Wednesday, April 2, 2008

குரும்பசிட்டி

என் உள்ளத்தின் உணர்வுகளை
இதயத்தின் அதிர்வுகளை
சுவாசத்தின் மென்மையினை
அள்ளித் தெளித்திட்ட
என் ஊரின் காற்றை
சுவாசிப்பதற்காய்
ஏக்கமுறும் எம்மவர்க்கு
ஊர்க்காற்று வீசுகின்ற
தென்றல் மாலைப் பொழுது இது
மகிழ்வாய் நாம் எல்லாம்
கூடி நிற்கின்றோம் கூட்டுக் குடும்பம் போல்
உள்ளத்தின் உணர்வுகளை
துடைத்தெறிய முற்பட்டு
முடியாமல் போனதினால்
கூடி இங்கு எம் உணர்வுகளை பகிர்கின்றோம்
எம் இதயத்தின் அதிர்வுகள் ஒவ்வொன்றும்
எம் ஊரின் கதை பேசும்
எம் சுவாசத்தின் ஒவ்வோர் மூச்சும்
எம் ஊரின் மூலை முடுக்கெல்லாம்
சுற்றிச் சுழன்று வரும்


என் பசுமையான நினைவுகளில்
பதிந்திருக்கும் இனிமைகளை
அள்ளிக்கொடுத்த என் அருமை ஊரே
என் இதயத்தின் ஒவ்வோர் அணுக்களிலும்
உன் நினைவே
குடிகொண்டிருக்கும் எந்நாளும்
குரும்பசிட்டி என்றதுமே
கூதுகலம் தாங்கமுடியாது
எம் ஊரவற்க்கு
சிறிய ஊர் என்றாலும்
சிங்கப்பூர் என்றே சொல்லிடுவார்
எம் ஊரை மற்றையோர் எல்லாமே
பெருமிதம் மேலோங்கும் எம்மவற்கு
அழியாத எம் ஊரின் நினைவுகளை
எம்மவர் இதயங்கள்
எந்நாளும் சுகமாய் சுமந்து நிற்கும்
சிறியதோர் கிராமமாய்
சிங்காரச் செழிப்புடனே
அயலவரை அங்கலாய்க்க வைத்தாயே
என்ன இல்லை எமதூரில்?
அழகான வீடுகளும்
அளவில்லாத் தோட்டங்களும்
மின் விளக்கின் ஒளியினையே
எல்லோர்க்கும் முன்னமே நாம் பெற்றோம்
வீதி ஓரமெங்கும் பசுமை செளித்திருக்க
மதில்களெல்லாம் தொடராய்
விரிந்து செல்லும்...
ஐந்தாறு கோவில்கள்
அடுக்கடுக்காய் சூழ்ந்திருக்கும்
அழகான கோபுரங்கள்
அதற்கு இன்னும் மெருகூட்டும்
அழகான அம்மன் கோவில் தேரை
அண்ணார்ந்து பார்த்தே
அகமகிழ்வோம் நாம் எல்லாம்
அயலூரவர்கள் எல்லாம்
எம் கோவில் நோக்கிப் படையெடுப்பார்
அருள் புரிவார்
எம் அம்மாளாச்சியுமே அற்புதமாய்

பத்தாம் வகுப்புவரை பாடசாலை
ஐந்தாறு சங்கங்கள்
அனைத்துக்கும் கட்டிடங்கள்
படித்தோரின் எண்ணிக்கை
பலத்தைக் கொடுத்தது எம்மூருக்கு
கலைகளுக்குப் பெயர் எடுத்த
பெரியார்கள் வாழ்ந்தார்கள்
எமதூரில்
பெருமை சேர்த்தார்கள்
அகிலமெங்கும் குரும்பசிட்டிக்கே!

இளமையின் காலத்தை
இனிய எம் மண்ணில் களித்ததற்காய்
சொல்கின்றேன் நன்றிதனை
எந்நாளும் கடவுளிற்கே
இன்னும் ஓர்முறை
எம் மண்ணை முத்தமிட்டால்
மனத்தின் சுமையெல்லாம்
பஞ்சாய்ப் பறந்துவிடும்

எம் அப்பாவும் அம்மாவும்
அவர்தம் பெற்றோரும்
பிறந்து வளர்ந்து
பூரிப்பாய் வாழ்ந்த பூமி அது
எமக்கல்லோ சொந்தமது
எமக்கல்லோ சொந்தமது!
எம் கண்களெல்லாம்
கண்ணீரைக் கொட்டிநிற்க
பகை கொண்டு வெறி கொண்டு
எமதூரை ஏன் பறித்தாய்
ராணுவமே?

அரசடிச் சந்திக்கும்
அம்மன் கோவிலிற்கும்
மணிக்கடைப் படிக்கட்டிற்கும்
மாறி மாறி ஓடிய நாட்கள்
மனதினை விட்டகல
மறுத்தே நிற்கிறது
அயலூரார் மெச்சுகின்ற
அருமையான ஊரெனவே
பேரெடுத்தாய் சிறப்பாக
அடிபிடி சண்டைக்கு
போகமாட்டார் எமதூரார்
அள்ளிக் கொடுக்கின்ற வியாபாரத்தில்
நீ என்றுமே முன்னணியில்

இனிய இளமைப் பருவத்தே
நாமெல்லாம்
கூடிக் கும்மாளம் அடித்த காலங்கள்
விடலைப் பருவத்தே பெற்ற நண்பர்கள்
காலத்தால் அழியாத அவ் நினைவலைகள்
சந்தியிலே நாமிருந்து போட்ட சத்தங்கள்
நக்கலடித்துப் பாடிய பாட்டுக்கள்
மாங்காய் தேங்காய்
மதிலேறிப் பறித்த அநுபவங்கள்
கள்ளமாய்ப் பார்த்து
காதலுக்காய் ஏங்கிய காலங்கள்

எம் ஊரின் ஒவ்வோர் மூலையும்
எம் கதை சொல்லும் வாயிருந்தால்
இன்னும் ஓர் முறை
எம் ஊரில் கால்பதிக்க
கடவுளே கருணை காட்ட மாட்டாயா?
கல் நெஞ்சு ராணுவத்தை
எம் ஊரை விட்டு
துரத்தி அடிக்க மாட்டாயா?

இந்தக் கவிதை எம் ஊரவரின் ஒன்றுகூடல் நிகழ்வான ஊர்க்காற்று நிகழ்வின் போது என்னால் வாசிக்கப்பட்டது.

No comments: