Monday, December 10, 2007

ஏன் பறித்தாய் ராணுவமே?

என் பசுமையான நினைவுகளில்
பதிந்திருக்கும் இனிமைகளை
அள்ளிக்கொடுத்த என் அருமை ஊரே
என் இதயத்தின் ஒவ்வோர் அணுக்களிலும்
உன் நினைவே
குடிகொண்டிருக்கும் எந்நாளும்

சிறியதோர் கிராமமாய்
சிங்காரச் செழிப்புடனே
அயலவரை அங்கலாய்க்க வைத்தாயே
என்ன இல்லை எமதூரில்?
அழகான வீடுகளும்
அளவில்லாத் தோட்டங்களும்
மின் விளக்கின் ஒளியினையே
எல்லோர்க்கும் முன்னமே நாம் பெற்றோம்
வீதி ஓரமெங்கும் பசுமை செளித்திருக்க
மதில்களெல்லாம் தொடராய்
விரிந்து செல்லும்...

பத்தாம் வகுப்புவரை பாடசாலை
ஐந்தாறு சங்கங்கள்
அனைத்துக்கும் கட்டிடங்கள்
படித்தோரின் எண்ணிக்கை
பலத்தைக் கொடுத்தது எம்மூருக்கு
கலைகளுக்குப் பெயர் எடுத்த
பெரியார்கள் வாழ்ந்தார்கள்
எமதூரில்
பெருமை சேர்த்தார்கள்
அகிலமெங்கும் குரும்பசிட்டிக்கே!

இளமையின் காலத்தை
இனிய எம் மண்ணில் களித்ததற்காய்
சொல்கின்றேன் நன்றிதனை
எந்நாளும் கடவுளிற்கே
இன்னும் ஓர்முறை
எம் மண்ணை முத்தமிட்டால்
மனத்தின் சுமையெல்லாம்
பஞ்சாய்ப் பறந்துவிடும்

எம் அப்பாவும் அம்மாவும்
அவர்தம் பெற்றோரும்
பிறந்து வளர்ந்து
பூரிப்பாய் வாழ்ந்த பூமி அது
எமக்கல்லோ சொந்தமது
எமக்கல்லோ சொந்தமது!
எம் கண்களெல்லாம்
கண்ணீரைக் கொட்டிநிற்க
பகை கொண்டு வெறி கொண்டு
எமதூரை ஏன் பறித்தாய்
ராணுவமே?

அரசடிச் சந்திக்கும்
அம்மன் கோவிலிற்கும்
மணிக்கடைப் படிக்கட்டிற்கும்
மாறி மாறி ஓடிய நாட்கள்
மனதினை விட்டகல
மறுத்தே நிற்கிறது
அயலூரார் மெச்சுகின்ற
அருமையான ஊரெனவே
பேரெடுத்தாய் சிறப்பாக
அடிபிடி சண்டைக்கு
போகமாட்டார் எமதூரார்
அள்ளிக் கொடுக்கின்ற வியாபாரத்தில்
நீ என்றுமே முன்னணியில்

இனிய இளமைப் பருவத்தே
நாமெல்லாம்
கூடிக் கும்மாளம் அடித்த காலங்கள்
எம் ஊரின் ஒவ்வோர் மூலையும்
எம் கதை சொல்லும் வாயிருந்தால்
இன்னும் ஓர் முறை
எம் ஊரில் கால்பதிக்க
கடவுளே கருணை காட்ட மாட்டாயா?
கல் நெஞ்சு ராணுவத்தை
எம் ஊரை விட்டு
துரத்தி அடிக்க மாட்டாயா?

1 comment:

Anonymous said...

//எம் ஊரில் கால்பதிக்க
கடவுளே கருணை காட்ட மாட்டாயா?//

பிரார்த்தனைகள் என்றும் வீண் போகாது.

சத்தியம்.