Tuesday, November 24, 2009

கொடுமை இது! பகற் கொள்ளை இது!

என் இதயத்தை
ஓர் சம்மட்டியால் ஓங்கி
அடிப்பது போல் ஓர் உணர்வு
கல் நெஞ்சக்காரர்களா
நாம் மனிதர்?
கருணை அன்பு எதுவுமே
புரியாத அற்பப் பதர்களா
நாம் எல்லாம்?
ஓர் ஆயிரம் கேள்விகள்
விடை தெரியாது விக்கித்து நின்றேன்
வெட்கத்துடனேயே

மாட மாளிகை போன்றதோர் வீடு
அங்கு ஓர் பசு மாடு
கழுத்தில் கயிறு கட்டி
தொட்டிலில் சிறைப்பட்டிருந்தது
பாவம் அது.....
இங்கோர் தொட்டிலில்
தாய்ப் பசு
கண்ணுக்கெட்டாத் தூரத்தில்
அதன் கன்றுக் குட்டி
என்ன கொடுமை இது?
தன் தாய்ப் பாலைக்
குடிக்கத் தடுப்பதற்காய்
இந்தச் சிறைவாசம்

தலை முழுகிப் பொட்டிட்டு பூச்சூடி
வந்த வீட்டின் தலைவி
தருகின்றாள் விடுதலை
கன்றுக்குட்டிக்கு.....
துள்ளிக் குதித்து மகிழ்வுடனே ஓடிவந்து
தன் தாயின் முலையிலே
குடிக்கிறது பாலை மகிழ்வுடனே
என்னவோர் அநியாயம்
இடை நடுவே
கன்றை இழுத்தெடுத்து
தாயின் முகத்தருகே
நிற்கவைத்து
கறக்கின்றாள் களவாக
பசுவின் பால்தனையே
என்ன கொடுமை இது
பகற் கொள்ளை இது

கறந்த பாலுடனே
செல்கின்றாள் கோவிலுக்கு
பக்தி பரவசமாய் தருகின்றாள்
பால்தனையே ஐயரிடம்
அமோகமாய் நடக்கிறது
அபிசேகம்
அரோகரா சத்தம் வானைப் பிளக்கிறது
இங்கே பக்தர்கள்
தீர்த்தமாய் பாலைக் குடித்துக் கொண்டிருக்க
அங்கே கன்றுக்குட்டி பசியுடன்
தாயின் அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறது
மனிதனுக்கு மட்டுமா
தாய் பிள்ளைப் பாசம்?

No comments: