Thursday, January 29, 2009

புத்தனின் பெயரால் புதைக்கின்றாய்

புலம்பெயர் நாட்டில் நாமிருந்து
புண்ணாகிப் போன எம் இதயங்களில்
எழுகின்ற உணர்ச்சிகளை
அறிவீரா எம் உடன்பிறப்புகளே?
ஆறுதல் சொல்ல எமக்கோர் வார்த்தை இல்லை
அரவணைக்க துடிக்கின்ற எம் கைகள் உங்கில்லை
அறிவாயா எம் உறவுகளே?

நவீன கிட்லர் மகிந்தரின்
மமதை கொண்ட ராணுவத்தின்
செல்லடிபட்டும் குண்டடிபட்டும்
குற்றுயிராய் விழும் குழந்தைகள் கூட
மருந்தில்லாமல் மரணிக்கும்
அவலத்தை ஆரால் தாங்கமுடியும்
இந்த அகிலத்தில்?

பாவி மகிந்தா!!
புத்தனின் பெயரால்
புதை குழி தோண்டிப் புதைக்கின்றாய்
ஒன்றுமறியா எம்மவரை....
போருக்குப் போகின்றேன் என்று சொல்லி
எம் கற்ப்பிணிப் பெண்களையும்
தள்ளாடும் முதியோரையும்
தவழும் குழந்தைகளையும்
வெட்டிச் சாய்க்கின்றாய்
உனைக் கேட்பதற்கு
உலகத்தில் எவருமில்லை என்ற
மமதை தானே?

எம் தமிழர்
எம் பெற்றோர், உற்றோர்
அண்ணன் தம்பி
அக்கா தங்கை
ஆறி அமர இடமுமின்றி
அள்ளிக் குடிக்கத் தண்ணியின்றி
அரை வயிறு நிரப்ப வழியுமின்றி
மண் தரையிலும் மர நிழலிலும்
படுத்துத் தூங்குகின்ற காட்சிகள்
எம் மனதைப் பிழிந்து பிய்த்து எறிகிறதே!!

பிள்ளைகள் வீரிட்டு ஓலமிட
அம்மாக்கள் அரவணைத்து
உறக்கமும் இல்லாமல்
பேய் இருட்டில் விழித்திருக்க
வெளிச்சத்துடன் வந்தே
போடுகின்றாய் குண்டுகளை
பேடி மகிந்தா இதுதானா உன் வீரம்?

மறத் தமிழன் புற முதுகிட்டதாய்
சரித்திரம் இல்லையடா!
ஆறு நாட்டுப் படையுடனும்
அயல் நாட்டான் அரவணைப்புடனும்
அள்ளிக் கொடுக்கின்ற ஆயுதங்களுடனும்
பிச்சை ஏந்தி வந்துவிட்டாய்
போருக்கா இல்லை?
பொது மக்களை அழிப்பதற்காய்..

No comments: