Monday, October 8, 2007

மாப்பிள்ளையில்லாக் கல்யாணம்

சுப்பற்ரை பெட்டைக்கு சுண்ணாகச் சந்தைக்குப் பக்கத்தில்
பெரிய பந்தல் போட்டு கோலாகலக் கல்யாணம்
அக்கம் பக்கத்தார் உற்றார் உறவினர் யாவர்க்கும்
இது ஓர் பெரிய கொண்டாட்டம்
சுப்பற்ரை சரசுவுக்கு இப்போதான் இதமான பதினெட்டு
சுகமான லண்டன் கனவுகளில்
வளமான வாழ்க்கைக்காய் ஏங்கித் தவங்கிடந்தாள்

அத்தானின் காரினிலே அகலமான லண்டன் றோட்டினிலே
மாலை வேளைகளில் மணிக்கணக்காய் ஓடித்திரியவேண்டும்
அறிந்தவர் தெரிந்தவர் வீட்டிற்கெல்லாம்
அடிக்கடி விசிட் போகவேண்டும்
அட்டகாசமாய் லண்டனைச் சுற்றி
பல றவுண்டுகள் அடிக்கவேண்டும்
கடைகளெல்லாம் ஏறி இறங்கி
அத்தானின் காட்டினிலே கன சாமான்கள் வேண்ட வேண்டும்
இரவினில் அப்பிடி இப்பிடியான படங்களைப் பார்த்துவிட்டு
அளவில்லாமல் நித்திரை கொள்ளவேண்டும்
எண்ண அலைகள் சிறகடிக்க
அமைதியாக அமர்ந்திருந்தாள் சரசு

இரண்டு கூட்டம் மேளம் சக்கை போடு போட
பலகாரத்தட்டுக்கள் அங்கும் இங்கும் பறக்க
சூடான தேநீரை எல்லோரும் சுவைத்து அருந்த
லண்டன் மாப்பிள்ளை லங்காதரனின்
ஆள் உயரப் போட்டோ பந்தலிலே கம்பீரமாய் நின்றிருக்க
மாப்பிள்ளை வீட்டார் மலர்மாலை சகிதம்
மகிழ்ச்சியுடன் மணப்பந்தலுக்கு வருகின்றார்

இது ஓர் நவீனக் கல்யாணம்
இங்கு ஓமம் வளர்ப்பதில்லை
ஐயருக்கு இங்கேதும் வேலை இல்லை
மாப்பிள்ளை இல்லாமல் தாலி கட்டாமல்
தடல்புடலாய் நடக்கும் நவீனக் கல்யாணம்

சுருள் கேசத்துடன் சுத்தமான கோட் சூட்டுடனே
அமைதியாய் வீற்றிருந்த அவனின் அலங்காரப் போட்டோவிற்கு
நாணத்துடன் தலை குனிந்து
பக்குவமாய் மலர்மாலை தனை சூட்டிவிட்டாள் சரசு
மாமியவள் தன் கையாலே மோதிரத்தை
ஆசையுடன் பக்குவமாய் அவளின் விரலினிலே மாட்டிவிட்டாள்
நவீனக் கல்யாணம் நலமே நிறைவேற
எல்லோரும் மகிழ்ச்சியிலே திளைத்திருந்தார்

ஏயன்சிக்காற ஏகாம்பரத்திட்டை காசு கட்டி
கையைப்பிடித்து காலைப்பிடித்து கடைசியில்
கட்டுநாயக்காவிற்குப் போய் சரசுவை
ஒரு மாதிரியாய் பிளைட்டினிலே ஏற்றிவிட்டு
அப்பாடி என்று பெருமூச்சு விட்ட சுப்பர்
அமைதியான மனத்துடனே வீடு திரும்பிவிட்டார்

மொஸ்கோவில் மூன்று மாதம் நின்று
மொடேண் கேள் ஆய் மாறிய சரசு
திடீரென ஒரு நாள் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியபடி
வீட்டு வாசலிலே வந்திறங்க
சுப்பற்றை நெஞ்சம் சுக்கு நூறாக சிதைந்தே போயிற்று
அக்கம் பக்கத்தார் துக்கம் விசாரிக்க
அழுகையை அடக்கமுடியாமல் சுப்பர்
ஓய்ந்து ஒடுங்கிவிட்டார்

இரண்டு வருடங்கள் உருண்டே போயிற்று
சுப்பண்ணை அங்கை ஓடி இங்கை ஓடி
அவனைப் பிடித்து இவனைப் பிடித்து ஒருவாறு
சரசுவை லண்டனிலே கால் பதிக்க வைத்து விட்டார்
சரசு எயாப்போட்டில் வந்திறங்கி
தன் அன்பிற்குரியவரை எதிர்பார்த்து நிற்கையிலே
எங்குமே அவனைக் காணவில்லை
அங்கே பார்த்தாள் இங்கே பார்த்தாள்
சுற்று முற்றும் சுழன்று சுழன்று பார்த்தாள்
அந்த அழகான சுருண்ட கேசத்துக்குரியவனை
எங்குமே காணவில்லை
ஏக்கத்துடன் மனமுடைந்து திரும்புகையில்
கலோ என்ற குரல் கேட்டு திகைப்புற்றாள்
சுருண்ட கேசத்தை எங்கோ தொலைத்திட்ட சுப்பர் மாப்பிள்ளை
பாலைவனமான வழுக்கல் தலையுடனே நின்றிருக்க
சரசுவின் நெஞ்சம் தவியாய்த் தவித்து
கொண்ட கனவெல்லாம் கொட்டுண்டு போக
உம் என்ற முகத்துடனே அவனோடு
வீடு நோக்கிப் புறப்பட்டாள்

கடிதத்தின் வரவிற்காய் காத்திருந்த சுப்பண்ணை
காலையில் வந்திருந்த கடிதத்தை
பிரித்துப் பார்த்ததுமே மூர்ச்சித்து விழுந்திட்டார்
அவள் அப்பா பார்த்த கங்காதரன் தலை
அங்கே மாறி இருப்பதனால்
நீளத் தலைமுடியும் நீலக்கல்லில்
கடுக்கனும் போட்டிருக்கும்
நிதர்சனைக் கைப்பிடித்து
கல்யாணமும் செய்துவிட்டாள் சரசு
மூர்ச்சித்து விழுந்த சுப்பண்ணை
மூச்சுவிட மறந்துவிட்டார்.

No comments: