Sunday, September 30, 2007

தியாகி திலீபன்

திலீபன் என்றதுமே தித்திக்கும் என் மனது
சோகத்தையும் வென்றதொரு புல்லரிப்பு
என் இதயத்தில் எழுந்து வரும்
உலகத்தில் உன்னதமாய் ஓர் உயிர் பிரிந்ததென்றால்
அது அகிலத்தின் தியாகி அவன் திலீபன் இன்னுயிர் தான்
அகிம்சை என்றோர் ஆயுதத்தை கையிலெடுத்தான்
தன்னை தானே சிலுவையில் அறைந்து கொண்டான்


அன்னையர்கள் ஆறாத துயரத்தில்
தம் மார்பில் அடித்தே கதறி அழ
ஆண்களெல்லாம் தம் கண்களிலே
வழிகின்ற விழி நீரை துடைத்தெறிய
அருமைத் தம்பிகளும் அன்புத் தங்கைகளும்
பச்சிளம் குழந்தைகளும்
அண்ணா! அண்ணா! என்று அழுதிட்ட குரலோ
வானத்தை எட்டி நிற்க
தன் உயிரையும் உடலையும்
துடி துடிக்க தற்கொடையாக்கிவிட்டான்
திலீபனாய் நின்ற அவன் தியாகியாய் மாறிவிட்டான்


என்றும் அன்பான திலீபன்
எப்போதும் அகலாத புன்சிரிப்பு
மற்றவர்க்காய் மட்டும் வாழ்ந்த புனிதனவன்
எம்மவர்க்காய், எம் தமிழிற்காய், தமிழ் ஈழ மீட்பிற்காய்
தன்னையே ஈகின்ற கொடிய விரதமதை
திண்ணமதாய் செய்தே முடித்திட்டான்
தமிழர்க்கு விடுதலை வேண்டி அவன்
பெரும் தவமே செய்திட்டான்
விண்ணிலிருந்து பார்ப்பேன்
விடுதலையை என்றுரைத்தே
சென்றுவிட்டான் வெகுதூரம் எமை விட்டு


நவ இந்தியாவிடம்
நயமாய்க் கேட்டான் நீதியொன்றை
அகிம்சை சாத்வீகம் இவையல்லோ
ஆன்மீக இந்தியாவை இளக வைக்கும் என நினைத்தான்
"உன்னையே வருத்தி உணர்வுகளை அடக்கி
மாற்ற முயன்றாய் நீ அவர் மனதினையே"
வஞ்சகர்கள் நெஞ்சுக்குள் வரவில்லை இரக்கமது
எடுத்திட்டார் உன் இன்னுயிரை
வதைத்திட்டார் எம் தமிழினத்தை
தமிழ்நாட்டுத் தமிழரும் சேர்ந்தே கலங்கி நின்றார்
உன் நிலை கண்டு


காந்தி பிறந்த மண்ணில் தவறுதலாய்ப் பிறந்தவர்கள்
இங்கு தமிழீழத்தில் காந்தீயம் சாவதற்கு
அடிப்படையாய் இருந்திட்டார்
கல்லுக்குள் ஈரமுண்டு கண்டிடலாம் சில வேளை
இந்தக் கயவர் நெஞ்சுக்குள்
கடுகளவும் ஈரமில்லை
வெறி பிடித்த இந்திய ராணுவமே
வெறும் ஆயுதத்தை மட்டுமா ஒப்படைத்தார்
தமிழர் படை உன்னிடத்தில்
எம் மக்கள் உயிரையுமே ஒப்படைத்தார் உனை நம்பி
புத்தரின் புனிதர்கள் கொடியவர் என்பதனால்
காந்தியின் புதல்வர்கள் என்றல்லோ
எண்ணி உமை நாம் நம்பிட்டோம்
துரோகியாய் நீர் இருக்க
தூய நண்பனாய் உனை நினத்தோம்
அபயம் அளிக்க நீர் வருவதாய்
ஆவலுடன் எதிர்பார்த்தோம்
அன்புடன் உமை வரவேற்றோம்
ஆறுதல் தருவாய் நீ எனவே
அக மிக மகிழ்ந்திட்டோம்



பிராந்திய வல்லரசாய் உன் வன்மத்தைக் காட்ட நீ
தெரிவு செய்திட்டாய் ஈழ தேசமதை
உண்ணா நோன்பிருந்தே உம் உள்ளமதை
மாற்ற அவன் முயன்றே தோற்றிட்டான்
தமிழன் உரிமை ஒன்றும் உன் தயவால் கிட்டாது
என்றே உணர்ந்தான் எம் திலீபன்
பூண்டான் கொடிய விரதம் அவன்
நல்லூர்க் கந்தன் வீதியிலே
உணவின்றி நீரின்றி தன் நாக் காய்ந்து
உடலில் உரமின்றி நிற்கத் தயவுமின்றி
மரணத்தை நோக்கி அவன் மகிழ்வுடன் போகையிலும்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!
தமிழீழம் மலரட்டும்!
என்றே எமக்குரைத்தான்
விழிப்பாய் இருங்கள்! விழிப்பாய் இருங்கள்! என
எமை விழித்தே சொன்னான் பல தடவை


பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
பொறுக்கிகள் செய்த அநியாயம் பொறுக்குதில்லையே
பொன்னான எங்கள் தங்கத் திலீபன்
தன் உயிரையே விலை கொடுத்த கொடுமைதனை
நினைக்க நினைக்க நெஞ்சு பொறுக்குதில்லையே
கல்மனம் கொண்ட இந்திய ராணுவமே
கடுகளவும் இல்லையா கருணை உனக்கு
தாய் நாட்டுக்காரர் தருமம் அறிந்தவர்கள்
என்றேதான் நம்பிட்டோம் நாமெல்லாம்
பொல்லாத பாவிகள்
எம் மண்ணை அழித்திட்டார்
நல்ல பண்பை அழித்திட்டார்
எம் பெண்கள் கற்ப்பைப் பறித்திட்டார்
எம் திலீபன் உயிரையும் எடுத்திட்டார்


காந்தியைக் கொல்ல ஒரு கோட்சே
இங்கு எம் திலீபனைச் சாகடிக்க
ஓராயிரம் கோட்சேக்கள்
வெட்கமாயில்லை உங்களுக்கு
காந்தி உயிருடன் இன்றிருந்தால்
உம் செயல் கண்டு தன்னையே மாய்த்திருப்பார்
அன்றே உயிர் நீத்ததனால்
இன்று தப்பிப் பிழைத்துவிட்டார்


நல்லூர்க் கந்தா நான் உனைக் கேட்கின்றேன்
இது நியாயமா சொல்லுமையா
தமிழ்க் கடவுள் நீ என்றால்
தமிழர்க்காய் எம் திலீபன் உயிர் காக்க
ஏன் மறந்தாய் சொல்லுமையா


தமிழர்கள் வாழ்விற்காய்
ஈழ தேசத்தின் விடிவிற்காய்
உன் உடலை வருத்தியே
உயிர் துறந்தாய் திலீபா
மறவாது தமிழ் உலகம் உன்னை
இந்த மாநிலத்தில் தமிழ் மனிதன் உள்ளவரை

Monday, September 24, 2007

உறக்கம் கெடுக்கும் கனவுகள்

கண்ணும் கண்ணும் சந்தித்தால்
கதைகள் பேசும் சுகமாக
விண்ணும் மண்ணும்
தெரியும் சரி சமனாக
விடிய விடிய விழித்திருந்தே
காணும் ஆயிரம் கனவுகளை
உறக்கம்தான் கெடுத்துவிடும் கவனம்!

Friday, September 21, 2007

அவலம்

சாராயம் குடித்து சத்தியெடுத்து
தலை குப்பிற விழுந்த தம்பண்ணை
தட்டுத் தடுமாறி எழும்ப முடியாமல்
தவழ்ந்து போகையிலே கண்டார்
குண்டடிபட்டு காலைத் தொலைத்துவிட்ட கண்ணன்
பொய்க்கால் போடக் காசில்லாமல்
கைகளினால் தவழ்கின்ற அவலத்தை

ஆண்களுக்குச் சமத்துவம் வேண்டும்

போதும் போதும் பொறுத்தது போதும்
ஆண்களே நீங்களெல்லாம் பொறுத்தது போதும்
பொங்கி எழு ஆண்மகனே
சங்கே முழங்கு என்று பொங்கி எழு ஆண்மகனே
இழந்த உன் உரிமையை வென்று எடுக்க
பொங்கி எழு ஆண்மகனே
அன்று நீ சமையல் அறையை எட்டியும் பார்க்கவில்லை
இன்றோ சமையலிலே நீதான் முன்னணியில்
சட்டி பானை என்றால் என்னவென்றே தெரியாமால் நீ இருந்தாய்
இன்றோ சட்டி பானை கழுவுவதில்
நீதான் முதன்மையாய் இருக்கின்றாய்
டிஸ்வோசர் வேண்ட நீ முயற்சி எடுத்திட்டால்
பெண்ணோ அதை தட்டியே கழித்திடுவாள்
ஆண் சிங்கமாய் அன்று நீ இருந்தாய்
இன்றோ அடுப்பூதும் சுண்டெலியாய் நீ இருக்கின்றாய்
அம்மாவின் கையாலே அறுசுவையும் நீ உண்டாய்
இன்றோ ஐரோப்பாவில் அடுப்படியில் நீ வெந்தே சாகின்றாய்
ஆண்கள் கட்டாயம் சம உரிமை பெற்றே ஆகவேண்டும்
சமையலிலே பெண்ணும் சரி பாதி பங்கு வகித்தே தீரவேண்டும்

அன்று அம்மா அம்மா என்று தான்
அழுதன பிள்ளைகள் எல்லாமே
இன்று அப்பா அப்பா என்று அழுவது ஏனோ
பிள்ளைப் பராமரிப்பில் பெண்களுக்கும்
சம பங்கு தந்தே தீரவேண்டும்
பத்து மாதம் சுமப்பது பெண்களென்றால்
பின்வரும் பத்து வருடங்களும்
ஆண்களா பிள்ளைகளைச் சுமக்கவேண்டும்
சம்பளம் வந்தவுடன் சட்டையும் சீலையும்
வேண்டத் திரிகின்றார் பெண்களெல்லாம்
ஆண்களுக்கும் சம உரிமை வேண்டும்
அவர்களையும் மனிதர்களாய் மதிக்கவேண்டும்
அவர்களுக்கும் உடுபுடவை வேண்ட சம உரிமை வேண்டும்
கோட்டும் சூட்டும் வேண்ட அவர்களுக்கும்
நீ பணம் கொடுக்கவேண்டும்
விருந்தாளிகள் வீட்டுக்கு வருவதென்றால்
அன்று அடுப்படியில் நிற்பதெல்லாம்
ஆண்களாய் இருப்பது முற்றாக மாறவேண்டும்
விருந்தாளிகளுடன் கதை அளப்பதெல்லாம் பெண்களென்றால்
வேலை செய்வதெல்லாம் ஆண்களா
பொங்கி எழு ஆண்மகனே!
சரி பாதி உரிமைக்காய்
இன்றே போர்க்கொடி உயர்த்திடுவாய்

நகை நகையாய் வேண்டி நம் பணத்தை எல்லாம்
கழுத்திலும் கையிலும் பொத்திப் பொத்தி
வைத்திருக்கும் பெண் அவளே
ஆணுக்கும் ஆசைகள் உண்டென்று
நீ என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா
இன்றே அரைவாசி நகையை பெறுமட்டும்
போராட்டம் நடாத்திடு ஆண்மகனே!
அரைப் போத்தல் தண்ணி அடித்திட்டால்
அநியாயம் முழுக்க ஆண்தான் செய்திட்டான்
என்று பிதற்றுகின்ற பெண்ணே
நீ வேண்டும் சாறிக்கும் நகைக்கும்
அழகுசாதனப் பொருளுக்கும்
யார் தருகின்றார் பணம்
அளவாய் தண்ணி அடிப்பதற்கு
ஆண்கள் கட்டாயம் உரிமை பெற்றே ஆகவேண்டும்!
ஆணுக்குச் சமத்துவம் வேண்டி
ஐரோப்பிய நாடெல்லாம்
மூலை முடுக்கெல்லாம்
ஆண்கள் போராட்டம் நடாத்தவேண்டும்

சீறுகின்ற பெண்ணை
வீட்டில் நீ ஓர் சிரிப்பால் மழுப்புவதை
நான் நன்கறிவேன்
இழந்த ஆணின் உரிமைகளை
அகிம்சையால் வென்றெடுக்க
ஒன்று பட்டுப் போராடி வெற்றி பெறவேண்டும் நீ
உன் போராட்டம் வெற்றி பெறும்
பெண்ணுடன் சமத்துவமாய்
ஆணே கட்டாயம் நீ வாழ்ந்திடுவாய்!

Wednesday, September 19, 2007

தமிழைத் தேடி

புலம்பெயர் நாட்டினிலே
புளுகு தமிழ் கேட்டிடலாம்
நல்ல புறம் சொல்லும் தமிழ் கேட்டிடலாம்
வசை பாடும் தமிழ் கேட்டிடலாம்
நல்ல வஞ்சனை செய்யும் தமிழ் கேட்டிடலாம்
தண்ணி அடித்த பின்னே வரும்
தளதளக்கும் தமிழ் கேட்டிடலாம்
இனிய தமிழ் கேட்க எனக்கோர் ஆசை எழுந்ததனால்
முயன்றே நானும் சென்றேன் தமிழ் நாட்டிற்கு

உல்லாச விடுதி ஒன்றில்
உறைவோம் சில நாள் என்றே
சென்றேன் நானும் உள்ளேயே
காரிகை ஒருத்தி கண் அசைத்தே வரவேற்றாள்
"என்ன வேண்டும்" என்றே இனிதாய் கேட்டு நின்றாள்
அறை ஒன்று வேண்டும் என்றேன் ஆசுவாசமாய்
அதிசயமாய்ப் பார்த்த அவள்
கேட்டாள் மீண்டும் அதை "என்ன வேண்டும்"
அறை ஒன்றே வேண்டும் என்றேன்
அடிக்குமாய்ப்போல் என்னை முறைத்தே
அதே கேள்விதனை அழுத்திக் கேட்டாள்
ஆத்திரம் கொப்பழிக்கச் சொன்னேன் நான்
அறை தர முடியாதா ஆணவம் பிடித்தவளே
அறைந்தாள் என் கன்னத்தில் படீரெனவே
ஐயோ என்று நான் அலறித் துடித்திட்டேன்
என்ன இவள் அடித்தே விட்டாள் என்னை
என்ன பிழை செய்தேன் நான்
ஆற்றாமை மேலோங்க
"றூம்" தானே நான் கேட்டேன்? ஏன் அடித்தாய்
எனக்கென்றேன்
அப்படித் தமிழில் றூம் என்று கேளுமையா
அது என்ன அறை-இங்கே இதுதான் அறை என்றாள்
வெட்கித்து நின்றேன் நான் தமிழை எண்ணி
வீங்கிய கன்னமதை நீவிக்கொண்டே

நேரம் ஓடியது விரைவாக
எனது மணிக்கூடோ ஓடவில்லை இவ்வேளை
மற்றவரை மணி கேட்க என் தன் மானம் தடை போட
புதிதாய் வேண்டுவோம் மணிக்கூடு என்றே
சென்றேன் நானும் வெளியாலே
தேடி அலைந்தேன் மணிக்கூட்டுக் கடையொன்றை
கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை அக்கடையை
மனமது சோர காலது வலிக்க சலித்து நிற்கையிலே
கண்டேன் நானும் ஓர் கனவானை
மறக்காமல் கேட்டேன் நான்
மணிக்கூட்டுக்கடை எங்கேனும் உண்டா
அதிசயமாய்ப் பார்த்தே அவர் சொன்னார்
அப்படி ஒரு கடை எவ்விடமும் இல்லை
மடையா நீ என்று திட்டினேன் மனதாலே
நடந்தேன் இன்னும் சில தூரம் நம்பிக்கையுடனேயே
நல்லவராய்த் தெரிந்த இன்னோருவர்
வந்தார் என் முன்னாலே
கேட்டேன் இரக்கமதாய் அவரிடமும்
மணிக்கூட்டுக் கடையை காட்டும் எனக்கென்று
மிரண்டு போன அம் மனிதர்
தனக்குத் தெரிந்தது தமிழ் மட்டுமே என்றிட்டார்
"ஐயா" பேசுவது நானும் தமிழ்தானே
சோன்னேன் நானும் பவ்வியமாய்
அது என்ன மணிக்கூடு அந்நிய பாசை பேசாதே
கோவமாய்ப் பதில் சொன்னார்
தெரியாதா உங்களுக்கு "watch" என்றேன்
வாச்சா அப்படிப் பேசும் தமிழ் என்றார்
திகைத்தேன் நானும் திரும்பவும் ஓர்முறை
காட்டினார் கடையொன்றை இப்போது
வாங்கினேன் நானும் வாச்சொன்றை
தமிழிற்காய் மீண்டும் வெட்கித்தபடியே

அடைந்தேன் விடுதியை நானும் அலுப்புடனே
அந்தக் காரிகையே மீண்டும் வரவேற்றாள்
அமர்ந்தேன் ஓர் இடத்தில் ஆறுதலாய்
பசியோ சிறிதாய் வயிற்றைக் கிள்ள
பார்த்தேன் நானும் அக்கம் பக்கம்
கோப்பி ஒன்று தட்டில் வந்தது அழகாக
பசியை விரட்ட இதுவா எனக்கு
வந்தே சொன்னாள் அன்புடனே
சாப்பிடுங்க சார் சாப்பிடுங்க
என்னத்தைச் சாப்பிட நான்
பசியோடு உள்ளவனைப் பழிக்காதே நீ என்றேன்
பகிடிவிடாமல் சாப்பிடுங்க இதை என்றாள்
சாப்பாடே இல்லாமல் சாபிடுவதெவ்வாறு
பரிகாசம் செய்யாதே பாவம் உனக்கே என்றேன்
காப்பியைச் சாப்பிடுங்க ஆறினால் அநியாயம் தான் என்றாள்
கோப்பியைக் குடிக்கத்தான் முடியுமென்று
சத்தமாய்ச் சொல்லி என் கன்னத்தில்
நானே அடித்து விட்டேன்
இல்லை அறைந்து கொண்டேன்
தமிழிற்காய் வெட்கித்தபடியே

கோப்பியைக் குடித்துவிட்டே
கனமான சிந்தனையில் நான் இருந்தேன்
சாப்பாட்டுச் சிந்தனையை அறவே கைவிட்டு
சரியான நித்திரை ஒன்றைக் கொள்வோம் இப்போது
என்றே எண்ணி நிற்கையிலே
மீன்டும் வந்தாள்! முழி பிதுங்கியது எனக்கு
தூங்கப் போங்க இப்போ என்றாள்
அதிர்ந்து போனேன் ஐயோ என்றே அலறிவிட்டேன்
தூக்கில் தொங்க விடுவதற்கு
செய்த குற்றமென்ன சொல் என்றேன்
நேரம் என்ன தெரிகிறதா?
தூங்க வைக்கிறேன் பார் என்றாள்
நடுங்கிப் போய் நான் சொன்னேன்
நாளையே போறேன் நாட்டிற்கு
நித்திரை கொள்ள முடியுமா இப்போ நான்
கேட்டேன் படபடக்கும் நெஞ்சுடனே
அதையே சொன்னேன் தானும் என்றாள்
இருந்த தமிழும் மறந்து போக
அடுத்த நாளே வந்து சேர்ந்தேன் இவ்விடமே
தமிழிற்காய் வெட்கித்தபடியே!

Tuesday, September 18, 2007

காதலே ஓடிவிடு

காதலியே உனைக் கைபிடிக்க
என் கையை நீட்டியபடியே
உனை நோக்கி நான் வந்தேன்
ஆனால் உன் கைகளோ
இன்னொருவன் கைகளை இறுகப் பிடித்திருந்தது
அன்று செயலிழந்த என் கைகள்
இன்னும் தன் உணர்வுகளை மீளப் பெறவில்லை

காதலியே உனைப் பார்பதற்காய்
என் கால்களின் வலிமையை அதிகமாக்கி
பல மைல் தூரம் ஓடோடி நான் வந்தேன்
நீயோ சொகுசுக் காரொன்றில்
இன்னொருவனுடன் அருகே அமர்ந்திருந்தாய்
அன்று செயலிழந்த என் கால்கள்
இன்னும் ஓர் அடி கூட நகரவில்லை

காதலியே உனை அணைப்பதற்காய்
என் நெஞ்சத்தின் இனிமைகளை அதிகமாக்கி
உன் அருகே விரைவாக நான் வந்தேன்
என்ன கொடுமை இது
உன் நெஞ்சை அணைத்தபடி இன்னொருவன்
அன்று மூடிய என் நெஞ்சத்தின் உணர்வுகள்
இன்னும் உறக்கத்தில் இருந்து எழவேயில்லை

காதலியே உனை மணமுடிப்பதற்காய்
மலர் மாலை சகிதம் மகிழ்ச்சியுடன்
உன் வீடு தேடி நான் வந்தேன்
நீயோ மாற்றான் ஒருவனின் மனைவியாய் இருந்தாய்
அன்று உடைந்த என் இதயம்
எவராலும் பொருத்த முடியா அவல நிலையில்
மீண்டும் ஓர் முறை நான் காதலித்தால்
என் இதயம் அழிந்தே மாய்ந்து விடும்
காதலே ஓடிவிடு! என்னை வாழ விடு!

Monday, September 17, 2007

வாழத்தெரிந்தவன்

வாழத்தெரிந்தவன் வாயாடி வயிரமுத்து
அவன் படித்ததோ பாலர் வகுப்பு
ஆனால் கதைப்பதோ
பல்கலைக்கழக தேர்வு பற்றி
அன்பாக கதைப்பதிலே
அவனை மிஞ்ச யாருமில்லை
அலுவல் முடிந்தபின்
ஆரோபோல் அவன் போவதே ஓர் தனி அழகு

வேலைக்குப் போகிறவர் எல்லாம்
வெறும் முட்டாள்கள் என்றிடுவான்
ஐரோப்பாவில் வேலை தேடியது
அவன் எப்போதும் இல்லை
அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு
அறவே இல்லை
நாய்க்கு வேலையும் இல்லை
நடக்க நேரமும் இல்லை
வாயாடி வயிரமுத்துவிற்க்கு
எதற்குமே நேரம் இல்லை
ஓடி ஓடி அவன் அங்கும் இங்கும் திரிவதும்
அண்ணை நேரம் இல்லை
அக்கா பிறகு சந்திப்போம் என்று சொல்வதும்
எவரையும் இலகுவில் நெகிழ வைக்கும்
பாவம் வயிரமுத்து பஞ்சாப் பறக்கின்றார்
சொல்பவர்கள் ஏராளம் ஏராளம்
இப்படியும் வாழ்வா
என்று எண்ணத் தோன்றும் பலருக்கு

அரசாங்கத்தில் பெறுவதோ உதவிப் பணம்
ஆனால் கட்டுவதோ கணக்கில்லாச் சீட்டுக்கள்
வயிரமுத்துவிற்கு இதுவெல்லாம் வலு சிம்பிள்
கடன் பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்
கடன் பெற்றால் இவரிற்கோ
நெஞ்சமெல்லாம் அஸ்கிறீமாய் குளிர்ந்துவிடும்
காசிருந்தால் கை கால் ஒன்றும் சும்மா கிடவாது
வெளிக்கிடுவார் சுற்றுலா வெளிநாட்டிற்கு
ஏன் போறான் எதுக்குப் போறான்
அவனுக்கே தெரியாது இதுவெல்லாம்
வெளிநாடு போவதென்றால்
ஏகக் குசி பட்டிடுவான்
வாங்கிடுவான் பொருட்களெல்லாம் வகை வகையாய்
புறப்படுவான் மிடுக்குடனே பளபளப்பாய்

தன் வீட்டுப் பிரச்சனையோ ஆயிரம் ஆயிரம்
அடிதடிகள் கூட அங்கு தாராளம் ஆனாலும்
அக்கம் பக்கத்தார் வீட்டுப் பிரச்சனையில்
வக்கீலாய் மாறி பிரச்சனையைத் தீர்த்து வைப்பான்
தாயும் தந்தையும் தாய் நாட்டில்
தவியாய்த் தவிக்கின்றார்
இருப்பதற்கு இருந்த குடிலும்
இப்போ மழையைத் தாங்காதாம்
இங்கோ வயிரமுத்து அள்ளிப் போட்டிடுவான்
நகை நகையாய் அலுக்காமல்
மனைவிக்கும் அணிவிப்பான் அளவுக்கு மேலாலே

அவரின் பொன்மொழிகள்
இல்லை வாய்மொழிகள்
கேட்டாலே புல்லரிக்கும்
"கடன் பட்டென்றாலும் கட்டு கல்யாணம்"
"கத்துகிறவன் எவனோ அவனே அறிவாழி"
இதுதான் அவனின் தாரக மந்திரம்
வாழத் தெரிந்தவன் வயிரமுத்து!!

எந்தக் கடவுளிடம் சொல்லி அழ

பால் அபிசேகம் பழ அபிசேகம் தேன் அபிசேகம்
எல்லாம் நடக்கிறது கோவிலிலே
பாணுக்கும் பருப்புக்கும் பழைய சாதத்திற்கும்
தவம் கிடக்கிறார் பல கோடி மக்கள்
எந்தக் கடவுளிடம் சொல்லி அழ!

ஏன் மறந்தார்கள்

கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருசன்
என்றவர்கள்
மண்ணானாலும் மனைவி
தடியானாலும் தாரம்
என்று சொல்ல
ஏன் மறந்தார்கள்

தனிமையில் வெறுமை

தனிமையிலே நான் இருந்து
வெறுமைதனை உணர்ந்து கொண்டேன்
கலகலப்பாய் நாம் இருந்த காலத்தை
ஒரு கணம் எண்ணிப் பார்க்கின்றேன்
முன்னோக்கிப் போகின்ற என் எண்ணத்தை
பின்னோக்கித் திருப்புகின்றேன்

அம்மா அப்பாவின் அரவணைப்பில்
அந்த அளவற்ற சந்தோசம்
அண்ணன் தம்பியுடன் அடிபட்டு
அல்லோல கல்லோலமாய் வாழ்ந்த
அந்த வசந்த காலங்கள்
எடுத்தெறிய முயன்றாலும்
என்னுள்ளே மீண்டும் மீண்டும்
விசையாய் எழுந்து நிற்கிறது

பாடசாலையில் படித்த பாடங்கள்
அங்கே அடித்த கும்மாளங்கள்
பள்ளிக்கூடத்தை கட் பண்ணி
படம் பார்த்ததிலே கண்ட இன்பம்
இடையிடையே இனிமையாக வந்து போகும்
அந்தக் காதல் சுகங்கள்
பரீட்சை நெருங்க நெருங்க
பதறுகின்ற நமது நெஞ்சங்கள்
எல்லாமே பசுமையான நினைவுகளாய்
என்றுமே என் மனத்தில் பதிந்திருக்கும்

அக்கம் பக்கத்து வீடுகளில்
அளவான கல் எடுத்து விசையாய் விட்டெறிந்து
விழும் மாங்காய் எடுத்துத் தின்றதில்
நாம் பெற்ற மட்டற்ற மகிழ்ச்சி
இன்றும் இதயத்தே நன்றே நிறைந்திருக்கும்

கள்ளங் கபடமில்லா நல்ல நண்பர்கள்
இவர்களிடம்........
காசில்லை பெரிதாக
காரில்லை மொடேணாக
தற்புகழ்ச்சி செய்கின்ற இழிவில்லை
போட்டி இல்லை பொறாமை இல்லை
ஒழிவு மறைவு ஒன்றுமில்லை
ஆனால் இவர்களிடம்.....
பகிர்ந்துண்ணும் பண்புண்டு
பழகுவதற்கு நல்ல மனமுண்டு
அழிக்க நினைத்தாலும்
என் மனத்தை விட்டு அகலாத
இந்த நினைவலைகள்

இங்கு தனிமையிலே வெறுமை
இந்த வெறுமையினை
பொல்லாத தனிமையினை
அகற்றவென்று தேடுகின்றேன் மனிதர்களை
கண்டால் எனக்கும் ஒருக்கால்
கட்டாயமாய்ச் சொல்லுங்கோ

கள்ளுக்கொட்டில்

தம்பற்றை கள்ளுக்கொட்டிலிலை
சரியான சனக்கூட்டம்
இளையவர் பெரியவர் இளந்தாரிப் பெடியன்கள்
எல்லோரும் இங்கு சரிசமன் தான்
சமத்துவம் என்பது
சரியாகக் கடைப்பிடிக்கப் படுவதும் இங்கேதான்
தன் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ள
தடுத்திடுவார் சிலபேரை முத்தண்ணை
தடுத்த அந்தச் சில பேரிடமே
கையேந்திக் கள்ளுக் குடிப்பார் அந்தண்ணை
பகுத்தறிவென்பது கள்ளிலிருந்துதானோ பிறக்கிறது

ஆண்கள் மட்டும்தான்
இங்கே அனுமதிக்கப் படுவதனால்
எல்லோரும் இங்கே மன்னர் தான்
ராணி இல்லாத ராயாக்கள்
இவர்கள் பாடு கொன்டாட்டம் தான் இங்கு
வீட்டில் வாயே திறக்காத முத்தண்ணை
இங்கே வந்துவிட்டால் முழுநேரப் பேச்சாளர்
அரசியலில் இருந்து தன் வீட்டு அந்தரங்கம் வரை
அவிட்டு விடுவார் அருமையாக முத்தண்ணை
கேட்போரெல்லாம் மெய்மறந்து
சொக்கித்துப் போய்விடுவார்

வீட்டிலே மனிசிக்குப் பயந்த முத்தண்ணை
கள்ளைக் கொஞ்சம் அடித்ததுமே
முழு வீரனாய் மாறிடுவார்
இண்டைக்கு வீட்டை போய்
அவளின்ரை வாயை அடக்கிறேன் பார் என்பார்
ஊத்தடா இன்னொண்டு என்று சொல்லி
அவர் குடிக்கும் அழகே ஓர் தனி அழகு
அக்கம் பக்கத்தார் ஆரேனும் இருக்கினமா
ஆழ்ந்து பார்த்துத்தான்
வீராப்புப் பேசிடுவார் முத்தண்ணை
அரசியல் விவாதமெல்லாம் இங்கேதான்
அக்கு வேறு ஆணி வேறாய் அலசி ஆராய்வார்
அமெரிக்காவில் ஆட்சியை மாற்றக் கூட
இங்கே திட்டங்கள் தீட்டிடுவார்
கள்ளுக்கொட்டிலிலே அரசியல் பேசிய முத்தண்ணை
பெற்றதோ அரசாங்கத்தில் மந்திரிப் பதவி
அனைத்தின் வளர்ச்சிக்கும்
கள்ளுக் கொட்டில்தான் ஆதாரம்
என்பதே அவரின் வாதம்
Five Star Hotel இலை விஸ்க்கி குடித்தாலும்
பிளாவிலே கள்ளை எடுத்து
குவிந்திருக்கும் எறும்பு பூச்சிகளை
அலாக்காக தட்டி எறிந்து விட்டு
அதை உறிஞ்சிக் குடிக்கும் இன்பம்
எங்கே வருமென்பார் முத்தண்ணை
கலம்பிலும் காமட்சி கள்ளுக் கடையை
திறந்து வைத்தே புகழ் ஏணியின்
உச்சிக்கே போய் விட்டார் இந்தண்ணை

சுவீடனுக்கு வந்த அண்ணர்
கள்ளுக் கொட்டிலைக் காணாது
கலங்கியே போய்விட்டார்
கடைசிக் காலத்தில் கள்ளில்லாமல்
காலம் தள்ளுவதெப்படி என்றே
சோர்ந்துவிட்ட முத்தண்ணைக்கு
கனடாவில் கள்ளுக் கடை திறந்த செய்தி
இன்பத்தை அளித்திடவே
அங்கே மாற்றிவிட்டார் தம் இருப்பிடத்தை
"கள்ளில்லா வாழ்வு பாழ்
கள்ளுக் கொட்டில் இல்லாத நாடு பாழ்"
இதுவே முத்தண்ணையின் தத்துவம்.

என் அம்மா

உன்னை உருக்கி உடலை வருத்தி
என்னை இவ்வுலகில் ஈன்றெடுத்த
என் அம்மாவே
உனக்காக ஓர் கவிதை
இன்னும் படைக்கவில்லை
ஏன் என்று எனக்கே புரியவில்லை
என்னுள்ளே கலந்து நீயும் நானாக இருப்பதனால்
தனியாக உனக்காய் கவிபடைக்க முடியவில்லை
காரணமோ?
எழுத வேண்டும் பல கவிதை உனக்காக
என்றே என் மனம் எண்ணும் பல வேளை
கவிதையையும் முந்தும் என் கண்ணீர்
அணைபோட்டு விடும் என் கவிதைகளை
என் கண்ணீரே சொல்லும் ஓர் ஆயிரம் கவிதை
உனக்கு மட்டுமே கேட்கும் அக் கவிதை

அம்மா என்று அழைக்கையிலே
பொங்குகின்ற ஆனந்தம்
அகிலத்தில் எங்கேனும் கிடைக்குமா சொல்லுங்கள்
அன்பு என்றால் என்னவென்றே
அறியாத கயவர்கள்
வாழ்கின்ற இவ்வுலகில்
அன்பையே வாழ்க்கையாய் அர்ப்பணித்து
வாழ்ந்துவிட்டாய் எமக்காக

என் அம்மாவை நினைத்தவுடன்
என் உள்ளம் பாலாய்க் குளிர்ந்து விடும்
அம்மா! அம்மா! என்றே அழைக்கவேண்டும்
இன்னும் பல முறை என்றோர் உணர்வு
உன் உள்ளத்தின் ஆழத்தை
இப்போதான் என்னால் எட்ட முடிகிறது
உனக்காக வாழாது எமக்காக வாழ்ந்து
இன்று வானத்தே உறைகின்ற என் அம்மாவே
உன்னை எண்ணிப் பார்க்கையிலே
என் மனதில் ஓடுகின்ற எண்ணங்கள்
ஒன்றா இரண்டா எடுத்துரைக்க
ஓர் ஆயிரம் எண்ணங்கள்
எல்லாமே என் இதயத்துள் ஆழப் பதிந்திருக்கும்

உன்னை நினைக்கையிலே
என் கண்களிலே சொரிகின்ற கண்ணீர்
உன்னைப் பிரிந்த சோகத்தின் வெளிப்பாடா...இல்லை
அன்பின் அறிகுறியாய் ஆனந்தக் கண்ணீரா?
எனக்கு எதுவென்றே புரியவில்லை
சொல்லித்தர நீயுமில்லை
எங்களுக்காய் உன் இதயத்தைப் பிழிந்து
இரத்தத்தைக் கொட்டி நெஞ்சத்தை அழித்து
எமக்காக வாழ்ந்த அம்மாவே
உனக்காகவும் நீ சிறிது வாழ்ந்திருந்தால்
என் இதயத்தின் சுமை சிறிதேனும் குறைந்திருக்கும்

"அ" சொலிக்கொடுத்த அம்மாவே
நீ அழுவதற்கும் கொஞ்சம் விட்டிருக்கக் கூடாதா
அன்பாக எனக்கு உணவளித்தாய்
ஆடை அணியெல்லாம் நீயே எனக்களித்தாய்
உன் கையாலே குழைத்த சாதம்
அதை உண்கையிலே ஏற்படும் பெரு மகிழ்ச்சி
அகிலத்தில் எங்கேனும் உண்டா அந்த ருசி உணவுகளில்
சிக்கனமாய் சிறப்பாக வாழ்ந்தாய் நீ
சிறுகச் சிறுகச் சேமித்தே
செய்தாய் எமக்காய் எல்லாமே
வேலை எல்லாம் நீயே செய்தாய் வீட்டினிலே
படிக்கவைத்தாய் எம்மை நல்லாவே
இவ் உலகையே சுற்றி வந்தாலும்
பெறமுடியா இன்பத்தை பெற்றிடலாம்
உன்னை ஓர் முறை சந்தித்தால்
ஆண்டவனே முடியுமா உன்னால்
என் அன்பு அம்மாவை
தரமுடியுமா என்னிடமே?