Friday, November 30, 2012

மூடிய விழிகள்


மூடிய விழிகள்
தூக்கமில்லா உள்ளம்
கனவுகள் அல்ல
கனத்த இதயம்
பேசியது என்னுடனே
அந்த நடு ராத்திரியில்
நல்லவர் போல் வேசம்
வல்லவர் போல் நடிப்பு
பகட்டான வாழ்க்கை
தற்பெருமைப் பேச்சு
இரந்து வேண்டும்
பட்டங்கள் பதவிகள்
அரசியல் வாதியையும்
அதி பணக்காரரையும்
அண்டிப் பிழைக்கும்
அவலம்
அடுத்தவன் துன்பத்தை
அசை போட்டு மகிழும்
மனிதர்கள்.....
மூடிய விழிகள்
தூக்கமில்லா உள்ளம்

ஏன் வேண்டும் விவாகரத்து


நீதிமன்றில் ஓர் வழக்கு
மனைவி அவள்
சுமத்துகிறாள் பல குற்றங்கள்
கணவன் மீது
வீட்டு வாடகையின்
அரைப் பங்கு
ஆறு மாதமாய் தரவில்லை
சமையல் வேலையில்
சரி பாதி சரியாகச்
செய்வதில்லை
காருக்குப் பெற்றோல்
அடிப்பதில்
கணக்குப் பிழைக்கிறது
கேட்டால்
இப்போ வருமானம்
சரியாக இல்லை என்கின்றார்
விவாகரத்து வேண்டுமென்றாள்
இடை மறித்த நீதிபதி
கேட்டார்
ஏன் வேண்டும் விவாகரத்து
பிரிய வேண்டும் உடனே
சொன்னாள் மனைவியவள்
சிரித்தார் நீதிபதி
இனி என்ன பிரிவு
வேண்டும் உமக்கு
எல்லாமே பிரிவாகத் தானே
இருக்கிறது
குடும்பம் என்றால்
எல்லாமே கூட்டுப்
பொறுப்புத்தான்
விட்டுக் கொடுப்புக்கள்
உனது எனது என்றில்லாமல்
எல்லாமே எமது
என்பது தான் குடும்பம்
எப்போ என் பணம் உன் பணம்
என்று கூறு வந்தாச்சோ
அன்றே பிரிவு
ஆரம்பமாகிறது
அதுவே விவாகரத்தில்
முடிகிறது..
கூறிச் சிரித்தார்
மீண்டும் நீதிபதி

Friday, May 27, 2011

முள்ளால் தைத்த நினைவுகளுடன்.....

முள்ளால் தைத்த
முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன்
கடந்தோடிவிட்ட இரண்டு வருடங்கள்
கனவாகவே இது இருந்திருக்கக் கூடாதா
என்றவொரு ஏக்கம்
இன்றும் என் மனதில்
தவியாய் தவிக்கிறது

எம் உறவுகளின்
சாம்பல் மேடுகளில்
பட்டு வரும் காற்றை
சுவாசிக்கும் கொடுமை
அழுகுரல்கள் நிறைந்த
அந்த அவல ஓசையின்
எதிரொலிகளை
கேட்கின்ற சுமைகள்

அரச பயங்கரவாதம்
எம்மவர் சதை தின்று
நரபலி எடுத்த நினைவுகள்

பசியால் துடிதுடித்தே
இறந்து போன சொந்தங்கள்
உடல் உபாதையினால்
உயிர்விட்ட எம் உறவுகள்
நோயின் உச்சத்தில்
ஆஸ்பத்திரியில் அடைக்கலம்
புகுந்தோரையும்
குண்டிவீசிக் கொன்ற கொடுமை

எல்லாமே வெறும் கனவாக
இருந்துவிடக் கூடாதா???
ஒவ்வோர் விடியலிலும்
என்னை நானே கேட்கும்
கேள்வி இது!!

குரும்பையூர் பொன் சிவராசா
ponnsivraj@hotmail.ccom

Tuesday, May 17, 2011

இன்றைய காதல்

கண்ணும் கண்ணும் பேசியது

அன்றைய காதலிலே

கண நேர சந்திப்பிலும்

காவியம் பேசியது பார்வைகள்,

கை அசைவுகள் ஒவ்வொன்றும்

படித்தன ஆயிரம் கவிதைகள்

ஒவ்வோர் புன் சிரிப்பும்

கொடுத்தன பல நூறு முத்தங்கள்

சந்திப்புகள் ஒவ்வொன்றும்

சரித்திரமாய் முத்திரை பதித்தன

பட்டும் படாமலும்

பயணிக்க நேரும் தருணங்கள்

ஒவ்வொன்றும் ஒவ்வோர் தேநிலவாகின

உயிரும் உயிர்ப்பும்

இருந்தது அக் காதலிலே

காலம் காலமாய் காதல் கதை பேசி

களவு களவாய் சந்தித்து

கவிதைகள் பலவும் பரிமாறி

தொடர்ந்தது அக் காதல்.....



இன்றோ

பேஸ்புக்கிலும் செல் போனிலும்

மின் அஞ்சலிலும்

பிறக்கிறது காதல்



இரண்டே நாளில் இரவிரவாய் விழித்திருந்து

கதை எல்லாம் முடிகிறது இன்ர நெற்றில்

நிமிடத்தில் பார்த்து

நியமென்று நம்பிடுவார்

வெப் கமராவில்

இங்கே அன்புக்கு இடமில்லை

வெறும் அறிமுகம் மட்டும்தான் கிடைக்கிறது



அன்று காதல் இல்லையேல் சாதல்

இன்றோ காதல் இல்லையேல் மீண்டும் காதல்

வெட்கம் நாணம் கோவம்

இவை எல்லாம் தொலைந்து போன

கணனிக் காதல் இது

உள்ளங்கள் பேசவேண்டும்

இதயங்கள் கலக்க வேண்டும்

இதுவே உண்மைக் காதல்

உதடுகள் பேசுவது காதல் அல்ல

உடல்கள் கலப்பதும் உண்மைக் காதல் அல்ல



அவசர உலகத்தில் பொய்தான் எல்லாமே

அதற்காக காதலுமா பலியாக வேண்டும்!

கணனியே நீ காதலுக்கு எதிரியே!!



குரும்பையூர் பொன் சிவராசா

Wednesday, June 16, 2010

பத்து வயதினிலே சுமைதாங்கியானாய்

இவ் உலகில்
நான் ஏன் பிறந்தேன்
கேள்வி ஒன்று
எழுவதுண்டு என் மனதில்
பலவேளை
விடை தெரியாமல்
விழி பிதுங்கி நிற்பதுண்டு


எம் குடும்பத்தின் குலவிளக்காய்
நிதுரா நீ வந்துதித்த பின்னாலே
உணர்ந்து கொண்டேன்
என் பிறப்பிற்கும்
ஓர் அர்த்தம் உண்டென்று
உன்னைப் போல் ஓர் பிள்ளை
இவ் உலகிற்கு தருவதற்காய்
இயற்கை அன்னை அவள்
என்னைப் படைத்திருப்பாள்
இப் பூமிப் பந்தினிலே

பச்சைக் குழந்தையாய் இருந்தபோது
படு சுட்டி நீ
என் மடியினில் உன் தலை வைத்து
கால் அசைத்து பின் அமைதியாய்
துயிலும் உன் அழகு முகம்
மறக்க முடியா நினைவுகளாய்
மனதில் உறைந்தே இருக்கிறது

நான்கு ஐந்து வயதினிலே
"Under ground, Over ground"
"Hallunda, mannunda"
என்று
நீ சொல்லிய நகைச்சுவைகள்
உன் மழலையில் மகிழ்ந்திருந்தோம்
நாமெல்லாம்....

பத்து வயதினிலே நீ
சுமைதாங்கியானாய்
எம் குடும்பத்திற்கே!
அப்பா ஆஸ்பத்திரியில் படுத்திருந்தால்
விடிகாலை ஆறு மணிக்கே
ஆயராவாய் நாள் தவறாமல்
அதன் பின்பே செல்வாய் பாடசாலைக்கே
மறக்காமல் வருவாய் மாலையிலும்

அன்பைச் சொரிந்தாய்
எம் மீதெல்லாம்
அன்பாகப் பேசிடுவாய்
ஆத்திரம் வந்துவிட்டால்
அட்டகாசமாய்ப் கத்திடுவாய்
பத்து நிமிடம் பேசாமல் இருக்கமாட்டாய்
இப்போதும் கோவமா என்றிடுவாய்

ஆண்டவன் தந்த அற்புதப் பிறவி நீ
எம் குடும்பத்தைக் காக்க வந்த
காவல் தெய்வம் நீ
குடும்பத்தின் துன்பத்தில் துயரத்தில்
எல்லாம் பங்கெடுப்பாய்
துணிவாக நின்று எம் துயர் தீர்க்க
தோள் கொடுப்பாய்

பாடசாலையிலே நீ
பலே கெட்டிக்காரி
குறும்புத் தனத்தில் நீதான்
முதல் இடத்தில்
எல்லோரும் உன்னில்
அளவில்லா அன்புடனே
சோட்டி என்றே அழைத்திடுவார்
உனைத் தூக்கி விளையாடி
மகிழ்ந்திடுவார்

நீ எனக்கு மகளல்ல
என் தாயின் மறுபிறப்பு
உன் அம்மாவின்
அம்மாவின் காபன் கொப்பி நீ
அக்காவின் செல்லத் தங்கை நீ
ஒரு நாள் நீ எம் வீட்டில்
இல்லையென்றால்
எம் வீடே அமைதியாய்
உறங்கிவிடும்

உன்னை எமக்கு அளித்ததற்காய்
நன்றி சொல்கின்றோம் அந்த
இயற்கை அன்னைக்கே!

Thursday, May 13, 2010

ஆண்களுக்குச் சமத்துவம் வேண்டும் - ஐரோப்பாவில் போராட்டம்


போதும் போதும் பொறுத்தது போதும்

ஆண்களே நீங்களெல்லாம் பொறுத்தது போதும்

பொங்கி எழு ஆண்மகனே

சங்கே முழங்கு என்று பொங்கி எழு ஆண்மகனே

இழந்த உன் உரிமையை வென்று எடுக்க

பொங்கி எழு ஆண்மகனே


அன்று நீ சமையல் அறையை எட்டியும் பார்க்கவில்லை

இன்றோ சமையலிலே நீதான் முன்னணியில்

சட்டி பானை என்றால் என்னவென்றே தெரியாமால் நீ இருந்தாய்

இன்றோ சட்டி பானை கழுவுவதில்

நீதான் முதன்மையாய் இருக்கின்றாய்

டிஸ்வோசர் வேண்ட நீ முயற்சி எடுத்திட்டால்

பெண்ணோ அதை தட்டியே கழித்திடுவாள்


ஆண் சிங்கமாய் அன்று நீ இருந்தாய்

இன்றோ அடுப்பூதும் சுண்டெலியாய் நீ இருக்கின்றாய்

அம்மாவின் கையாலே அறுசுவையும் நீ உண்டாய்

இன்றோ ஐரோப்பாவில் அடுப்படியில் நீ வெந்தே சாகின்றாய்

ஆண்கள் கட்டாயம் சம உரிமை பெற்றே ஆகவேண்டும்

சமையலிலே பெண்ணும் சரி பாதி பங்கு வகித்தே தீரவேண்டும்


அன்று அம்மா அம்மா என்று தான்

அழுதன பிள்ளைகள் எல்லாமே

இன்று அப்பா அப்பா என்று அழுவது ஏனோ

பிள்ளைப் பராமரிப்பில் பெண்களுக்கும்

சம பங்கு தந்தே தீரவேண்டும்

பத்து மாதம் சுமப்பது பெண்களென்றால்

பின்வரும் பத்து வருடங்களும்

ஆண்களா பிள்ளைகளைச் சுமக்கவேண்டும்


சம்பளம் வந்தவுடன் சட்டையும் சீலையும்

வேண்டத் திரிகின்றார் பெண்களெல்லாம்

ஆண்களுக்கும் சம உரிமை வேண்டும்

அவர்களையும் மனிதர்களாய் மதிக்கவேண்டும்

அவர்களுக்கும் உடுபுடவை வேண்ட சம உரிமை வேண்டும்

கோட்டும் சூட்டும் வேண்ட அவர்களுக்கும்

நீ பணம் கொடுக்கவேண்டும்


விருந்தாளிகள் வீட்டுக்கு வருவதென்றால்

அன்று அடுப்படியில் நிற்பதெல்லாம்

ஆண்களாய் இருப்பது முற்றாக மாறவேண்டும்

விருந்தாளிகளுடன் கதை அளப்பதெல்லாம் பெண்களென்றால்

வேலை செய்வதெல்லாம் ஆண்களா

பொங்கி எழு ஆண்மகனே!

சரி பாதி உரிமைக்காய்

இன்றே போர்க்கொடி உயர்த்திடுவாய்


நகை நகையாய் வேண்டி நம் பணத்தை எல்லாம்

கழுத்திலும் கையிலும் பொத்திப் பொத்தி

வைத்திருக்கும் பெண் அவளே

ஆணுக்கும் ஆசைகள் உண்டென்று

நீ என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா

இன்றே அரைவாசி நகையை பெறுமட்டும்

போராட்டம் நடாத்திடு ஆண்மகனே!


அரைப் போத்தல் தண்ணி அடித்திட்டால்

அநியாயம் முழுக்க ஆண்தான் செய்திட்டான்

என்று பிதற்றுகின்ற பெண்ணே

நீ வேண்டும் சாறிக்கும் நகைக்கும்

அழகுசாதனப் பொருளுக்கும்

யார் தருகின்றார் பணம்

அளவாய் தண்ணி அடிப்பதற்கு

ஆண்கள் கட்டாயம் உரிமை பெற்றே ஆகவேண்டும்!


ஆணுக்குச் சமத்துவம் வேண்டி

ஐரோப்பிய நாடெல்லாம்

மூலை முடுக்கெல்லாம்

ஆண்கள் போராட்டம் நடாத்தவேண்டும்


சீறுகின்ற பெண்ணை

வீட்டில் நீ ஓர் சிரிப்பால் மழுப்புவதை

நான் நன்கறிவேன்

இழந்த ஆணின் உரிமைகளை

அகிம்சையால் வென்றெடுக்க

ஒன்று பட்டுப் போராடி வெற்றி பெறவேண்டும் நீ

உன் போராட்டம் வெற்றி பெறும்

பெண்ணுடன் சமத்துவமாய்

ஆணே கட்டாயம் நீ வாழ்ந்திடுவாய்!

குரும்பையூர் பொன் சிவராசா

நேர்த்தியான, உடனடிச் செய்திகளுக்கும், சிறந்த கவிதைகள் மற்றும் நகைச்சுவை என்பவற்கிற்கும் www.tamilsworld.net என்ற இணையத்தளத்தை பாருங்கள்

Tuesday, May 4, 2010

சிரி! சிரி! வயிறு குலுங்கச் சிரி!!


கணவன்: மருந்துப் போத்தலை ஏன் தலையில் தடவியபடி இருக்கிறாய்?

மனைவி: டாக்டர் தான் தலை வலிச்சா இதை தடவச் சொன்னார்.

கணவன்: தடவச் சொன்னபடியால் தப்பித்தாய், குடிக்கச் சொல்லியிருந்தால், போத்தலை உடைத்து சாப்பிட்டிருப்பாய்.



டாக்டர்: நோயாளி ஒரு மணி நேரத்துக்கு முன்பே இறந்து விட்டார்.

மோகன்: இருக்காதே நான் 15 நிமிடத்துக்கு முந்தி அவருடன் கதைத்தேனே.

டாக்டர்: நீங்கள் தானே கதைதீர்கள் அவர் கதைக்கவில்லையே.



ஒருவர்: எல்லா டாக்டர்களும் ஏன் நின்று கொண்டே சத்திர சிகிச்சை செய்கிறார்கள்

மற்றவர்: கடவுளாக நம்புகிறோம் என்று சொல்வதால் அவர்களும் நின்றே கொல்லுகிறார்கள்


மேலதிகாரி: கொலை வழக்கை உங்களிட்டை ஒப்படைச்சோமே என்ன கண்டு பிடித்தீர்கள்

காவலர்: கொலை செய்யப்பட்டவர் கொலை செய்யப்படுவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு கூட உயிருடன் இருந்திருக்கிறார்


டாக்டர்: உடம்பு பலமாவதற்கு மருந்து எழுதித் தந்தேனே ஒழுங்காகக் குடித்தீர்களா

நோயாளி: மூடியைத் திறக்க முடியவில்லையே டாக்டர் அதுக்காகத் தான் இப்போ வந்திருக்கிறேன்


தலைவர்: மரத்துக்கெல்லாம் திரிசா, நமீதா, அசின் என்று தலைவர் பேர் வைக்கிறாரே ஒன்றும் விளங்குது இல்லை

தொண்டர்: அப்பிடிப் பேர் வைச்சாத்தானாம் எல்லோரும் மரத்தை கவனமாக வளர்ப்பினமாம்

வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச் சுவைக்கு www.tamilsworld.net இணையத் தளத்தை பார்வையிடுங்கள்.