என் கனவுகள் வேண்டும் எனக்கு
கனவின் மகிழ்ச்சி நிஜத்தில் இல்லை
உணர்வாயா என் காதலியே!

Friday, March 7, 2008

சர்வதேசமே உன் கண் திறக்கவேண்டும்

அன்பாய் உமை வளர்த்தோம்
ஆருயிராய் உமை நினைத்தோம்
ஆண்டவன் தந்த கொடையெனவே
உமை மதித்தோம்
குழந்தையாய் நீவிர்
இவ்வுலகில் வந்துதித்தபோது
குடும்பமே குதித்தெழுந்து
சந்தோசம் கொண்டாடி மகிழ்ந்திற்று

உம் மழலைச் சொல் கேட்பதற்காய்
மணிக்கணக்காய் தவம் கிடப்போம்
நடைபயில வைத்திடுவோம்
நடு வீட்டை வெளியாக்கி
ஓடி விளையாட
மைதானம் அமைத்திடுவோம்
சீராட்டித் தாலாட்டி
சிறப்பாய் வாழ்ந்திருப்போம்

நாம் பட்ட கஸ்டங்கள்
எம் பிள்ளைகள் படக் கூடாதென்றே
பகலென்றும் இரவென்றும்
வேலைகள் செய்திடுவோம்
அ- சொல்லிக் கொடுத்திடுவோம்
ஐந்து வயதாகுமுன்பே
ஆங்கிலமும் புகுத்திடுவோம்
அகிலமும் சென்று வரவேண்டுமென்றே
பாடசாலைக் அனுப்பிவிட்டு
படலையில் காவல் காத்து நிற்போம்
பள்ளி முடிந்ததுமே
பக்குவமாய் அணைத்தெடுத்து
பசிக்குதா கண்ணே என்று
பவ்வியமாய் வினாத் தொடுத்து
பல் சுவையாய் உணவும் ஊட்டிடுவோம்

குழந்தையாய் இருந்தவர் நீர்
இளைஞராய் வளர்ந்துவிட்டீர்
வாழ்வில் இனி எமக்கும்
வசந்தம் தான்
படிப்பார்கள் எம் பிள்ளைகள் வடிவாக
பட்டம் பெறுவார்கள் சிறப்பாக
ஊருக்கும் உதவிடுவார்
எமக்கும் பெருமை சேர்த்திடுவார்
பெற்றோர் எம்முள்ளே
கனவுகள் ஓடி வரும் எந்நாளும்

பாழாய்ப் போன குண்டுச் சத்தம்
கனவுகளை ஒரு நொடியில் கலைக்கிறது
ஏன் வளர்ந்தாய்
என் மகனே! என் மகளே!
பொல்லாத சிங்கள ராணுவம்
உமை போட்டுத் தள்ளப் பார்க்கிறது
வெள்ளை வானில் வருகின்ற
புலனாய்வு எமதர்ம ராயாக்கள்
எம் பிள்ளைகளை
கடத்திக் கொலை செய்கின்றார்
வானில் இருந்தே கொட்டுகின்ற குண்டுகளால்
உம் வாழ்வையே குழி தோண்டிப் புதைக்கின்றார்

எம் பச்சைப் பிள்ளைகள்
நம் கண் முன்னே
கடத்தப் படுவதும்
கண்மூடித்தனமாய் சுடப்படுவதும்
கண்டும் தாங்குமா எம் இதயங்கள்?
சித்திரவதைக் கூடங்களான
சிறீலங்காவின் சிறைக்கூடங்களில்
எம் சின்னஞ் சிறிசுகள்
அடைபட்டுக் கிடக்கையில்
தூங்குமா எம் இதயங்கள்?

இந்த வாழ்விற்கு
விடிவொன்று வேண்டும் விரைவாக
இழப்புக்கள் போதும் இனி
சர்வதேசமே உன் கண் திறக்கவேண்டும்
தமிழன் உரிமையை மதிக்கவேண்டும்
எம் பிள்ளைகள் வாழ்வு சிறக்கவேண்டும்!

Tuesday, February 26, 2008

ஏன் இந்த வேதனை?

மனத்துள்ளே ஓர் ஆயிரம் சுமைகள்
இதயத்தின் பாரத்தை இன்னும் அதிகமாக்கி
அளவில்லா வேதனையைத் தருகிறது
என் உள்ளே!
ஏன் இந்த வேதனை? எனக்கேன் இந்த வேதனை?
கேட்டுவிட்டேன் இந்தக் கேள்விதனை
ஒர் ஆயிரம் முறை
விடை காண முயன்று முயன்றே
தோற்றுவிட்டேன் நானும் இன்றளவும்

இதயம் அழுகிறதே! மனம் துடிக்கிறதே!
உடலில் ஓர் துன்பமில்லை
ஆனால் உள்ளத்தில்
உயிர் போவதுபோல் ஓர் வேதனை
காரணத்தைத் தேடினேன்! தேடினேன்!
இப்போதான் புரிந்து கொண்டேன்
உன்னிடம் தந்த என் இதயத்தை
உடைத்து நொருக்கி விட்டு
தந்துவிட்டாய் மீண்டும் என்னிடமே
திருத்த முடியா என் இதயத்தை
திருத்துவதற்காய் அலைந்தேன்
முடியுமட்டும்
புரிந்து கொண்டேன் இப்போது
உன்னிடம் மாத்திரமே உண்டு
என் உள்ளத்தின் நோய் தீர்க்கும்
அருமருந்து
தருவாயா? என் அருகே வருவாயா?

Saturday, February 23, 2008

மனைவியும் நாயும்

அன்று அவன் வாழ்வு
எல்லாமே இனிமைதான்
வாழ்வின் வசந்தத்தை
மேலாக அனுபவித்தான்
அன்பான மனைவியும்
நன்றியுள்ள நாயும்
அவனிடம் இருந்ததனால்
குறைவில்லா உல்லாசம்
கூதுகலமான இல்வாழ்க்கை
நன்றி சொல்வான் என்நாளும்
ஆண்டவனுக்கே
இவ் வாழ்வை அளித்ததற்காய்

களைப்புடன்
வேலையால் வரும்போது
அன்பு மனைவியவள்
கொடுத்திடுவாள்
இனிய முத்தமொன்று
நன்றியுள்ள நாயோ
குரைத்தே
தன் மகிழ்ச்சியினை
சொல்லி நிற்கும்
அவனுக்கோ
களைப்பெல்லாம் தீர்ந்து போகும்
உற்சாகம் பொங்கி வரும்

இன்றும்.............
அவன் வேலையால் வரும்போது
முத்தமும் கிடைக்கிறது
குரைத்தலும் நடக்கிறது
ஒரே ஒரு மாற்றம்
மனைவி இப்போ குரைக்கின்றாள்
நாயோ அன்பாய்
தன் நாவினால் நக்கி
முத்தம் கொடுக்கிறது

காலம் செய்த கோலம்
பத்து வருடம் போனதினால்
மனைவி அவள் மாறிவிட்டாள்
கடுகடுப்பாய் குரைக்கின்றாள்
நாயும் மாறியது
பத்து வருடம் போட்ட உணவிற்காய்
நன்றியுடன் முத்தம் இடுகிறது
மனிதர்களே நாய்களையும்
கெடுத்து விடாதீர்
அவன் மனமொடிந்து போய்விடுவான்.

Thursday, February 21, 2008

புலம்பெயர் வாழ்வு

நாட்டிலே நடந்தவைகள்
மனதை வதைத்ததனால்
புலம் பெயர்ந்தோம் நாம் எல்லாம்
நாம் உண்டு நம் வேலை உண்டு
என்றிருந்தோம் மகிழ்வாக
வேலையைப் பறித்தீர்
மாவட்ட அடிப்படை என்றே
கல்வியைப் பறித்தீர்
தரப்படுத்தல் என்றே
எம்மவர் வர்த்தகத்தைப் பறித்தீர்
இனக் கலவரம் செய்தே
பொறுமையாய் இருந்தவர்
போர்க் கொடி உயர்த்தினர்
மரணம் என்பது
மலிவாய்ப் போனது நம் மண்ணில்
வந்தோம் நாமும் புலம்பெயர்ந்தே
வழமான வாழ்வு வாழ்வதற்கே!

கூட்டல் பெருக்கல் படிப்பித்த
கந்தசாமி மாஸ்ரர்
இங்கே கூட்டிப் பெருக்கும்
வேலையிலை குளிருக்கை நிற்கிறார்
வைத்தியராய் வேலைபார்த்த
வைரமுத்து இங்கே
இறைச்சிக் கடையில்
வெட்டுகிறார் ஆட்டு இறைச்சியினை
துண்டு துண்டாய்
எக்கவுண்டர் ஏகாம்பரம்
எண்ணி எண்ணிக் கழுவுகிறார்
கோப்பைகளை றெஸ்ரோறன்ரிலே
இவர்களுக்கெல்லாம்
நாட்டிலே வேலைசெய்த நேரங்கள்
நினைவில் வர
அழுகை தானாக ஓடிவரும்

கிரைண்டரும் மிக்சியும்
கேட்ட பெண்களெல்லாம்
இங்கே
அம்மியும் ஆட்டுக்கல்லும்
உரலும் உலக்கையும்
வேணுமெண்டு அடம்பிடிக்கின்றார்
சமையல் செய்வதற்கு
தலையில் கைவைத்தே
செய்திடுவார் ஆண்களெல்லாம்
சமையலையே
நாட்டிலை நாம் இருந்த வேளை
கரட், லீக்ஸ்
மைசூர் பருப்பு, உருளைக்கிழங்கு
கேட்டார்கள் பெண்களெல்லாம்
இங்கே
முருங்கை இலை வாழைப் பொத்தி
ஊர்க் கீரை, மரவள்ளிக் கிழங்கு
எல்லாம் வேணுமாம்
சமையல் செய்வதற்கு
எல்லாமே பிரச்சனை தான்
புலம் பெயர் நாட்டினிலே

போதும் இந்தப்
புலம்பெயர் வாழ்வு
எப்போ பெறுவோம்
நாம் சுதந்திரத்தை
அப்போ மீண்டும் பெயர்வோம்
ஈழத்திற்கே!!

Sunday, February 10, 2008

தாங்குமா என் இதயம்?

வானத்தே வட்டமிடும்
பொல்லாத கழுகுகளாய்
கோளிக்குஞ்சுகளை
கொன்று தின்னவென்று
துடிக்கும் வல்லூறுகளாய்
கிபீர் விமானங்கள்
எம் மண்ணின் வானத்தின் மீதே
பறந்து வட்டமிடுகிறது
பயமும் பீதியும் நடுக்கமும்
ஒன்று சேர பதறிப் போய்
பிள்ளைகள் அம்மாவை
அரவணைக்கும் வேளை
அந்த அன்னையின் வேதனை
கண்களில் கண்ணீராய்
உள்ளத்தில் நெருப்பாய்
சொல்லில் வடிக்கமுடியா உணர்வுகளாய்
கதறலாய் வெளிப்படும் வேளை
என் இதயம் வெடிக்கிறது
தாங்குமா என் இதயம்?

இவை கொட்டுகின்ற குண்டுகளால்
சிதறி சின்னாபின்னமாகின்ற
கட்டிடங்கள் வீடுகள்
நாம் வாழ்ந்த வளர்ந்த
புனித இடங்கள் அவை
அதன் நடுவே
குற்றுயிராய் உயிருக்காய்
போராடும் குழந்தைகள்
தண்ணீர் தண்ணீர் என்று
கதறி அழ
உதவக் கூட முடியாமல்
காலைத் தொலைத்துவிட்ட
அக் குழந்தைகளின் பெற்றோர்கள்
ஆபத்துக்கு உதவ வந்த
அம்புலன்ஸ் வாகனங்கள்
ஆமிக்காரனைத் தாண்டி
ஆஸ்பத்திரிக்குப் போக ஏலாதாம்
என்ன கொடுமை இது
தாங்குமா என் இதயம்?

எமது வீதி எங்கும்
குருதி வெள்ளம்
உயிரில்லா உடலங்கள்
நாள் தோறும்
நம் கண் முன்னால்
வெள்ளை வானிலே
வருகின்ற யம தூதர்கள்
எருமை வாகனத்தை
வெள்ளை வானாக்கி
எம்மவரை மேலோகம்
கொண்டு செல்லும் பாதகங்கள்
கடத்தலும் கப்பம் வேண்டுதலும்
சுடுதலும் சுட்டுப் பொசுக்குவதும்
எம் மக்கள் வாழ்வின்
நித்திய வழமையாய்
ஆகிப் போனதை
தாங்குமா என் இதயம்?

புலம் பெயர் நாட்டில்
புகலிடம் தேடியதால்
என் நெஞ்சத்தின் சுமை
ஒன்றும் குறையவில்லை
நாள் தோறும்
கேட்கின்ற செய்திகளால்
என் மனம் இடிந்தே போகிறது
ஒவ்வோர் செய்தியும்
ஒவ்வோர் பாறாங்கல்லாய்
என் இதயத்தை
இறுக்கி அடிக்கிறது
தாங்குமா என் இதயம்?

மனத்தில் ஓர் சோகம்
என்னவென்றே புரியாத புதிராக
நான் பிறந்த மண்ணை
பிரிந்து வந்ததனால்
ஏற்பட்ட வேதனையோ?
இல்லை......
நம் மண்ணில் எம் மக்கள்
படுகின்ற துயரங்கள்
தருகின்ற வேதனையோ?
கண்களில் வழியும் விழி நீரை
துடைத்தேன் நானும் கையாலே
சிவப்பு நிறத்தில்
உதிரம் கொட்டியது விழி அதனில்
இதயத்தின் உடைவுகளின்
குருதி இதுவென்றே
உணர்ந்து கொண்டேன்.

Saturday, February 2, 2008

புளிப்பும் இனிப்பும்

களவாகக் கல்லால் அடித்து சுவைத்துச் சாப்பிட்ட
புளி மாங்காய் நன்றாய் இனித்தது அன்று
பார்த்துப் பார்த்து கடையில் வாங்கிய
கனிந்த மாங்காய் சரியாய் புளிக்குது இன்று
புளிப்பும் இனிப்பும் மனத்தில் இருக்கும்.

Monday, January 28, 2008

ஏன் இந்தக் கொடுமை தமிழனுக்கு!

அடுக்கடுக்காய் வந்த அகதிச் செய்திகளை
கேட்டபின் என் பேனாவைத் தொட்டதனால்
விளைந்ததுதான்
என் இதயத்தில் இருந்து எழுந்து வரும் இக் கவிதை
அகதிகளாய் வருகின்ற
என் அருமை தம்பிகளே தங்கைகளே
உங்களின் வருகையினை
வரவேற்க என்னால் முடியவில்லை
ஏன் என்றால் உங்கள் வருகை
சாவிற்கும் வாழ்க்கைக்கும் இடைப்பட்டே இருக்கிறது
நீங்கள் சாவுடன் மோதி கவிழ்கின்ற கப்பலிலும்
மூட்டை ஏற்றும் கொன்ரெயினரிலும்
மூச்சு விடமுடியாது
இறக்கின்ற செய்திகளை கேட்கும்போது
எப்படி உங்கள் வருகையை நான் வரவேற்பேன்

இத்தாலிக் கடற்கரையில்
கப்பலில் கவிழ்ந்தவன் தமிழன்
இந்தோனேசியாவில் இன்றும்
அடைபட்டுக் கிடப்பவன் தமிழன்
அவுஸ்திரேலியாக் கடற்பரப்பில்
அவலப்படுபவன் தமிழன்
துருக்கிச் சிறைகளில்
வாடி வதங்குபவனும் தமிழன்
ஏன் இந்தக் கொடுமை தமிழனுக்கு
ஐயா! ஏன் இந்தக் கொடுமை தமிழனுக்கு!

வாயாரச் சாப்பிட்டு சீராக இருந்தவன் தான் தமிழன்
கலையிலும் கலாச்சாரத்திலும்
வெள்ளையனை விஞ்சியவன் தமிழன்
தன்மானம் உள்ளவன் தான் தமிழன்
தரணியெங்கும் புகழ் கொண்டவன் தான் தமிழன்
இன்றோ ஐரோப்பிய நாடெல்லாம் அகதிகளாய்
அல்லல் படலாமா தமிழன்?
சுதந்திரம் கேட்பதெல்லாம்
சுயநிர்ணய உரிமையுடன் வாழ வழி கேட்பதெல்லாம்
இவ்வுலகில் ஓர் கிரிமினல் குற்றமா?
நம் பெண்களெல்லாம் தம் கற்பை
காப்பதெல்லாம் ஓர் பாவமா?
நம் மழலைகளை
மாற்றானின் துப்பாக்கிச் சன்னங்கள் துளைக்காமல்
பாதுகாப்பதுவும் ஓர் கொடுமையா?
அன்னையை தந்தையை அடிக்கவரும் ஆமிக்காரனை
எதிர்ப்பதுவும் ஓர் இகழ்ச்சியா?

ஐ நா என்கின்றீர்
உலகத்தின் அவலம் எல்லாம்
தீர்ப்பவர் நீர்தான் என்கின்றீர்
ஐரோப்பிய நாடுகள் எல்லாம்
தார்மீகத்தின் தந்தைகளாம்
அமெரிக்காவே அன்புடன்
அகிலத்தையும் ஆட்சி செய்கிறதாம்
அல்லல் படும் தமிழினத்தை அரவணைக்க
உங்களுக்கெல்லாம் ஏன் ஓர் மனம் வரவில்லை
அகதிகளாய் நாம் இன்று ஓடி வருவதற்கு
அத்திவாரம் இட்டவர் நீங்கள் தானே?
இன்று எம்மை சீறுகின்ற சிங்களத்தின் கைகளுக்கே
திருப்பி அனுப்பத் துடியாய்த் துடிக்கின்றீர்
அகதி என்று நாம் வருவதனால்
எம்மை நீர் எள்ளி நகையாடலாமா?

எமக்கென்று ஓர் நாடுண்டு
அதற்கென்று ஓர் கலை உண்டு
கலாச்சாரம் உண்டு மொழி உண்டு
எல்லாமே எமக்குண்டு
மாற்றானின் அதிகாரம் நம் மண்ணில் பதிந்ததனால்
நாம் இன்று அகதி ஆனோம்
அகதிகளை ஆக்குபவர்கள் நீங்கள் ஐயா
ஆயுதம் விற்பதுவும் நீங்கள் ஐயா
சண்டைகளை மூட்டிவிட்டு
சமாதானம் செய்பவரும் நீங்கள் ஐயா
எங்களை எட்டி உதைக்க
உமக்கொன்றும் உரிமையில்லை
நமக்கென்று ஓர் நாடு வேண்டும்
வாழ்வதற்கு நமக்கு ஓர் உரிமை வேண்டும்
உரிமையை வென்றெடுக்க
உயிரையும் கொடுப்பவன் தமிழன்
தம் உயிர் காக்க தம் மழலைகளின் பயம் போக்க
அகதிகளாய் இன்று
அலை மோதி அழிகின்ற நிகழ்வுகளை
எப்படி நாம் வரவேற்போம்!

சுடுகாடாய் தமிழ் ஈழத்தை
சுட்டெரிக்கத் துடிக்கின்றான்
சிங்கள இன வெறியன்
அகதியாய் வருபவனை
அணைப்பதற்கு மறுக்கின்றான்
ஆணவம் கொண்ட ஐரோப்பியன்
அகதியாய் வரும் உன்னை
எப்படி நாம் வரவேற்போம்?

Saturday, January 26, 2008

எப்படி எழுந்து வரும்?

சோகத்தில் மனது எழுதும் பல கவிதை
கோபத்தில் உணர்வு சொல்லும் சில கவிதை
காதல் மோகத்தில் கதை பேசும் ஓர் ஆயிரம் கவிதை
விடுதலை வேட்கையிலே பிறக்கும் வீர காவியக் கவிதை
மட்டற்ற மகிழ்ச்சியிலே பொங்கி வரும் இனிய கவிதை
எனக்கு மட்டும் ஏன் எழுத வரவில்லை ஓர் கவிதை
உணர்வுகள் அற்ற வெறுமையாய் எனது மனம்
எப்படி எழுந்து வரும் கவிதைகள் என்னுள்ளே!!

Thursday, January 24, 2008

அடிப்பேன் அடுத்த முறை நிட்சயமாய்

என்னவளே அழவேண்டாம்
உன்னை நான் அடித்ததற்காய்
அணைக்கும் என் கரங்கள்
அடிக்கவும் செய்கிறது
ஏன் என்று புரிகிறதா என்னவளே?
உன் மேல் கொண்ட அளவில்லா அன்பினால்தான்
ஆத்திரம் வருகிறது சிலவேளை
நீ இல்லாமல் எனக்கோர் வாழ்வில்லை
அறிவாய் நீயும் நிதர்சனமாய்
உன் கையால் பரிமாறும்
நீ சமைத்த உணவை நான் உண்டு
உனக்காகவே வாழ்கின்றேன் இவ்வுலகில்
உண்மை புரியும் உனக்கு
உன்னில் எனக்கு உரிமை உண்டென்றே
அடித்தேன் நானும் சில வேளை
இது உனக்குப் பிழையென்றால்
சொல்லிவிடு இப்போதே!

அழவில்லை நீர் என்னை அடித்ததற்காய்
உம் அன்பு புரிகிறது நல்லாவே
எனக்கும் உம்மேல் தீராத அன்புண்டு
என்றே உணர்த்த நானும்
அடிப்பேன் அடுத்த முறை நிட்சயமாய்
புரிந்து கொள்ளும் என்னவரே!!

Monday, January 21, 2008

அவனைத் தேடுகிறேன்

அவனைத் தேடுகிறேன்
எல்லா இடங்களிலும்
களைத்து ஓய்ந்து விட்டேன்
காணவில்லை எவ்விடமும்
எங்கே அவன்?
எப்படித் தொலைந்தான் அவன்?
அழுத கண்களுடன் கேட்டேன்
அவன் அம்மாவை
கண்டீர்களா அவனை?
கலங்கிய கண்களுடன் சொன்னார்
இல்லை என்றே!
அங்கும் இங்கும் ஓடி ஓடி
தேடினேன் அலுக்காமல்
ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது எனக்கு
கேட்டேன் அவன் மனைவியிடம்
கண்டீர்களா அவனை?
அழுகையும் சோகமும் ஒன்று சேர
சொன்னாள் அவளும்
அதே பதில்தனையே
வருவோர் போவோர் அனைவரையும்
கேட்டே அலுத்து விட்டேன்
நானாக அவனைக் கண்டுபிடிக்க
சபதம் எடுத்தேன் முடிவாக...

பழைய நினைவுகள்
புதிதாய் எழுந்து வர
மீட்டேன் என் நினைவுகளை
அன்று......
அவனும் நானும் இனிய நண்பர்கள்
துடிப்புள்ள இளையனாய் அவன் இருந்தான்
துன்பம் வந்ததென்று யார் சொன்னாலும்
துயர் துடைக்கப் புறப்படுவான் உடனேயே
துஸ்டரைக் கண்டால்
எட்டி உதைத்திடுவான் காலாலே
அநியாயம் செய்பவரை
அஞ்சாமல் கேட்டிடுவான்
இதுவென்ன நியாயமென்று
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரை
உரக்கப் பேசியே விரட்டி அடித்திடுவான்
பெரியோரை மதித்திடுவான்
சிறியோரை அணைத்திடுவான்
நல்லவரைப் போற்றிடுவான்
நயவஞ்சகம் செய்வோரை நையப் புடைத்திடுவான்
இருப்பதே போதுமென்று
ஆண்டவன் கொடுத்ததே அதிகமென்று
அகமகிழ்ந்து வாழ்ந்திருந்தான்
நண்பர்கள் எல்லோர்க்கும்
அவன் நல்லதோர் வழிகாட்டி
உயிரையும் கொடுக்கத் துணிந்திடுவான்
தன் நண்பரைக் காப்பதற்காய்
அவன் அன்று வாழ்ந்த வாழ்க்கை அது....

இன்று....
இவற்றையெல்லாம் எங்கோ தொலைத்துவிட்டு
இருக்கின்றான் இதயமில்லா மனிதனாய்
மற்றவரின் துன்பத்தில்
குளிர்கிறது அவன் மனது
அடுத்தவரின் இன்பத்தில்
எரிகிறது அவன் வயிறு
அநியாயம் செய்பவரைக் கண்டால்
அலாக்காகத் தட்டிக் கொடுத்திடுவான்
மற்றவரின் சுகம் கண்டு
புழுங்கிடுவான் தன் மனத்துள்ளே
நாசமாய்ப் போகவேண்டும் இவனென்று
மனத்துள்ளே வேண்டிடுவான் ஆண்டவனை
கூடியிருந்தே கழுத்தறுப்பான் கூதுகலமாய்
நல்லவனாய் நண்பனாய் நடித்தே
செய்திடுவான் நம்பிக்கைத் துரோகமதை
உதவிகள் பெறுமட்டும்
நடிப்பான் உத்தமன் போல் நல்லாக
பின் சொல்லால் அடித்தே
கொன்றிடுவான் அவர் தம் இதயமதை
எல்லாம் இருந்தும்
ஆற்றாமை மேலோங்க
இன்னும் வேண்டும் என்றே
நொந்திடுவான் ஆண்டவனை

என்ன ஆயிற்று அவன் மனத்திற்கு
ஏன் ஆனான் இப்படியாய்
அவன் உள்ளம் தொலைந்ததனால்
உற்றோரும் மற்றோரும் தேடுகிறார்
என்போல்....அவனை எந்நாளும்
புரிந்து கொண்டேன் இப்போது
நான் தேடியது அவன் உடலையல்ல
அவன் உள்ளத்தை
தொலைத்துவிட்ட அவன் உள்ளத்தை
உணர்வுகளை அவன் மீளப் பெறுவதற்காய்
முயன்றிடுவேன் இப்போதே
அவனைக் கண்டுகொள்வேன் அவனுள்ளே
அன்றிருந்தபடியே.........

Friday, January 18, 2008

கேணல் கிட்டு

இழந்த எம் யாழ் மண்ணை மீட்டெடுத்து
சங்கிலியன் தவற விட்ட எம் ராச்சியத்தை
மீண்டும் சரித்திரமாக்கிய வீரனே
மறைந்தாய் நீ எம் மண்ணை விட்டு
ஆனாலும் மறையவில்லை நீ எம் மனதை விட்டு
உணர்ந்து கொள்வாய் உத்தமனே!
எம்மவர்க்கு உயிர் பெரிதல்ல
தமிழ் மானமே பெரிதென்று
அகிம்சை போதித்த அந்த வஞ்சகற்க்கு
ஆணித்தரமாய் உரைப்பதற்க்காய்
நீ கொடுத்த விலை
எண்ண எம் நெஞ்செல்லாம்
தீப் பிழம்பாய் கொதிக்கிறது
அன்று துவண்டு போன
தமிழர் மனமெல்லாம்
இன்னும் தவியாய்த் தவிக்கிறது
இழப்புக்களே எம் தலை விதியோ
என்று ஏங்கித் தவிக்கிறது!

கிட்டர் என்ற பெயர் கேட்டதுமே
கிடுகிடுத்து ஓடி ஒழித்திட்ட
சிங்கள ராணுவச் சிப்பாய்கள்
இன்று எம் யாழ் மண்ணில்
செய்கின்ற கொடுமைகளை
சொல்வதற்கே என் நெஞ்சு மறுக்கிறது
உண்ண உணவில்லை
உடுப்பதற்கு உடையும் இல்லை
பால்குடி மாறாப் பச்சிளம் குழந்தைகள்
பசி ஆற ஒன்றுமே அங்கில்லை
தள்ளாத வயோதிபர்கள்
வயதான பெரியோர்கள்
வாங்க ஓர் மருந்துமின்றி
வாடி வதைந்து மரணிக்கும் காட்சி
எல்லாமே
எம் இதயத்தை வெடிக்க வைக்கிறது
வானத்தே நின்று எம் கிட்டண்ணர்
வேதனை கொண்டு எல்லாமே பார்க்கின்றார்
அன்று கோட்டையிலே ஓடி ஒழிந்தவர்கள்
இன்று எம் யாழ் மண்ணில் துணிவுடன் நிற்கின்றார்
இவர்களை துரத்த
இன்னும் எவ்வளவு நாட்கள்பொறுக்கவேண்டும்!
இன்னும் பொறுமை காக்கவேண்டும்
கிட்டண்ணர் வானத்தே இருந்து கேட்பதெல்லாம்
எதிரொலியாய் இங்கு ஒலித்தே நிற்கிறது
விரைவில் முடிவொன்று வருமென்று
அண்ணர் பாலா அவருக்குச் சொல்வதெல்லாம்
எமக்கு நன்றாய் கேட்கிறது!


கிட்டர் என்றதுமே
கிட்டப் போய் கதைத்திடுவார் எல்லோரும்
கிலி பிடித்து ஓடிடுவார்
சிங்களத்தின் ராணுவங்கள்
கிட்டு மாமா என்று சொல்லி
சூழ்ந்து கொள்ளும்
குழந்தைகள் எல்லாமே அவரைச் சுற்றி
எல்லோற்கும் நண்பன் அவன்
எதிரிக்கு மட்டுமே பொல்லாத சூரன் அவன்

83 யூலையிலே
சிங்களக் காடையரின் இனவெறியில்
தமிழர் பட்ட வேதனைகள்
உன் உள்ளத்தை உலுக்கி எடுத்ததனால்
பூகம்பம் ஆனாய் நீ
யாழ் மண்ணின் தளபதியாய்
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஆட்சிதனை
அளித்தவன் நீ
குறிதவறாது சுடுவதிலே சூரன் நீ
மேடை பேச்சினிலே மேதாவி நீ
இலக்கியவாதி நீ
எல்லாம் தெரிந்த தமிழ் வீரன் நீ

எதிரியினால் வெல்லவே முடியாத
எம் கிட்டண்ணர்
கால் ஒடிந்த போதிலுமே
மனம் ஒடிந்து போனதில்லை
தமிழ் ஈழம் நோக்கி
சமாதானத் திட்டத்துடன்
பயணித்த எம் வீர வேங்கைகளை
பொல்லாத இந்தியர்கள்
கேட்டார்கள் சரணடைய வேண்டுமென்றே
நாசகார இந்தியாவின்
நாசகாரிக் கப்பல்கள்
சூழ்ந்ததுமே எடுத்திட்டார் தம் உயிரை
எம் பத்து வேங்கைகளும்
கிட்டுவும் மற்றவரும்
மாவீரர் ஆகிவிட்டார் இந்தியாவின் சதியினிலால்
அகிம்சயை அறிமுகம் செய்தவர்கள்
எம் வீரர் குருதியில்
குளித்து மகிழ்ந்திட்டார்

தமிழ் ஈழம் மலர்வது உறுதி
யாழ் மண்ணில் நம் தமிழர்
ஆட்சி அரங்கேறும் விரைவாக
நல்லாட்சிகண்டு மகிழ்வீர்
வானத்தின் மீதிருந்தே!

Tuesday, January 15, 2008

தைப்பொங்கல்

தைப்பொங்கல்
இது தமிழர் பொங்கல்
தரணியெல்லாம் வாழும் நம் தமிழர்
போற்றிப் பொங்கிடும் பொங்கல்
தமிழனின் புதுவருடம்
பிறக்கிறது தைப்பொங்கலிலே

உலகமெங்கும் பிறக்கிறது புதுவருடம்
இளவேனிற் காலமதில்
நம் தமிழர் புது வருடம்
இளவேனில் காலமதில் வருகை தர
எமை ஆண்ட ஆரியர்கள்
வஞ்சனையாய் புகுத்திட்டார்
புதுவருடமதை சித்திரையில்
ஏமாந்த தமிழர்கள்
மறந்திட்டார் எம் புதுவருடமதை
ஆரியர்கள் திணித்திட்ட
அவலங்கள் ஆயிரத்தில்
இதுவும் ஒன்று
உணர்வார்களா எம் தமிழர்

வள்ளுவன் ஆண்டு நம் ஆண்டு
தை ஒன்றில் பிறக்கும் நம் புது ஆண்டு
தமிழர் திருநாள் எம் பெருநாள்
தைப்பொங்கல் மட்டுமேதான்
உறைக்கவே சொல்லிடுங்கள்
எம் பிள்ளைகட்கு
சித்திரை வருடக் கொண்டாட்டம்
ஓர் வீணாட்டம்
மறப்போம் அதையே
மறத் தமிழினமாய்
வரவேற்போம் எம் புது வருடத்தை
தைப் பொங்கல் தினத்தினிலே

தையிலே பொங்கலிட்டோம்
சூரியனை வணங்கி நின்றோம்
இயற்கையை மதித்தவர் நாம்
இயற்கையே நம் தோழன்
அவனே நம் கடவுள்
இயற்கையை அழித்தால்
கோவம் கொள்வான் அவன் என்றே
சொல்லி வைத்தான் தமிழன் அன்று
இன்று உணர்கின்றார் உலகத்தோர்
இயற்கை கோவம் கொண்டால்
மனிதரெல்லாம் அழிவார்கள்
மாசு படுத்தாதே சுற்றாடலையே
சொல்லி வைத்தான் தமிழன் திடமாக

இயற்கையை மதிக்கவில்லை
உலக மாந்தர்
வெட்டினார் காடுகளை
மிக வேகமாக
ஓட்டினார் கார்களையே
தேவைக்கு அதிகமாக
சமையலுக்கு, துணி துவைத்திட
குளிரூட்ட
எல்லாமே இயந்திரமயமாக
கரியமில வாயு கசிந்து வந்தே
நச்சாக்கியதே இயற்கைதனை

வெப்பம் உயர்கிறது
பூமிப் பந்தினிலே
புயல் சுனாமி பூமி அதிர்வு
அளவில்லா வெள்ளம்
அடிக்கடி நிகழ்கிறது
மனித குலமே
அழிகின்ற அலங்கோலம்
அரங்கேறும் காலம்
வெகு தொலைவில் இல்லை

இயற்கையை வணங்கினால்
இன்னல்கள் தீரும் உறுதி இது
இதை நாம் மதித்தால்
வாழ்வு வழம் பெறும்
மனிதகுலம் மாண்பு பெறும்
தைப் பொங்கல் கூறுவது
இதையே தான்
தமிழர் திருநாள் பெருமை
புரிகிறது நமக்கெல்லாம்

வரவேற்றிடுவோம் தைப் பொங்கலையே
புது வருடப் பொங்கலுடன்
போகிப் பொங்கல் மாட்டுப் பொங்கல்
காணும் பொங்கல்
எல்லாப் பொங்கலையும்
வாழ்த்தி வரவேற்போம்!

Saturday, January 5, 2008

இரட்டை முகம்

நட்பென்பது நானிலத்திலும் போற்றுதற்குரியது
புலம் பெயர் மண்ணில்
புரிந்தவர்கள் எத்தனை பேர்?
நட்புக்காய் தம் நாட்டையே
இழந்த மன்னர்கள் கதை பலவுண்டு
நண்பனுக்காய் உயிர் கொடுத்த பலர் கதைகள்
இன்றும் உண்டு எம் நாட்டில்
நட்பை விலை பேசும்
நயவஞ்சகக் கூட்டம் உண்டு எம்மிடையே
நாளுக்கு நாளாய் மாற்றுகின்ற
மலிவான சட்டை என்றே
எண்ணிடுவார் மதிகெட்டோர் நட்பினையே
நட்புக்கொண்டோர் மாறிடுவார்
நயவஞ்சகராய் சிலவேளை
தெரிந்துவிடும் அவர்தம் மற்ற முகம்
அப்போது தெளிவாக
உடைந்துவிடும் அடுத்தவர் நெஞ்சம் பலமாக
பெருகிடும் இரத்தவெள்ளம்
இதயத்தின் உட்புறமாய்
மாங்கல்யம் அணிவித்து மணமக்கள் சேர்வதற்கே
சட்டம்தான் துணை நிற்கும் ஆனால்...
நட்பிற்கு விட்டுக்கொடுப்பென்ற சாட்சியுடன்
மனச்சாட்சியே சட்டமாகிறது உணர்வாரா
புலம்பெயர் மண்ணிலே புகல்கின்ற தமிழர்கள்?