Tuesday, November 13, 2007

சிங்களமே ஓடிவிடு எம் மண்ணைவிட்டு

எல்லாளன் ஆண்ட பூமி இது
எல்லைகள் போட நீ யார் எமக்கு
சங்கிலியன் கட்டிக்காத்த பூமி இது
சண்டித்தனம் விடுவதற்கு துணிவேது உனக்கு
ஓடிவிடு எம் மண்ணைவிட்டு

சுயநலக்கார மனிதன்

மழையில் நனையாமல் இருப்பதற்காய்
மரத்தின் கீழ் ஒதுங்கும் மனிதன்
அந்த மரமும் மழையில் நனைகிறதென்று
என்றாவது அதற்க்கு குடை பிடிக்க நினைத்ததுண்டா!

Monday, November 12, 2007

தலை குனிந்து நில்லடா

தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா
ஆச்சி அப்புவோடை பூட்டன் பூட்டியும்
ஒன்றாய் ஒற்றுமையாய்
இருந்தான் தமிழன் அன்று
இன்றோ ஐரோப்பாவில்....
அண்ணனும் தம்பியும்
அடிபிடி சண்டையில் முன்னணியில்
அக்காளும் தங்கையும் ஆளுக்காள் ஒவ்வோர் பக்கம்
அப்பாவையும் அம்மாவையும் இங்கே வரவழைத்து
அங்கே அவர்க்கிருந்த
நிம்மதியையும் நிர்மூலமாக்கி
பிள்ளை பார்ப்பதற்கும்
பிற வேலை செய்வதற்குமாய்
அவர்களை தமிழா நீ படுத்தும் பாடு
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா!

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான்
இலங்கை வேந்தன் அன்று
இன்றோ ஐரோப்பாவில்...
கடன் கொடுத்தோர் கலங்கி நிற்கும் பரிதாபம்
கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதனால்
வாங்கிக் கட்டியவர் இங்கு ஏராளம் ஏராளம்
சீட்டுக் கட்டியதால் சின்னாபின்னமான
குடும்பங்கள் எத்தனை எத்தனை
சீட்டுப் பிடித்தவர்கள் சிங்கார வாழ்க்கை வாழ்கையிலே
சீட்டுக் கட்டியோர் சித்தப் பிரமை பிடித்தே
அலைந்து திரிகின்றார்
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா!

நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவன் தமிழன்
காலம் காலமாய் நட்பினைக் காத்தவன் தமிழன்
இன்றோ ஐரோப்பாவில்...
உயிர் நண்பனையே
உடனிருந்து ஏமாற்றுகிறான் தமிழன்
பணமுடையவனே பலருக்கும் நண்பன்
களவும் பொய்யும் செய்து
கனதியாய் பணம் சேர்த்தவனே
எல்லோர்க்கும் நண்பன்
கண்ணியமாய் வாழ்பவர்கள்
கவலைப்பட்டே காலத்தை தள்ளும் பரிதாபக் காட்சி
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா!

பஞ்சத்தில் தான் வாழ்ந்தாலும்
அறிவுப் பசிக்கு உணவளித்தவன் தமிழன்
எளிமையாய் வாழ்ந்தாலும்
இன்பமாய் வாழ்ந்தவன் தமிழன் அன்று
இன்றோ ஐரோப்பாவில்.....
காசிருக்கும்போது கல்வி எதற்கென்கின்றான்
பணம் சேர்ப்பவனே அறிவாழி என்கின்றான்
இரவு பகல் வேலை செய்யும் கணவன்
தனிமையிலே ஏக்கமுறும் மனைவி
பெற்றோரைக் காணாது பரிதவிக்கும் குழந்தை
இதுவே சுக வாழ்வு என்கின்றான் தமிழன்
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா!

Tuesday, November 6, 2007

விடியவில்லை வெள்ளிக்கிழமை

அந்த பொல்லாத வெள்ளிக்கிழமை
விடியவே இல்லை
தமிழர் மனமெல்லாம் ஒரே கும்மிருட்டு
விடி காலைப் பொழுதினிலே
இடியெனவே வீழ்ந்த செய்தி
விடியலைக் கருமையாக்கி
விழிகளைக் குளமாக்கி
ஒளிதனை முற்றாய் மறைத்து
இருள்மயமாய் காட்சி தருகிறது

எம் தமிழர் மனமெல்லாம்
நிறைந்திருந்த தமிழ்செல்வன்
ஈழத்தின் தங்கச் செல்வன்
புன்னகை மாறாத புலி வீரன்
வீர மரணம் எய்திட்டான்
என்ற செய்தி கேட்டு
பதை பதைதிட்டார் ஈழத் தமிழர் எல்லாம்
ஒவ்வோர் தமிழனின் இதயமும்
ஓர் கணம் அசைவற்று நின்றே
தன் இயக்கத்தை தொடர்ந்தது

புலம் பெயர் நாட்டில் எம்மவர்
நம்ப மறுத்தார் இச் செய்தியினை
கண்களில் ஓர் துளி கண்ணீர்
கொட்டவில்லை எனக்கு
என் கைகள் ஒரு வரி கவிதை
வடிக்கவில்லை இன்றுவரை
மனம் ஓர் வெறுமையாய்
உணர்வற்றுக் கிடக்கிறது
நம்ப மறுக்கிறது எனது மனம்
எப்படி நம்புவோம் நாம் இதனை
இப்போதும் எம் கண் முன்னால் அந்தப் புன்சிரிப்பு
அழகாய் வந்து நிற்கிறதே

போர் புரிய வக்கில்லா
பொல்லாத சிங்கள இனவெறியன்
சமாதானம் முன்னெடுத்த
எம் தமிழர் மனமெல்லாம்
இரண்டறக் கலந்துவிட்ட
எம் தமிழ்செல்வன் உயிர் குடித்திட்டான்
குண்டுகளை வீசியே வஞ்சனையாய் .....
அப்பாவித் தமிழர் உயிர் ஆயிரம் ஆயிரமாய்
பலி எடுத்த குண்டுகளால்
இன்று சமாதானத்தின் முதல்வனையே
சாகடித்தீர் உம் வெறி தீர
அக்கிரமம் கொண்டவரே
திண்ணமாய்ச் சொல்கின்றேன்
விலை கொடுப்பீர் பெரிதாக

எங்கள் தலைவன் இதயத்தின்
ஓர் பாதி தமிழ்செல்வன்
எப்படித் தாங்கிடுவோம்
உன் மறைவை
என்றும் மாறா எம் செல்வன் புன்சிரிப்பு
இனி எப்போ காண்பார் எம் தமிழர்
உலகெங்கும் சுற்றி வந்தாய்
உன்னதமாய் சமாதானம் பேசி வந்தாய்
புலம் பெயர் தமிழருடன்
ஈழத் தமிழர் பாசத்தை பகிர்ந்தளித்தாய்
ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வாக மீழாது உறங்குவதை
எப்படித் தாங்கிடுவார் எம் தமிழர்
எழுந்து வர மாட்டாயா எமக்காக?

ஈழத் தமிழர் அழுகையின் ஓலம்
அகில உலகெங்கும் பட்டுத் தெறிக்கிறது
புலம் பெயர் தமிழர்கள்
செய்வதறியாது தவிக்கின்றார்
தமிழ் நாட்டுத் தமிழர்கள்
கோவம் கொதிப்பேறி அனல் கக்குகின்றார்
உலகப் பந்தின் சமாதானம் விரும்பிகள்
தம் உள்ளம் கொதிக்க திகைக்கின்றார்
சிங்கள இன வெறியன்
இன்னுமோர் முறை
காட்டுமிராண்டிகள் தாமென்று
உலகிற்கு பறை சாற்றி நிற்கின்றார்

ஊன்று கோலால் ஊன்றி நடக்கும்
எம் இனியவனே
தமிழரின் நல்வாழ்க்கைக்காய்
நீ தாங்கிய வலிகள் எத்தனை? எத்தனை?
நீ பட்ட விழுப்புண்கள்
வேதனை தந்தனவா எம் செல்வா?
எல்லாம் தாங்கினாயோ எமக்காக?
உன் உள்ளத்தின் மென்மையினை
அறிவார் நம் தமிழர்
இருபத்திநான்கு ஆண்டுகளாய்
உளைத்தாய் எம் மண்ணின் விடுதலைக்காய்
புன்னகை மாறாத முகத்துடனே
புரிந்திட்டாய் அரசியல் பணிதனையே
உனைக் கொன்றார்
புத்தரின் புதல்வர்கள்
எரிமலையாய் கொதிக்கிறது
தமிழர் நெஞ்சம்

நீ சண்டையிலே வீரன்
அரசியலில் வெகு சூரன்
அறிவார் எதிரியெல்லாம்
எமைவிட மேலாவே
எல்லாளன் நடவடிக்கை
துட்டரையும் துட்டகைமுனுவின் கொட்டத்தையும்
துடைத்தெறிந்த நேரத்தில்
கோழைகள் துஸ்டர்கள்
எம்மைக் கொதிப்படைய வைக்கின்றார்
புத்தரின் தருமத்தை குழி தோண்டிப் புதைப்பவர்கள்
குண்டு வீசிக் கொன்றுவிட்டார் வஞ்சனையாய்
நீ போட்ட குண்டு தகர்த்தெறிந்தது
சமாதானத்தின் வழிமுறையை
சர்வதேசம் போடுகின்ற சத்தங்கள்
இனியும் எம்மை பணிய வைக்கமுடியாது
புரியவைப்பார் எம் புலி வீரர்
தானைத் தலைவன் இருக்கின்றான்
தமிழ் ஈழம் வெல்வோம் உறுதி இது
பிரிகேடியர் தமிழ்செல்வன் ஆத்மா
சாந்தி அடையும் நிட்சயமாய்
மாவீரர் வீரசொர்க்கத்தில்
வரவேற்கக் காத்திருக்கின்றார்
அங்கிருந்தே பார்ப்பாய் தமிழ் ஈழம் மலர்வதனை.

Friday, November 2, 2007

கண்ணீர்த்துளிகள்

சோபாவில் படுத்திருந்து
என் எண்ணத்தை பின்னோக்கி ஓடவிட்டேன்
ஆண்டுகள் பல பின் நோக்கி
என் மனம் அசை போட்டே
எம்மவர் வாழ்க்கையினை எண்ணிப் பார்க்கிறது
சிறு குடிசை வீடுகளும்
விருப்புடனே செய்த விவசாயப் பூமிகளும்
காடுகளாய் வளர்ந்திருந்த இயற்கையின் வனப்புகளும்
ஒவ்வொன்றாய் என் மனத்தை தொட்டுச் செல்கிறது

புழுதி கிளப்ப புயல் போல் ஓடிடும் சயிக்கிள்கள்
பஸ் இற்காய் காத்திருக்கும் பெரியவர்கள்
பேசுகின்ற பயமற்ற ஊர் வம்புப் பேச்சுக்கள்
சமையல் முடித்தே சந்திக்கும் பெண்களின்
கலகலப்பான கதை அளப்புக்கள்
காதல் யோடிகள் பற்றி கதை கதையாய்
கிசு கிசுக்கும் இளசுகள்
வஞ்சகமே இல்லாத அந்த நிகழ்வுகள்
என் இதயத்தை கிள்ளி விடுகிறது பலமாக

ஒவ்வோர் வீட்டிலுமே ஒவ்வோர் ராயா
ராயாவும் ராணியுமாய் மகிழ்ந்தே வாழ்ந்திடுவார்
வறுமையிலும் செழுமை காணும் வளமான வாழ்க்கை
உண்மையான ஊழலற்ற அரசாங்கம்
நடப்பது அவர்தம் வீட்டில்தான்
உள்ளத்தின் உணர்வுகள் தான்
அங்கே எழுதாத சட்டங்கள்....

மகிழ்வான அந்தக் கடந்த காலம்
எங்கே தொலைந்தது அந்தக் காலம்?
எங்கே தொலைந்தார்கள்
அந்த உண்மையான மனிதர்கள்?
கண்களிலே கண்ணீர் தடை போடமுடியாமல்
கன்னத்தை ஒரு தரம் துடைத்துவிட்டு
மீண்டும் ஓர் முறை எண்ணத் தலைப்பட்டேன்

காலம் மனிதனை மாற்றுகிறதா?
இல்லை காலத்தை மனிதன் மாற்றுகிறானா?
கேள்வியொன்று எழுந்து வந்து
விடை காணமுடியாமல் விக்கித்து நிற்கிறது!
ஆண்களும் பெண்களுமாய் எத்தனை சிநேகிதங்கள்
கள்ளம் கபடமில்லா உண்மையான நேசங்கள்
அப்போ பணமும் பொருளும் பந்தாவும்
எம்மில் யாரிடமும் இருந்ததில்லை
அன்பு மட்டும் தான் அங்கே அரசாங்கம் நடாத்திற்று
பணத்திற்காய் பாசத்தை கொன்றொழிக்கும் பச்சோந்திகள்
பார்த்ததே இல்லை அன்று நாம் எம்மிடையே
உண்மையாய் உன்னதமாய் வாழ்ந்த
அந்த மனிதக் கூட்டம்
கண்களிலே இன்னுமோர் முறை கண்ணீர்த்துளிகள்
உண்மை அன்புக்காய் உத்தம நட்புக்காய்
ஏங்குகிறதோ எனது மனம்?

காலம் மனிதனை மாற்றவில்லை என்றால்
கல்லு மனம் படைத்த இந்த மனிதர்கள்
எப்படி வந்தார்கள் எங்கிருந்து வந்தார்கள்
இப் புலம் பெயர் நாட்டிற்கு?
மீண்டும் கண்ணீர்த்துளிகள்.